தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 12 அக்டோபர், 2015

நவராத்திரி பூஜை வரலாறும் , விரத முறையும்:


தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர் களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித் திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) ரிடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப்பது மையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒரு வரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.
அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.
அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணை யிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி.
முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழுமனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதை கொண்டாடும் தினம். நவராத்திரி பூஜையை நிறைய பேர் சேர்ந்து சமஷ்டி பூஜையாகச் செய்யலாம். எப்போதுமே கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். நவராத்திரியின் போது காலை யில் பூஜையை அனுஷ்டானங்களுடன் செய்ய வேண்டும். தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு அத்யாயம் அல்லது குறிப்பிட்ட வழிமுறைப்படி பாராயணம் செய்ய வேண்டும்.
முதல் மூன்று நாட்கள், துர்க்காஷ்டகமும், இரண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி அஷ்டோத்திரமும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பூஜைக்குப் பயன்படுத்தும் பூக்களில் வாடல், அழுகல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல், வெற்றிலையும் அழுகலோ அல்லது கோணலாகவோ இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். பாக்கும் நல்ல பாக்காக இருக்க வேண்டும். ஏனென்றால், தேவிக்கு நாம் சிறப்பானதைத்தான் படைக்க வேண்டும். பூஜை செய்வது நம் வசதியைப் பொறுத்தது. பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம் அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள், இந்த விருந்து உபசாரத்தைச் செய்யலாம்.
இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம். அதே போல், ருது அடையாத கன்னி பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம் பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப்பலனும் கிடைக்கும்.
மூல நட்சத்திரத்தன்றே சரஸ்வதியை ஆவாஹனம் செய்ய வேண்டியது முக்கியம். சரஸ்வதியை விக்ரகவடிவத்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ ஆவாஹனம் செய்யலாம். ஆத்மார்த்தமாக, மனம் ஒப்பி பூஜை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நமக்கு தேவிதான் கொடுக்கிறாள். அவளுக்குச் செலுத்தும் சிறு நன்றிதான் இந்த நவராத்திரி பூஜை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக