தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஏப்ரல், 2014

மருத்துவ குணம் வாய்ந்த புதினா !



உணவே மருந்து, மருந்தே உணவு என்பது தமிழர்களின் பால பாடம். நமது முன்னோர் தங்களுக்கு வரும் பிணிகளை உணவில் மாற்றங்களை செய்வதன் மூலமே போக்கிக் கொண்டனர். இந்த வரிசையில் தமிழர்கள் உணவில் அடிக்கடி இடம் பெறும் ஒரு தாவரம் புதினா. மடிந்த விளிம்புகளுடன் கூடிய பச்சை பசேலென்ற இலைகளுடன் காணப்படும் புதினா அபாரமான மணமும், ருசியும் கொண்டது. புதினா ஒரு புதிரான தாவரமும் கூட.

புதினாவில் வயல் புதினா, கார்ன் புதினா, ஜப்பானிய புதினா, கோசி, பெப்பர் மின்ட் என்பன உள்பட 40 வகை புதினாக்கள் இருக்கின்றனவாம். இதில் ஏ.பி.சி வைட்டமின்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, இரும்பு, பொட்டாசியம், சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, புரதம் என்று பல சத்துக்கள் நிரம்பி காணப்படுகின்றன. இதில் உள்ள ஆண்டி ஆக்சிடன்ட் பொருட்கள் பெருங்குடல் புற்று நோயை தீர்க்கும் என்று மருத்துவ உலகம் கண்டறிந்துள்ளது.

ஐந்து ரூபாய்க்கு கைநிறைய கிடைக்கும் புதினாவின் மருத்துவ சக்தி அபாரமானது. புதினாவை உணவில் அனைத்து கீரைகள் மற்றும் காய்கறிகளுடனும் சேர்த்து பயன்படுத்தலாம். பத்து புதினா இலைகளை கழுவி பச்சையாக அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது புதினா இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அருந்தலாம். புதினா, வயிற்று வலி, அஜீரணம், வாயுத் தொல்லை, மலச் சிக்கல், உப்புசம், வயிற்றுப் போக்கு உள்பட பல வயிற்றுக் கோளாறுகளை தீர்த்து விடுகிறது. இதன் தண்டுகளையும், இலைகளையும் சேர்த்து தண்ணீரில் கொதிக்க வைத்து, அதில் தேன், எலுமிச்சை சாறு பிழிந்து இரவிலும், அதிகாலையிலும் குடித்து வந்தால் வயிற்றில் உள்ள கிருமிகள், புழுக்கள் நீங்குவதுடன், காய்ச்சல், நீர்க்கடுப்பு அகலும். செரிமானம் ஆவதில் பிரச்சினை இருந்தால் புதினா சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் செரிமானக் கோளாறு நீங்கி விடும்.

ஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு புதினாச் சாறு அளித்து வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகி குழந்தைகள் வீரிட்டு அழுவது நிற்கும். புதினாவை அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகப்பரு, வீக்கம், தீப்புண், சொறி, சிரங்கு நீங்கும். புதினாவில் இருந்து தயாரிக்கப்படும் மென்தால் என்ற எண்ணெய் தலைவலிக்கு நல்லது. புதினாவில் இருந்து பற்பசையுடன், காதுவலி, வீக்கம், சைனஸ், மூட்டுவலி ஆகியவற்றுக்கான மருந்துகளும் தயாரிக்கப்படுகின்றன.

புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீ வைத்து, நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்தால் வலி குறையும். மூட்டு வலிக்கு இந்த முறை சிறந்த பயனளிக்கும். புதினாவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் ஊளைச் சதை குறைந்து ‘சிலிம்’ ஆகலாம். புதினா பற்றிய ஆராய்ச்சிகள் இன்றும் உலக அளவில் நடந்த வண்ணம் உள்ளன. இதன்மூலம் புதினாவை பற்றிய பல புதிர்களை அவிழ்க்க வாய்ப்பு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக