தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 16 அக்டோபர், 2014

ஓம்’ என்பது பிரணவ மந்திரம்!


ஓம்’ என்பது பிரணவ மந்திரம் என்பது இந்துகள் நம்பிக்கையாகும். பிரணவ மந்திரமே உலகம் தோன்றுவதற்கு முன் எங்கும் நிரம்பியிருந்ததாக கருதுகிறார்கள். அ + உ+ ம் என்பதன் இணைப்பே ஓம் ஆகும். அ என்பது முதல்வனான சிவனையும், உ என்பது உமையையும் குறிப்பதாகவும் கருதுகிறார்கள்.
ஓம் என்ற சொல்லில் அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்கள் பிணைந்திருக்கின்றன. இவை மூன்றும் மனிதனுடைய மூன்று உணர்வு நிலைகளைக் குறிக்கும், பிரம்மம் என்ற பரம்பொருளாகவே இருக்கும் நிலை இம்மூன்று நிலைகளையும், (அதாவது விழிப்பு நிலை, கனவு நிலை, தூக்கநிலை) தாண்டிய நான்காவது நிலை என்றும், அந்நிலை ஓம் என்ற உச்சரிப்பின் முடிவில் வரும் மவுனநிலை என்றும் மாண்டூக்கிய உபநிடதம் கூறுகின்றது.
ஓ+ம் = ஓம். ‘ஓ’ வின் உச்சரிப்பு குறைவாகவும், ‘ம்’ இன் உச்சரிப்பு நீண்டதாகவும் இருக்க வேண்டும். ஓம், ஓம், ஓம் என்று தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். சப்தமாக உச்சரிப்பதைக் காட்டிலும், மனதிலேயே உச்சரித்தல் நலம். ஓ என்று தொடங்கும்போது மனதில் தங்களுக்கு ஒரு இஷ்ட தேவதையோ அல்லது வேறு எந்த ஒரு பொருளையோ நினைக்க துவங்கிக் கொண்டால், ’ம்’ இல், அந்த நினைவினை தொடர வேண்டும்.இதோடு சேர்ந்து நாசிப்பயிற்சியும் செய்தால் மேலும் பயனுண்டு. மூச்சை உள்ளிழுக்கும் போது, மனதில் ‘ஓ’ வைத் துவக்கிக்கொண்டவாறு, தாங்கள் தேர்வு செய்த பொருளை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். அடுத்து மூச்சை வெளி விட்டவாறு ‘ம்’ மைத் தொடரவேண்டும். எண்ணத்திலும் நிலைநிறுத்திய பொருளை தொடர்ந்தவாறு.
இவ்வாறு தொடர்ந்து பயிற்சி செய்தால், உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும். இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத, காணவும் இயலாத ஒரு சூட்சமமான அலை வரிசையில் தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூட்சுமமான பிணைப்பினை உருவாக்குகிறது.
கோயிலுக்குச் சென்றால் சுவாமி சந்நிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர எல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக