தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 மே, 2015

இலங்கையின் கிழக்கு கரையில் நாகர் கி.மு.2 நூற்றாண்டில் ஆட்சி !

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்களின் அடிப்படையில் இப்பகுதியில் எட்டுக்கும் குறையாத நாகர் அரசர்களின் ஆட்சிக்கூடங்கள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் க.பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நகரின் தொல்லியல் கண்டுபிடிப்புகள் தொடர்பில் ஆராயும் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.
இலங்கையின் கிழக்கு கரையில் நாகர் கி.மு.2 நூற்றாண்டில் ஆட்சி செய்து வாழ்ந்தார்கள் என்பதற்கான தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட ஆதாரங்களுடன் விளக்கும் வகையில் இந்த நிகழ்வு இன்று மட்டக்களப்பில் உள்ள பேராசிரியர் சி.மௌனகுருவின் அரங்க ஆய்வுகூடத்தில் நடைபெற்றது.
இதன்போது மட்டக்களப்பில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட பொருட்கள் மற்றும் இப்பகுதியில் நாகர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான சான்றுகள் தொடர்பில் பேராசிரியரினால் விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, களுவாஞ்சிகுடி, நாவற்குடா, மாமாங்கம், வந்தாறுமூலை,வாகரை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது 40க்கும் மேற்பட்ட நாகர்களின் ஆதாரங்கள் கொண்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
இலங்கைக்கு விஜயன் வருகைக்கு முன்பாக கிழக்கு கரையினில் நாகர்கள் ஆட்சி அதிகாரங்களுடன் வாழ்ந்தார்கள், அவர்களின் நாகரிகம் வழிபாட்டு முறைகளின் ஆதாரங்கள் இங்கு பேராசிரியரினால் விரிவாக சமர்ப்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் தமிழ் மொழியிலேயே உள்ளதுடன் அறியமுடியாத, மறைந்து கிடந்த வரலாறுகள் தற்போது முகம்காட்டும் நிலை உருவாகிவருவதாக பேராசிரியர் பத்மநாதன் இங்கு தெரிவித்தார்.
குறிப்பாக கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தில் நாகர் இப்பகுதியில் வாழ்ந்துள்ளதுடன் அவர்கள் மணிநாகன் என்ற பெயரில் தெய்வ வழிபாட்டைக்கொண்டிருந்ததாகவும் இது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமன்றி வன்னிப்பகுதியிலும் கடந்த ஆறு மாதகாலமாக மணிநாகன் தொடர்பான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இவ்வாறான வரலாற்று தடையங்கள் காணப்படுவதாகவும் அவற்றினையும் வெளிக்கொணரும் வகையில் பொதுமக்கள் பங்களிப்பினை வழங்கவேண்டும் எனவும் எங்காவது வரலாற்று சான்றுகள் கிடைக்கப்பெற்றால் அது தொடர்பில் அறியத்தருமாறும் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.
இதேபோன்று தென்னிலங்கையிலும் பல பகுதிகளில் நாகர்கள் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறிப்பாக புத்தளத்தில் நாகர்களின் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை மறைக்கப்பட்டன.
1986ஆண்டும் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுசெய்யப்பட்ட நிலையில் அவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. அது தொடர்பில் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருந்தது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் தொல்லியல் ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக