தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 டிசம்பர், 2016

தினம் ஒரு திருப்பாவை-மார்கழித் திங்கள்.....

மாதங்களில் மகத்தான சிறப்புகளைப் பெற்றுத் திகழ்வது மார்கழி மாதம். அதனால்தான் பகவான் கிருஷ்ணன் மாதங்களில் நான் மார்கழி என்று அருளி இருக்கிறார். ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒருநாள். அதில் மார்கழி மாதம் என்பது அவர்களுக்கு அதிகாலை நேரம் ஆகும். அந்த நேரத்தில் தேவர்கள் அனைவரும் மேலான பரம்பொருளை வழிபடுவார்கள். அந்த நேரத்தில் நாம் தெய்வ வழிபாட்டில் ஈடுபடும்போது, தெய்வத்துடன் தேவர்களையும் வழிபடும் பாக்கியம் நமக்குக் கிடைக்கும். தேவர்கள்தான் பரம்பொருளின் பிரதிநிதிகளாக இருந்து, நமக்கு வேண்டிய நன்மைகளை அருள்கிறார்கள். மழை வளம், காற்று வளம், மண் வளம் போன்ற உயிர்கள் வாழத்தேவையான அனைத்து நலன்களையும் நமக்கு அருள்பவர்கள். நாம் மார்கழி மாதம் முழுவதும் செய்யும் வழிபாடுகளால் பரம்பொருளையும், பரம்பொருளின் பிரதிநிதிகளான தேவர்களையும் வழிபட்ட பலனைப் பெறுவோம்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் பூமிபிராட்டியின் அம்சமாக அவதரித்த ஆண்டாள், மண்ணுலக மக்களின் வாழ்க்கையை வளப்படுத்துவதுடன், அவர்கள் பரம்பொருளுடன் சங்கமிக்கவும் விரும்பினார். அதற்காகவேதான் பூமிபிராட்டி ஆண்டாளாக அவதரித்தாள்.
ஶ்ரீவில்லிபுத்தூரில் துளசி வனத்தில் அவதரித்து பெரியாழ்வாரால் எடுத்து வளர்க்கப்பட்ட ஆண்டாள், கோபிகைகள் கோகுலத்தில் கிருஷ்ணனை அனுபவித்துப் பாடியதுபோல், தன்னையும் ஒரு கோபிகையாகவும், மண்ணுலக மக்கள் அனைவரையும் கோபிகைகளாகவும் கருதி, அனைவரையும் விரதம் இருந்து, ஶ்ரீ கிருஷ்ணனின் புகழைப் பாடி அவன் அருளைப் பெற அழைக்கிறாள்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்,
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை யிளஞ்சிங்கம்,
கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்,
நாரா யணனே நமக்கே பறைதருவான்,
பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்.
பொருள்:
செல்வ செழிப்பைக் கொண்ட இந்த ஆயர் குலத்தில் பிறந்த சகல ஐஸ்வரியங்களையும் கொண்ட பெண்களே! இந்த அழகிய மார்கழி மாதத்தில் நாம் விரதம் மேற்கொள்வோம். நன்னாளில் நாம் நீராடுவோம். தோழிகளே! ஒருத்தி மகனாகப் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாக கோகுலத்துக்கு சென்று சேர்ந்த கிருஷ்ணனை, யசோதையின் பிள்ளை என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். கருத்த மேகத்தின் நிறம் போன்ற மேனியை உடையவனும், காய்கின்ற கதிரையும் குளிர்விக்கின்ற சந்திரனையும் இரண்டு கண்களாக உடையவனுமாகிய கிருஷ்ணன், சாட்சாத் அந்த வைகுண்டத்தில் இருக்கும் நாராயணனே. அந்த கிருஷ்ணனே நமக்கு வேண்டிய யாவும் அருளக்கூடியவன். அவனுடைய புகழை உலகத்தவர் அறியும்படியாகப் பாடி வழிபடுவோம்'' என்கிறாள்.
மார்கழி மாதத்தில் மதி நிறைந்த நன்னாள் என்று ஆண்டாள் பாடி இருப்பதால், மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி நாள் என்று அர்த்தம் இல்லை. நாம் பகவானை ஆராதனை செய்யவேண்டும்; அதனால் நாம் நல்ல கதி அடையவேண்டும். உலக மக்கள் அனைவருமே சுகமாக வாழவேண்டும் என்ற நல்ல புத்தி -மதி நிறைந்திருக்கும் நாளாக மார்கழி மாதத்தின் தொடக்க நாளைக் குறிப்பிட்டு, பகவானின் அருமை பெருமைகளை விவரிக்கிறாள்.
திருமணம் ஆகாத பெண்கள், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு இருந்து, இறைவனை வழிபட்டால், தை பிறந்ததும் அவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கும் என்பது தொன்றுதொட்டு இருந்து வரும் நம்பிக்கை. ஆனால், இங்கே ஆண்டாள் தனக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெறவேண்டும் என்பதற்காக பாவை நோன்பு கடைப்பிடிக்கவில்லை. மாறாக, இறைவனையே தன் கணவனாக வரித்து விரதம் அனுஷ்டித்தாள். இங்கே ஆண்டாள் ஜீவாத்மா; அவள் வரித்துக்கொண்ட கிருஷ்ணன் பரமாத்மா. எனவேதான் அவள் தான் மட்டும் இறைவனை அடையவேண்டும் என்று எண்ணாமல், உலகத்து மக்கள் அனைவரும் இறைவனை நேசித்தும் பூசித்தும் நிறைவாக இறைவனிடமே சென்று சேரவேண்டும் என்று நினைத்து உலக மக்களாகிய நம்மையெல்லாம் தன்னுடைய தோழிகளாக நினைத்து, நம்முடைய மாயையாகிய உறக்கத்தில் இருந்து விடுபட அழைக்கிறாள். இறைவனை அடைய நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளையும் அடுத்து வரும் பாடலில் அழகுற விளக்குகிறாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக