தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 25 நவம்பர், 2016

திருமணமாகப்போகும்தன்மகளுக்குஒரு தந்தையின் அறிவுரை :




வழக்கமாக மணப்பெண்ணிற்கு அம்மா மட்டும் தானே அறிவுரை கூறுவார்கள், பின் ஏன் புதிதாய் உன் அப்பா உனக்கு அறிவுரை கூறுகிறேன் என்று உனக்கு வியப்பாக இருக்கிறதா? செல்லமே!

அப்பாவும் மனம் திறந்து உன்னிடம் சில விஷயங்களை கூற விரும்புகிறேன், உன் எதிர்கால மணவாழ்க்கையில்...
ஏதோ ஒரு தருணத்தில் உபயோகமாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையில்..

1.என் அப்பாவின் நேர்மை, என் அப்பாவின் திறம்பட முடிவெடுக்கும் திறன், என் அப்பா…என அடுக்கடுக்காக நீ உன் அப்பாவிற்கு சூட்டும் கிரிடமும் , என்
அப்பாதான் ‘பெஸ்ட்’ என்ற எண்ணமும் உன் மனதின் ஆழத்தில் மட்டுமே வைத்துக்கொள்.

வார்த்தைகளில் வெளிப்படுத்தி ‘உன்னவரின்’ மனதில் எரிச்சலை உண்டு பண்ண வேண்டிய அவசியம் இல்லை
.உன் கணவரிடம், “என் அப்பா நேரம் தவற மாட்டார்”,” என் அப்பா அதிகாலையில் உடற்பயிற்சி செய்வார்” என்று அப்பா புராணம் பாடாதே கண்ணம்மா….
உன் அப்பாவும் ஒரு காலத்தில் காலை 8 மணி வரை தூங்கிய சோம்பேரி தான்.

2. உன் பிடிவாதங்களை எல்லாம் கோபத்துடன் கையாளாமல் அப்பா பொறுத்துக்கொண்டது போல், உன்
கணவரும் சகித்துக்கொள்வார் என்று எதிர்பார்க்காதே.

என் வயதிற்கே உரிய பொறுமை மற்றும் உன் மீதான கண்மூடித்தனமான பாசமும் என் கோபங்களை மறைத்திருக்கலாம்.

அவரும் உன் பிடிவாதங்களுக்கு பின்னிருக்கும் குழந்தைதனத்தை புரிந்துக் கொள்ள அவகாசம் கொடு.

முக்கியமாக உன் பிடிவாதங்களை தளர்த்தி, அப்பாவிற்கு பெருமை சேர்க்கப்பார்.

3.சிறு சிறு வாக்குவாதங்கள், கருத்து வேறுபாடு உங்கள் இருவருக்குள்ளும் வர தான் செய்யும்.அச்சமயங்களில் எல்லாம், “நான் என் அப்பா வீட்டிற்கு போகிறேன் “,”
எனக்கு என் அப்பா இருக்கிறார் ” என்ற வசனங்களை பேசி உன் மேல் அவருக்கு கசப்பு வர வைத்து விடாதே.

முடிவுகள் எடுக்கும்போது வழமை போல
அப்பாவிடம் கேட்டுசொல்றன் என்று வாய்தவறிக்கூட கூறிவிடாதே... இனிமேல் நீங்கள் இருவரும்தான் எதிலும் முடிவு எடுக்கனும்.

உன் கணவர் தான் இனி உன் உலகம் என்பதை அவருக்கு புரிய வை. நீ அவருக்கு கொடுக்கும் முக்கியத்துவமும், மரியாதையும் அவர் மனதில் உன்னை சிம்மாசனம் போட்டு உட்கார வைக்கும்.

ஆண்களின் கோபம் கூட ஒருவிதத்தில் அன்புதான்... அதனால் நீயும் திருப்பி கோபப்படாதே....

உன் அம்மாவின் சகிப்புத்தன்மை தான் என்னை பல இடங்களில் மனிதனாக மாற்றியது... அதேபோல் நீயும் சகிப்புத்தன்மையை வளர்க்கவேண்டும்.

சுருக்கமாக கூற வேண்டுமானால்….
*அப்பா புராணம் பாடாதே.
*அப்பாவோடு ஒப்பிடாதே .
*’அப்பா செல்லம் ‘ என்ற பட்டம் பயன் தராது .

*அப்பாக்கு கொடுத்த கிரிடத்தை அவருக்கும் கொடு.

22 வருடங்கள் உன் கரம் பிடித்து நான் கற்றுக்கொடுத்த நற்பண்புகளை,இனி மேல் உன் கணவரின் கரம்கோர்த்து வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் காட்டுவதில் நிரூபித்துக் காட்டு.

நீடுடி வாழ வாழ்த்துகள்….!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக