தினமும் சாப்பிடும் உணவில் கறிவேப்பிலை சேர்த்தால், கண்களின் பார்வை சக்திக்கு நல்லது.
கறிவேப்பிலையும் ஒருவகை கீரைதான். அதில் வைட்டமின்- ஏ இருக்கிறது. கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிட்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படும்.
தற்போது இளம் வயதிலேயே நரைமுடி வருவதால், அத்தகையவர்கள் கறிவேப்பிலையை அதிகம் உட்கொண்டு வந்தால், நரைமுடி வருவதைத் தடுக்கலாம்.
அதிலும் கறிவேப்பிலையை சற்று வித்தியாசமாக குழம்பு போல் வைத்து சாப்பிட்டால் இன்னும் அருமையாக இருக்கும்.
மேலும் கறிவேப்பிலை குழம்பானது செய்த மறுநாள் சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும்.
குறிப்பாக இதனை சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான்.
தேவையான பொருட்கள்
புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு, கறிவேப்பிலை - 1/2 கப்,சாம்பார் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5-7 (நறுக்கியது), பூண்டு - 10-12 பற்கள் (நறுக்கியது), உப்பு - தேவையான அளவு, வெல்லம் - சிறு துண்டு, மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன், தாளிப்பதற்கு நல்லெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1/4 டீஸ்பூன் கடுகு, 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டீஸ்பூன் துவரம் பருப்பு, 1 டீஸ்பூன் சீரகம், 1 டீஸ்பூன் கறிவேப்பிலை.
செய்முறை
முதலில் கறிவேப்பிலையை நன்கு நீரில் கழுவி, மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்ற காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.
பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் புளி சாற்றினை ஊற்றி, அத்துடன் கறிவேப்பிலை பேஸ்ட், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, எண்ணெய் தனியாக பிரியும் வரை (குறைந்தது 15 நிமிடம்) நன்கு கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் அதில் வெல்லம் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு ரெடி!!!
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக