தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 11 நவம்பர், 2016

நீங்கள் மாமியாருக்கு நல்ல மருமகளாக இருக்கிறீர்களா.?



திருமணமாகி புகுந்த வீடு செல்லும் பெண்ணிற்கு பெண்ணின் தாய் பிள்ளையைப் பெற்ற அவர்களும் உன் பெற்றோர், அனுசரித்து நடக்க வேண்டும் என்று அன்புடன் போதிக்க வேண்டும்.

துர்போதனை கூடாது. புகுந்த வீட்டில் அடியெடுத்து வைக்கும் போதே அந்தப் பெண்ணிற்கு மாமியாரை இன்னொரு தாயாக பாவிக்கத் தோன்ற வேண்டும்....

மாமியார் என்றாலே ராட்சஸி, குற்றம் குறைகள் கூறுபவர், திமிர் பிடித்தவர் என்ற தப்பான எண்ணங்களை மனதிலிருந்து அகற்றி விட்டே அவரிடம் பழக ஆரம்பிக்க வேண்டும்.

வயதாக ஆக பெரியவர்களுக்குக் குழந்தை மனமும் பிடிவாத குணமும் அதிகமாகும். அதற்கேற்ப அனுசரித்து மருமகள் பழக வேண்டும்.

. மாமியார் குடும்ப வழக்கம், பழக்கங்கள், சமையல் போன்ற அனைத்தையும் அவரிடம், 'அத்தை, எனக்குச் சொல்லித் தாங்க' என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். இவர் என்ன பெரிய ஆளா? என்று அகந்தையுடன் தான்தோன்றித்தனமாக நடக்கக் கூடாது.

. நிறைய மாமியார்களுக்கு மருமகளைக் கண்டால் பிடிக்காததன் காரணம் நேற்று வந்தவள் நம் மகனைப் பிரித்துக் கொண்டு சென்று விடுவாளோ என்ற அச்சமும் இவள் நம்மை வெளியில் தள்ளி விட்டால் நம் நிலையென்ன என்ற பாதுகாப்பில்லாத உணர்வும் தான். அதற்கு மருமகள் தான் நம்பிக்கையும் தெளிவும் பிறப்பிக்க வேண்டும்.

மாமியாரை வயதான தோழியாக நினைத்துப் பார்க்க வேண்டும். திருமணமாகி வேலைக்குச் செல்பவரானாலும் படிப்பவரானாலும் தன் அலுவலகத்திலோ கல்லூரியிலோ நேரிட்ட சுவையான அல்லது கசப்பான நிகழ்ச்சிகளைப் பங்கு போட்டு கொண்டால் மாமியாருக்கு மன ரீதியாக மருமகள் மேல் நம்பிக்கை வரும்.

. மாமியாரின் அனுபவமும் திருமண வாழ்க்கையின் வயதும் தான் மருமகளின் வயது என்பதை உணர்ந்து பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பண்டிகை காலங்களில் கணவரும் மனைவியும் குழந்தைகளுமாகக் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

மாமியாரின் நல்ல குணங்களையும் அவர் உங்கள் கணவரை வளர்க்க பட்ட கஷ்டங்களையும் கேட்டு அவரை உயர்த்திப் பேசுங்கள், அது உங்களைப் பற்றிய மதிப்பீட்டை உணர்த்தும்.

. மாமியாரின் சமையலையும் வீட்டை நிர்வகிக்கும் திறனையும் மாமனாரை அனுசரித்து அவர் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் பாராட்டுங்கள். பாராட்டிற்கு உருகாத உள்ளங்களே கிடையாது. மருமகளின் பாராட்டிற்கு இன்னும் அந்தத் தாயுள்ளம் ஏங்கும்.

பிறந்த வீட்டுப் பெருமைகளை மாமியாரிடம் அடுக்காமல் புகுந்த வீட்டுப் பெருமைகளைத் தொலைபேசியிலோ நேரிலோ மருமகள் தன் பிறந்தகத்தில் உரையாடுவது நல்ல பலன் தரும். அதற்காக உங்கள் பிறந்த வீட்டை விட்டுக் கொடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் உங்கள் புகுந்த வீட்டை உயர்த்துவது உங்கள் பிறந்தகத்தின் பெருமைகளைத் தானாகவே எடுத்துக் காட்டும்.

. உங்கம்மா அதைப் பண்ணினாங்க, உங்க தங்கச்சி இதைப் பண்ணினா என்று வேலைக்குப் போய் விட்டு வந்த கணவரை பாடாபாடு படுத்தாதீர்கள். இப்படி நீங்கள் சொல்வதை அன்புக் கணவர் மறு நாளே தன் தாயிடம் வெளிக்காட்டினால் உங்களுக்குதான் தான் கெட்ட பெயர்.

சில மாமியார்கள் மரும்கள்கள் என்ன தான் சந்தனமாக இழைத்தாலும் அவர்களை மனதாரப் புகழ மனம் வருவதில்லை. இருக்கட்டும்? உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். வார்த்தைகளாகக் கூறா விட்டாலும் ஆத்மார்த்தமாக நீங்கள் செய்யும் பணிவிடைகளை உணருவார்கள். அது போதுமே உங்களுக்கு.

பிறந்த வீட்டு உறவுகளை எப்படி கவனிக்கிறீர்களோ எப்படி உங்கள் இல்லத்தினர் கவனிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே போல் புகுந்த வீட்டு உறவுகளையும் தாங்குங்கள்.

மருமகள் வெளியில் சாப்பிடுவது என்றால் வயதான மாமியார், மாமனார் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு என்ன வேண்டும் என்று அக்கறையுடன் தொலைபேசியில் விசாரித்து அந்த சிற்றுண்டியை வாங்கி வருவது உங்கள் மீது உள்ள அன்பை அதிகமாக்கும்.

குழந்தைகளை வளர்க்க பார்த்துக் கொள்ளும் வேலைக்காரியைப் போல் நினைக்காமல் அவர்களால் முடியாத அன்று அவர்களுக்கு ஓய்வு கொடுத்து நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

. குழந்தைகளிடம் நீங்கள் உங்கள் மாமனார், மாமியாரைப் பற்றி உயர்வாகக் கூறுவது நல்லது. 'உங்க பாட்டி தான் அந்த காலத்து கதை சூப்பரா சொல்லுவாங்க, போய் கேளுங்க' என்பதும் பாட்டி, தாத்தாவை மதிக்காமல் பேசும் பிள்ளைகளைக் கண்டிப்பதும் மாமியார் மனதில் நிரந்தர இடம் பிடிக்கவும் உதவும்.

பெரிய முடிவுகள் எடுப்பதானால் பெரியவர்களைக் கேட்டே முடிவெடுக்கவும். நல்லது, கெட்டது என்ன? எந்த நேரத்திலே எது செய்யலாம்? எது கூடாது போன்றவற்றை அவர்கள் அன்புவ ரீதியாகக் கூறுவார்கள்.

பண்டிகை காலங்களில் மாமியார், மாமனாரையும் கடைகளுக்கு அழைத்துச் சென்று பிடித்த துணிமணிகள், தின் பண்டங்கள் வாங்கித் தருவது குடும்பத்தின் உறவைப் பலப்படுத்தும்.

மாமியாருக்கும் மாமனாருக்கும் இனிய பரிசுகள், அவர்கள் மனம் கவர்ந்த சிறு சிறு பொருட்கள் வாங்கி அசத்துவதும் நல்லது.

சிக்கனமாக இருக்கும் மருமகளைத் தான் எல்லா மாமியாருக்கும் பிடிக்கும். அவர்கள் மனம் கோணதவாறு சிக்கனமாக இருப்பது குடும்பத்திற்கே நல்லது.

. சிடுசிடுவென மாமியாரிடம் எரிந்து விழாதீர்கள். சமைப்பதை ஆத்மார்த்தமாக உள்ளன்புடன் செய்து முடிந்தால் பக்கத்தில் அமர்ந்து பரிமாறுங்கள்.

. மாதா மாதம் மாமியாருக்கென்று தனியே பணம் செலவிற்குக் கொடுக்கவும். அவர்களுக்கும் தனிப்பட்ட தேவைகளும் ஆசைகளும் இருக்குமல்லவா?

. மாமியாரைப் பற்றி எந்த அவதூறும் வம்பும் பக்கத்து வீட்டிலோ தோழிகளிடமோ வம்பு பேசாதீர்கள்,

. மாமியாருக்குப் பிடித்த விஷயங்கள், குறைகள் என்னென்ன என்பதைக் கண்டறிந்து அவர்களின் ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள். உதாரனமாக ஏதேனும் கோவில்கள் சென்று வர நெடு நாளைய ஆசையாக இருக்கலாம்.

. வெளிநாடு வாழ் மருமகள் என்றால் மாமியாருக்கு அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வது நல்ல பலன் அளிக்கும். முடிந்தால் அவர்களை உங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களைச் சமைக்க விடாமல் ஓய்வளித்து ஊரைச் சுற்றிக் காட்டலாம்.

தாத்தா, பாட்டியின் அன்பும் அருகாமையும் அரவணைப்பும் கிடைக்க உங்கள் குழந்தைகள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

. உங்கள் கணவர் மனதில் இடம் பிடிக்க அழகாக இருந்து அன்பாக நடந்து நன்றாக சமைத்தால் மட்டும் போதாது. மாமியாரிடம் நடக்கும் முறை உங்கள் கணவருக்கும் உங்கள் மேல் பாசமும் நல்ல அபிப்பிராயமும் உண்டாக வழி வகுக்கும

.மாமியார்களிடம் அன்பாகப் பழகிப் பார்த்தவர்களுக்கு அவர்களது குழந்தையுள்ளம் புரியும். அன்பிற்கு ஏங்கும் அந்த உள்ளங்களுக்கு அன்பைக் கொட்டிக் கொடுங்கள். பெண்ணிற்குப் பெண்ணே எதிரி என்ற கருத்தை உடைத்துக் காட்டுங்கள். மாமியார் மெச்ச வாழ்ந்து காட்டுங்கள்.

உங்கள் மாமியார்- மருமகள் சண்டைகள் கோபங்களை உங்கள் அம்மா, அப்பாவிடம் சொல்லி சின்ன சின்ன விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.

. உங்கள் மேல் உங்கள் கணவர் காட்டும் அன்பும் மரியாதையும் நீங்கள் வாழும் இந்த வாழ்க்கையும் கிடைக்கக் காரணமே உங்கள் மாமியார் என்ற வாழும் தெய்வம் என்பதை மறந்து விட வேண்டாம்.

'எண்ணம் போல் வாழ்வு' என்பார்கள். மாமியாரைப் பற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை இந்த நொடியிலே அகற்றி விடுங்கள். அவரது நிறைகளைப் பாருங்கள். குறைகளைப் பெரிதாக்காதீர்கள். தாயாக நேசியுங்கள்.

உலகத்தமிழ் மங்கையர் மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக