தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, September 30, 2014

கொலு வைப்பது ஏன்?


நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்றுதேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.

மிகக் கொடிய அரக்கனாகிய மகிஷாசுரனை, துர்கை, லட்சுமி, சரஸ்வதி, உருக்கொண்டு போரிட்டு வெல்கிறாள் அன்னை பராசக்தி! அன்னையின் வெற்றியைக் கொண்டாடும் பத்தாவது நாளே விஜயதசமி. 
மகிழ்ச்சி பொங்கும் இத்திரு விழாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்கு மகத்தானது.
கலையம்சம் கொண்ட பொம்மைகளை கொலுப்படிகளில் வைத்து மகிழ்வர். சிறுமிகள், சிறுவர்கள், பூங்கா, அணைக்கட்டுகள், கிராமம், நகரம், இவற்றின் மாதிரிகளை கற்பனைக்கு ஏற்ப வடிவமைப்பர். இதனால் சிறுவர்களின் கற்பனைத் திறனுக்கு உற்சாகம் கிடைக்கிறது.
பெண்கள் தங்களுக்குத் தெரிந்தவர்கள், மற்றும் உறவினர்களை வீட்டிற்கு அழைப்பர்.
சிறுமிகளும், பெண்களும் பாடல்களை கொலுவிற்கு முன் பாடுவர். இசைக்கருவிகள்
வாசிக்கத் தெரிந்தோர் வாசிப்பர். சங்கீதக்கலை வளர்ச்சிபெற இம்மாதிரி உற்சாகமூட்டும் நிகழ்வுகள் மிக ஊக்கமளிக்கும். பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அன்பு கலந்த மரியாதையுடன் பிரசாதம் மற்றும் அலங்காரப் பொருட்களுடன் கூடிய தாம்பூலம்,மஞ்சள் குங்குமம் வழங்குவர்.
மகிழ்ச்சி பொங்கும் நவராத்திரியில் அன்னையின் அருளால் கல்வி, உடல்நலம், செல்வம், நட்பு, உற்சாகம் மற்றும் எல்லா சிறப்புகளையும் பெறுவோமாக!

No comments:

Post a Comment