
எழுதமிழா!! கண் விழிதமிழா!!
========================
தனிமனிதன் புனிதனாய் இருப்பின், அவன் வரலாற்றில் மிக முக்கிய இடத்தில் போற்றப்படுகிறான். அத்துனைப் பேரும் இடம் பிடிப்பதில்லை. ஆகையால்தான் மீதி உள்ளவர்கள் இனமாக அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகவே தனக்கெனக் கலை, பண்பாடு என்ற வட்டம் வரைந்தனர். இதில் மிக முக்கியமான இடத்தை பிடித்தவர்கள்தான் தமிழர்கள்.
உலகம் எப்படி உருவானது? அதன் மூலவிதி எதில் தொடங்கியது? இறந்தவுடன் எங்கு போகிறான்? கடவுளிடமா? இயற்கையிடமா? அல்லது மாண்டே கிடக்கிறானா? சித்தர்கள் பிறப்பு, இறப்பு, ஆன்மீகம், நாத்தீகம், வானவியல், மருத்துவம், உலகம் இயங்கும் விதி அனைத்தையும் எப்படி அறிந்தார்கள் என்பதைப் பற்றி சொல்ல வரவில்லை. ஆனால் ஏன் அறியத் துடித்தார்கள் என்பதில் மிக முக்கிய அம்சம், அவர்களுக்குப் பின் வருபவர்கள் சுமையைக் குறைத்து, தான் நிறுத்தியதில் தொடர்ந்து ஆய்வு செய்து மேலும் பல படிகள் சிறந்து ஆய்வு மேற்கொண்டு உண்மை உணர்ந்த நிலை அடைய வேண்டும் என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.
தமிழர்களுக்கென அதில் தனி வரலாறு உண்டு. அரசன் ஆண்டான், கலைப் படைப்புகளுக்கு காரணமானான். புலவர்களும் கலைஞர்களும் இயல், இசை, நாடகம் என தமிழை வகைப்படுத்தி, மொழியை மெருகேற்றினார்கள். மக்கள் படைகளாகவும், படைப்பாளியாகவும் துணை நின்றார்கள். ஒரு இடத்தில் ஆண்டவன் மற்ற இடத்தில் ஆள்பவனுக்கு பகையாக இருந்தாலும், படைப்புகளும் எண்ணங்களும் அவர்களுக்கு ஒன்றுதான். போரிட்டுக் கொண்டாலும் அறம் தவறியதில்லை. வேட்டையாடுதல் ஒரு கலைதான். ஆனால், அதிலும் விதி உண்டு. மிருகங்கள் சினைகொண்ட போதும், காயம் மற்றும் நோய் கொண்ட போதும், புணர்ச்சியின் போதும் கொல்வதில்லை. ஓடவிட்டு விரட்டி வேட்டையிடுதலே வீரத் தமிழரின் எழுதாதக் கோட்பாடு. இப்படியானதுதான் தமிழர்களின் தனிச் சிறப்பு பண்புகள்.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்களின் மரக்கலம் (கப்பல்) செலுத்திய வரலாறு இன்றும் பேசப்படும், ஆராயப்படும் வரலாற்று துணுக்குகள். ஒரு சில நாகரீகமும் கடலில் கப்பல் செலுத்தினாலும், ஆழ்கடலில் மிக சாதாரணமாக பெரிய கப்பல் செலுத்தி வணிகம் செய்தவர்கள் நாம் என்பதை மறுக்க முடியாது.
-- புறநானூறு 66 --
"நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக"
-- புறநானூறு 66 --
இதன் பொருள்:-
நீர் செறிந்த பெரிய கடலில் மரக்கலம் (கப்பல்) செலுத்தியும், அது அசையாதபோது காற்றினை ஏவல் கொண்டு செலுத்தும் வலிமையுடையவனின் வலித்தோன்றலே!
