தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

வினைப் பயன்!!


கூர்ந்து பார்க்கின்ற போது ஒவ்வொரு செயலுக்கும், விளைவு இருக்கின்றது என்பது நிச்சயமாகப் புலனாகும். ஒரு சில செயல்களுக்கு விளைவு விரைவில் தெரிவதில்லை. காரணம் என்னவென்றால் மனிதனுடைய ஆயுள் சொற்பம் – ஒரு குறிப்பிட்ட எல்லை உடையது. சில செயல்கள் நீண்ட காலத்திற்குப் பின் விளைவாக வரலாம். அதுவரையிலே அறிவை நீட்டிப் பார்க்கவோ, வயதைக் கூட்டிப் போடவோ முடியாது.
அதனால் சாதாரண அறிவு நிலையில் மனிதன் ஒரு முனையை விட்டு விட்டு ஒரு முனையை மட்டும் பிடித்துக் கொள்கின்றான். செயலை மட்டும் எடுத்துக் கொள்கிறான். விளைவே இல்லை என்று எண்ணுகின்றான்; அல்லது விளைவை மட்டும் எடுத்துக் கொள்கின்றான். அதற்குரிய காரணம் பிடிபடவில்லையே என்று சொல்லுகின்றான். இவ்வாறு பகுதிப்பட்ட நிலையிலே “வினைப் பயன்” என்பதே பொய்யான தத்துவம் என்று குறுகிய மனத்தாலே முடிவு கட்டிவிடுகின்றான்.
எந்தச் செயலைச் செய்தாலும் விதையைப் போட்டால் நான்கு நாட்களிலோ, நான்கு வாரங்களிலோ முளைப்பது போல, அந்தச் செயலுக்கு ஒரு விளைவு நிச்சயமாக உண்டு. பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இந்த ஆறு குணங்கள் வயப்பட்டு மனிதன் செய்கின்ற செயல்களெல்லாம் அவனிடமே பதிந்து, பதிந்து மீண்டும் அந்தச் சக்தி உந்தி எண்ண அலைகளாகவோ, செயல் வடிவங்களாகவோ வந்து கொண்டு தான் இருக்கும். அப்படியே வந்து விட்டால் அதே எண்ணப் பதிவுகள் மீண்டும் மீண்டும் பதிந்து எழுந்து செயல் வடிவம் பெற்றுக் கொண்டே இருப்பதால் மனிதன் துன்பவயப்படுகிறான். அதிலிருந்து மீட்டுக் கொள்ள முடியாமல் தவிக்கிறான்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக