தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, April 28, 2014

ஒரு பெண்ணுக்குப் பல கணவர்களா? - ஆதிபர்வம் பகுதி 198!!



வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் அனைவரும், பாஞ்சாலர்களின் சிறப்பு வாய்ந்த மன்னனும், மற்றும் ஏனையோரும் எழுந்திருந்து அந்தச் சிறப்பு வாய்ந்த முனிவர் கிருஷ்ணருக்கு (துவைபாயணருக்கு) {வியாசருக்கு} மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தனர். அந்த உயர் ஆன்ம முனி, அவர்கள் அனைவருக்கும் பதில் வணக்கம் தெரிவித்து, அனைவரின் நலனையும் விசாரித்தபடி தங்கத் தரைவிரிப்பில் கீழே அமர்ந்தார். அளவிடமுடியா சக்தி கொண்ட கிருஷ்ணரால் (துவைபாயணரால்)  {வியாசரால்} கட்டளையிடப்பட்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர்கள் தங்கள் விலையுயர்ந்த ஆசனங்களில் அமர்ந்தனர்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்த பிரிஷதனின் மகன் {துருபதன்} இனிமையான குரலில் அந்த சிறப்பு மிகுந்த முனிவரிடம் தனது மகளின் {திரௌபதியின்} திருமணம் குறித்துப் பேசினான். "ஓ சிறந்தவரே, பாவத்தின் கறை படியாமல் ஒரு பெண் எப்படி பல மனிதர்களுக்கு மனைவியாக முடியும்? இது குறித்து எனக்கு உண்மையைச் சொல்லுங்கள்" என்று கேட்டான். இவ்வார்த்தைகளைக் கேட்ட வியாசர், "ஓ மன்னா, இந்த நடைமுறை பயன்பாட்டுக்கும் வேதங்களுக்கும் எதிராக இருப்பதால் வழக்கற்றுப் போயிற்று. இருப்பினும் நான், இவ்விஷயத்தில் உங்கள் ஒவ்வொருவர் கருத்தையும் கேட்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.

முனிவரின் இவ்வார்த்தைகளைக் கேட்டு, முதலில் துருபதன் பேசினான், "பயன்பாட்டிலும் வேதங்களாலும் எதிர்க்கப்பட்டிருக்கும்போது, இந்த நடைமுறை பாவகரமானது என்பது எனது கருத்து, ஓ அந்தணர்களில் சிறந்தவரே, பலர் கூடி ஒரு மனைவியை வைத்திருப்பதை நான் எங்கும் கண்டிலேன். பழங்காலத்தில் இருந்த சிறப்பு வாய்ந்தவர்கள் கூட இது போன்ற பயன்பாட்டை வைத்திருக்கவில்லை. ஞானமுள்ளவன் பாவம் செய்யக்கூடாது. ஆகையால், நான் இவ்வழியில் செயல்பட எனது மனதைத் தயார் செய்ய முடியாது. இந்த நடைமுறை எனக்கு சந்தேகத்திற்கிடமான அறமாகவே எனக்குப் படுகிறது" என்றான் {துருபதன்}.

துருபதன் சொல்லி முடித்ததும், திருஷ்டத்யும்னன், "அந்தணர்களில் காளையே, ஆன்மிகத்தைச் செல்வமாகக் கொண்டவரே, ஓ அந்தணரே, நல்ல மனநிலையில் உள்ள ஒரு அண்ணன், தனது தம்பியின் மனைவியை எப்படி அணுக முடியும்? அறவழிகள் நுட்பமானவை {தர்மத்தின் பாதைகள் புதிரானவை}, ஆகையால், அதுகுறித்து நாம் அறிவதில்லை. ஆகையால், நாம் அறத்திற்கு உகந்தது எது, எது இல்லை என்பதைச் சொல்ல முடியாது. ஆகையால், மனசாட்சியுடன் நாம் அத்தகு செயலைச் செய்ய முடியாது. உண்மையில், ஓ அந்தணரே, என்னால், 'திரௌபதி, ஐந்து சகோதரர்களுக்கு பொது மனைவியாக இருக்கட்டும்' என்று சொல்ல முடியவில்லை" என்று பேசினான் {திருஷ்டத்யும்னன்}.

பிறகு யுதிஷ்டிரன், "எனது நாக்கு பொய்மையைப் பேசுவதில்லை. எனது இதயம் பாவமெனப்பட்டதை நோக்கி உயராது. ஒன்றை எனது இதயம் அங்கீகரிக்கும் போது, அது பாவகரமாக இருக்க முடியாது. புராணங்களில் நான் ஜடிலை {Jatila} என்ற பெண்ணைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கோதம குலத்தைச் { race of Gotama} சார்ந்த அந்த அறம்சார்ந்த மங்கையரில் முதன்மையானவள் {ஜடிலை}, ஏழு முனிவர்களைத் திருமணம் செய்தாள். அதே போல ஒரு துறவியின் மகள், மரத்தில் பிறந்தவ அவள், முன்பொரு காலத்தில் பிரசேதர்கள் என்ற ஒரே பெயரையுடைய பத்து சகோதரர்களைத் திருமணம் செய்தாள். அவர்கள் அனைவரும் ஆன்மிகத்தின் உச்சத்தை அறிந்த ஆன்மாக்களாவர். ஓ அறவிதிகள் அனைத்தையும் அறிந்தவர்களில் முதன்மையானவரே, பெரியோருக்குக் கீழ்ப்படிதல் நன்மை பயக்கத்தக்கது என்று சொல்லப்படுகிறது. அப்படிச் சொல்லப்படும் பெரியோர்களில் தாயே முதன்மையானவள் என்பது நன்கு அறியப்பட்டது. அவளே பிச்சையாக அடைந்த திரௌபதியை அனைவரும் அனுபவிக்குமாறு கட்டளையிட்டாள். இதன் காரணமாகவே, ஓ அந்தணர்களில் சிறந்தவரே, இச்செயலை நான் அறம் சார்ந்ததாகக் கருதுகிறேன்" என்று பேசினான் {யுதிஷ்டிரன்}.

பிறகு குந்தி, " யுதிஷ்டிரன் சொன்னது போலவே இச்செயல் அறம்சார்ந்ததுதான். ஓ அந்தணரே, எனது வார்த்தை பொய்த்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன். பொய்மையிலிருந்து நான் எவ்வாறு தப்பிப்பேன்?" என்று சொன்னாள்.

அனைவரும் பேசி முடித்த பிறகு, வியாசர், "ஓ இனிமையானவளே, இதுவே நிலைத்த அறமாக இருக்கும் போது, நீ பொய்மையின் விளைவுகளிலிருந்து எப்படித் தப்பிப்பாய்? ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதா}, உங்களுக்கு அனைவரின் முன்னிலையிலும் நான் இந்தப் பேச்சுவார்த்தையை {discourse = பிரசங்கத்தை} நடத்த மாட்டேன். ஆனால், நீ மட்டும் தனியாக அமர்ந்து, இந்த நடைமுறை எப்படி நிறுவப்பட்டது? இதுவே பழமையானதும் நிலைத்ததுமாக ஏன் மதிக்கப்படுகிறது? என்பதைப் பற்றி நான் சொல்லப் போவதைக் கேள். யுதிஷ்டிரன் சொன்னது அறத்திற்கு கட்டுப்பட்டது என்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை" என்றார்.

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு அந்த சிறப்பு வாய்ந்த வியாசர் - குரு துவைபாயணர் - எழுந்து, துருபதனின் கையைப் பற்றி ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்றார். பாண்டவர்களும், குந்தியும் பிரிஷ்தனின் குலத்தில் வந்த திருஷ்டத்யும்னனும் அங்கேயே அமர்ந்து கொண்டு, வியாசர் மற்றும் துருபதனின் வரவுக்காகக் காத்திருந்தனர். அதே வேளையில் துவைபாயணர் {வியாசர்} அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்}, எப்படி பலபதியுடைமை {Polyandry} என்ற நடைமுறை பாவகரமாகக் கருதப்பட முடியாது என்பது குறித்து பேச்சுவார்த்தை {discourse = பிரசங்கம்} நடத்தினார்.
- See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section198.html#sthash.PiYZnwp3.NV1sB0JN.dpuf

No comments:

Post a Comment