-- புறநானூறு 126 --
"சினமிகு தானை வானவன் குடகடல்
பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப்
பிறகலம் செல்கலாது அனையேம்"
இதன் பொருள்:-
சினமிக்க படையுடைய சேரன் மேற்குக் கடலில் பொன் கொண்டு வரும் கலத்தைச் செலுத்திய காலந் தொடங்கி அவ்விடத்துப் பிறர் கலம் செல்வதில்லை.
இந்த புறநானூற்றுப் பாடல்கள் அதற்கு சான்று. சினங்கொண்ட சேர மன்னனின் வீரத்தையும் உணர முடிகிறது.
பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள். பாரியும் கபிலரும் பரம்புமலை நண்பர்கள். பாரி கொடைவள்ளல். சாதி மதம், தரம், நிலை பாராது நாம் ஒற்றுமையாகத்தான் இருந்தோம். நண்பர்களாக இருந்த நம் இனத்தில், வேதனைக்குறிய தருணம் ஒற்றுமை இழந்தது. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதைப் போல, எப்போ தமிழன் வீழ்வான் என்பதற்கே குறிவைத்து நின்றவர்கள் நம் பகைகள்.
இப்படியாக தமிழர்களின் இனம் சாதித்ததும், இன்று அவர்களைப் பற்றி பேசப்படுவதும் ஒரு தனி மனிதன் காரணம் அல்ல. இனத்தின் வெற்றியே. இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகு, தமிழன் பேசப்படுவானா என்ற கேள்விக்குறிக்குள் நாம் சென்றுவிட்டோம். சாதிகளாகவும் மதங்களாகவும் பிரிந்து, நாம் தமிழர் என்ற உண்மையை மறந்து விட்டோம். ஆகையால்தான் ஒற்றுமை மிக முக்கியம். உறவில் ஒற்றுமை இல்லாமல் போனாலும் கூட, இனம் என்று பார்க்கும் போது படைப்புகளும் எண்ணங்களும் இனப்பற்றுமாவது ஒற்றுமையாக இருக்க வேண்டும். இவை மட்டும் ஒற்றுமையானால், கொஞ்சம் கனவு கண்டு பாருங்கள். இனத்தை அழிக்க வந்தவன் படை எல்லையிலே சிதறும். நம்மை அசைக்க எந்த கொம்பனும் வரமாட்டான். நமது பெருமை காக்கப்பட வேண்டும்.
ஒரு சிலர், நாம் பெருமை பேசியே காலம் தள்ளுகிறோம் என்கிறார்கள். நிச்சயமாக நாம் பெருமை பேச வேண்டும். பேசப் பேச உணர்வு மெருகேறி வரும். உணர்வு மெருகேறி வந்தால் பற்று தானாக வளரும். பற்று உண்டானால் இனம் என்ற ஒற்றை அடையாளம் உருவாகும். பிறகென்ன? நம்மை அசைக்க யாரும் இல்லை. சினிமாக்களில் மோகம் இருப்பது கூட தப்பில்லை. இனத்தின் பிரச்சனையும் தாண்டி, நடிகர்கள் நமக்கு முக்கியமல்ல. இந்திய நாட்டின் தேசிய விளையாட்டு வலைகோல் மட்டைப் பந்து (ஆக்கி). ஆனால் அதை தின்று முடித்தது இந்த கிரிக்கெட். கிரிக்கெட் விளையாட்டைவிட நம் மண்ணின் வீரவிளையாட்டுகள் சிறந்துதானே. மோகம் இருப்பதில் தப்பில்லை. காலத்திற்கு ஏற்ப விளையாட்டுகள் மாறலாம், எண்ணங்கள் மாறக்கூடாது.
இனத்திற்கென்று கடுகளவாவது ஏதேனும் செய்வேன் என்று இன்றே உறுதிமொழி எடுங்கள்.
கட்டுரையைப் பகிருங்கள். ஒற்றுமையே பலம்.
via Rajendran Tamilarasu
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக