தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 28 ஜூலை, 2017

ஆதித் தமிழரின் அணுக் கொள்கை!

தமிழர் தகவல் June 2016 இதழில் வெளியான எனது கட்டுரை
இரண்டாவது உலக மகா யுத்தத்தின் போது ஜப்பானில் வீசப்பட்ட அணுக்குண்டின் விபரீதத்தைக் கண்ட பின்னர் தான் அணுச்சக்தியின் வல்லமையை உலகம் உணர்ந்து கொண்டது. அத்தகைய வல்லமை கொண்ட அணுச்சக்தி இன்று ஒருபுறம் ஆயுதங்கள் ஆகி உலகைப் பயமுறுத்தி வந்தாலும் மறுபுறத்தில் மருத்துவம் விஞ்ஞானம் தொழில் நுட்பம் போன்ற பிற வழிகளிலும் பேருதவிகளைச் செய்து வருகின்றது.
இத்தகைய அணுவைப் பற்றி பழந்தமிழர்கள் ஏதாவது தெரிந்து வைத்திருந்தார்களா என்றால் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள் என்று ஒளவையார் சொல்லியிருக்கிறார் என்பார்கள் தமிழ் படித்தவர்கள் இன்றும். இது தமிழரின் அணு அறிவுக்குப் போதுமான சாட்சி அல்ல.
தமிழில் சில சொற்றொடர்களை தமக்குச் சாதகமாக வளைப்பவர்கள் இருக்கின்றார்கள். உதாரணமாக அல்லல் பிறப்பு உடம்பைக் கட்டழிக்க வல்லானே என்ற மாணிக்கவாசகரின் சிவபுராண அடிகளை வைத்துக் கொண்டு உடம்பு பல செல்களைக் கொண்டு பட்டப்பட்டிருக்கின்ற உண்மையை இன்றைய விஞ்ஞானம் அறியும் முன்பே மாணிக்கவாசகர் கூறிவிட்டார் என்று மேடையில் பேசிய தமிழறிஞர்கள் இருக்கின்றார்கள். அறம் பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டிய கட்டைத்தான் கட்டழிக்க வல்லானே என்பது சொல்கிறதே அன்றி வேறு செல் பற்றி அங்கு ஒன்றும் இல்லை என்பதை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை.
எம் முன்னோர்கள் தாம் உண்மை என்று கண்டவற்றை மட்டுமே இலக்கியங்கள் கல்வெட்டுக்கள் மூலம் எமக்கு அறிவித்தார்கள். அவர்கள் முன்பு அறிவித்து விஞ்ஞானம் பின்பு கண்டு கொண்ட ஒன்றுக்கு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால்
தண்பனி விழுங்கிய செங்கதிர் மண்டலம்
உண்டென உணர்தல் அல்லது யாவதும்
கண்டினிது விளங்கா காட்சி
என்ற மணிமேகலை வரிகளை எடுத்துக் கூறலாம்.
வான மண்டலத்திலே ஒரு சூரியனை குளிர்ந்த பனியானது சூழ்ந்து மூடி இருக்கின்றது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆனால் அந்தக் கோளத்தை போய்ப் பார்த்து அந்தக் காட்சியை கண்டுவர முடியாது என்பது இதன் பொருளாகும். இன்றைய நாசா வெளியே உறைபனியும் உள்ளே தீப்பிழம்புமான கோளங்கள் அண்ட வெளியில் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் அவற்றை நெருங்க முடியாது என்று அறிவிக்கின்றது. அதைத்தான் மணிமேகலையும் சொல்கின்றது.
இத்தகைய வல்லமை வாய்ந்த செய்திகளைத் தந்த மணிமேகலை அணுவைப் பற்றியும் விரிவாகப் பேசுகின்றது.
1. பிரபஞ்சத்திலே என்ன விபரீதம் நடந்தாலும் அது அணுத் துகள்களைப் பாதிக்காது.
2. புதிதாக ஒரு அணு பிறப்பதும் கிடையாது.
3. ஒரு அணுவுக்குள் இன்னொரு அணு புகுந்து ஒன்றாவதும் இல்லை.
4. ஒன்றோடு ஒன்றாக ஒட்டியிருக்கின்ற இரு அணுக்களை இரண்டாகப் பிரிக்க முடியுமேயன்றி ஒரு அணுவை எந்த முயற்சியாலும் இரண்டாகப் பிளந்துவிட முடியாது.
5. அரிசியை அவலாக மாற்றுவது போல அணுவை அதன் தன்மை கெடாமல் கூட உருமாற்றம் செய்ய முடியாது.
6. அணுக்கள் உயர்வதும் தாழ்வதும் உலவுவதும் செய்யவல்லன.
7. அணுக்கள் ஒன்றோடு ஒன்றாக பல சேர்ந்து பலம் அடைவதும் பின் பிரிந்து தனித்தனியாவதும் உண்டு.
வேற்றியல்பு எய்தும் விபரீதத்தால்
ஆதி இல்லாப் பரமா அணுக்கள்
தீதுற்று யாவதும் சிதைவதும் செய்யா
புதிதாய்ப் பிறந்து ஒன்று ஒன்றில் புகுதா
முதநீரணு நிலவணுவாய்த் திரியா
ஓன்றிரண்டாகிப் பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
(மணிமேகலை – சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை)
இவை அணுவைப் பற்றிய எம் முன்னோர்களின் சொன்ன செய்திகள்;. இதிலே கூறப்பட்ட எந்த முடிவை இன்றைய விஞ்ஞானம் தவறு என்று தள்ளிவிட முடியும்?
இதைவிட இன்னொன்றும் சொன்னார்கள் எம் முன்னோர்கள். ஒரு அணு இன்னொரு அணுவுடன் இணையும் போது தேவைக் கேற்ப தன் செறிவை கால் அரை முக்கால் என்று ஒடுக்கிக் கொள்ளுமே ஒழிய தன்னிடமிருந்து கால் அரை முக்கால் பாகங்களைப் பிரித்துக் கொடுக்காது.
இது தானே இன்றைய நானோ தொழில் நுட்பம்.
இனித் தனி ஒரு அணுத்துகளால் எதையும் சாதிக்க முடியாது என்கிறது தமிழ். அணுக்கள் ஒன்று சேர்ந்தால் அல்லாமல் நிலமாய் வலிமை பெறுவதோ நெருப்பாய் சுடுவதோ நீராக ஓடுவதோ காற்றாக வீசுவதோ செய்யமாட்டா.
நிறைந்த இவ்வணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
ஓன்று முக்கால் அரை காலாய் உறும்.
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச்
சிக்கென்பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
ஆய தொழிலை அடைந்திட மாட்டா.
(மணிமேகலை – சமயக்கணக்கர் தம் திறம் கேட்ட காதை)
இதையெல்லாம் துல்லியமாகச் சொன்ன மணிமேகலை ஆசிரியன் எல்லா மரங்களும் வயிரம் பாய்ந்து இருக்க மூங்கிலுக்கு ஏன் நடுவிலே துளை இருக்கின்றது என்று சிந்தியுங்கள் என்று தன் அணுபற்றிய செய்தியை முடித்துக் கொண்டான்.
மன்னிய வயிரமாயச் செறிந்து வேயாய்த் துளைபடும்.
அணுச்சக்திக்கும் மூங்கிலுக்கும் ஏதோ தொடர்பு இருக்க வேண்டும். ஏனெனில் அதன் இலை கிளை அமைப்பு எல்லாம் மற்ற மரங்களை விட வேறுபாடானவை. அந்த இரகசியம் எம் முன்னோருக்குத் தெரிந்திருக்கின்றது. அதில் ஏதோ அணு இரகசியம் புதைந்து இருக்கின்றது.
Written by இரா.சம்பந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக