சினிமா கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம் தொடர் ஒன்றை எழுதி வருகிறார். இத்தொடரில் தேவர் பிலிம்ஸ் தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்ன ரகசியம் என்று கலைஞானம் எழுதியிருப்பதாவது,
இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு வெற்றி கிடைத்ததும், மருதமலை சென்ற தேவர் உண்டியலில் நோட்டுக் கட்டுகளைப் போட்டுவிட்டு, முருகனுக்கு நன்றி சொல்லி அபிஷேகமும் செய்துவிட்டு பிரசாதத்துடன் சென்னை திரும்பியுள்ளார்.
முதல் வேலையாக எம்.ஜி.ஆரைப் 'பார்த்து "நீங்க ஜெயிக்கணும்னு முருகனை வேண்டிக்கிட்டேன். அவனும் ஜெயிக்க வச்சிட்டான்''' எனச் சொல்லி பிரசாதத்தைக் கொடுத்திருக்கிறார் தேவர்.
அதை வாங்கிக்கொண்ட எம்.ஜி.ஆர் தேவரை தனியறைக்கு அழைத்துச் சென்று வெகுநேரம் பேசியிருக்கிறார்.
அப்போது தனது அரசியல் குறித்து தேவரிடம் எம்.ஜி.ஆர். சொன்னதை, தேவர் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அண்ணா.. ஒரு முக்கியமான விடயத்தை உங்ககிட்டச் சொல்றேன்ணே. மக்கள் என்மேல் அபரிமிதமான நம்பிக்கை வச்சிருக்காங்க. மக்களுக்கு... குறிப்பா "ஏழைகளுக்கு நல்லதச் செய்யனும், நான் சினிமா மூலம் சொல்றதையெல்லாம் மக்கள் நம்புறாங்க.
"எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தா நல்லது செய்வாருனு நினைக்கிறாங்க. அப்படிப்பட்ட மக்களுக்கு, அவங்களோட எதிர்பார்ப்புகளுக்கு நான் ஏதாவது செஞ்சாகணும்.
அப்பதான் என்னை நம்பின மக்களை நான் ஏமாத்தியதாக இருக்காது. "இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சேன். தனியாக நான் ஒரு கட்சியைத் தொடங்கினால் தான் மக்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யமுடியும்கிற அரசியல் ஆசையை ரகசியமா என்னோட மனசில் வளர்த்துக்கிட்டு வந்தேன்.
இருந்தாலும்... அரசியலுக்குள்ள முழுமையா வந்தா, மக்கள் முழுமையா ஆதரிப்பாங்களா? என்பதை மேலும் உறுதி செய்து கொள்வதற்காக ஒரு முடிவெடுத்தேன்.
அந்த முடிவு என்னன்னா... தெலுங்கில் என்.டி.ஆர். நடிச்சு பெரிய வெற்றிபெற்ற படம் ஒன்றைப் பார்த்தேன். அது அரசியல் கத, என்.டி.ஆர். நகராட்சி தேர்தலில் ஜெயித்து தலைவராகிற கதை.
அந்தக் கதையை வாங்கி, நாமே நடிக்கலாம் என்று முடிவெடுத்து நாகி ரெட்டியாரை சந்திச்சு, என் விருப்பத்தைச் சொன்னேன்.
"அந்தப் படத்தை நீங்களே எடுங்க'னு ரெட்டியார் சொன்னார். "நீங்க எடுத்தாத்தான் சரியாவரும்னு நான் சொன்னேன், அதற்கு ரெட்டியார் சம்மதிச்சார். இரவு பகலா விடாம படப்பிடிப்பு நடத்தி படத்தை எடுத்து முடிச்சிட்டேன். ரிலீஸும் பண்ணியாச்சு. ரெட்டியாரே... நாம ரெண்டுபேரும் மட்டும் மேகலா திரையரங்கு போய் ஈவ்னிங் ஷோ பார்ப்போம்.
நாம திரையரங்குக்கு வர்ற விடயம் மேனேஜ ருக்கு மட்டும் தெரிஞ்சாப் போதும்'னு சொன்னேன். திட்டமிட்டபடி படம் ஆரம்பிச்ச பிறகு நானும், ரெட்டியாரும் உள்ள போனோம்.
திரையரங்கின் கதவருகில் நானும், ரெட்டியாரும் நின்னுக்கிட்டு படம் பார்த்தோம். நகராட்சி தேர்தலில் நான் ஜெயித்துவிட்டு வரும் காட்சியில்... ‘"வாங்கய்யா வாத்யாரய்யா'' பாடலை ஜெயலலிதா பாட ஆரம்பிச்சதும்... கரகோஷம், விசில், கைதட்டல், ஆரவாரம்னு திரையரங்கே இடிந்து விழுமோ... என்கிற அளவுக்கு மக்கள் அமர்க்களப்படுத்தினாங்க.
கரகோஷம் நிற்கவே இல்லை. அந்த சந்தோஷத்தில் என் இதயத்துடிப்பே நின்றுவிடும்போல் இருந்தது. "என் மேல உயிரையே வச்சிருக்க இந்த மக்களுக்கு என் உயிரையே அர்ப்பணிக் கிறதுனு அப்ப முடிவு பண்ணினேன்.
ரசிகர்கள் திரும்ப வும் அந்தப் பாடலைப் போடச் சொன்னார்கள். மீண்டும் ஜனங்க குதூகலிச்சாங்க. அப்போது நான் ரெட்டியாரைக் கட்டிப்பிடித்து... "ரெட்டியாரே... நான் ஜெயிச்சிட்டேன்'னு சொல்லி கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் அழுதே விட்டேன்.
அந்த "நம்நாடு''படம் எனக்குக் கொடுத்த ஊக்கத்தால் ‘"தமிழ்நாடு நம்நாடுதான்''என்று முடிவு செய்தேன். அன்று மக்கள் கொடுத்த உற்சாகம்தான்... இன்று திண்டுக்கல் தேர்தலில் துணிந்து இறங்கினேன்.
"ஜெயிச்சிட்டேன்'' இப்படி, தான் தனிக்கட்சி தொடங்கியதன் காரணங்களை தேவரிடம் சொல்லியிருக்கிறார் எம்.ஜி.ஆர் என்று நக்கீரன் வாரம் இருமுறை இதழில் கலைஞானம் எழுதியுள்ளார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக