தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 17 டிசம்பர், 2016

தினம் ஒரு திருப்பாவை-2 கலக வார்த்தைகள் சொல்லக்கூடாது

ஈரேழு உலகங்களிலும் மிகவும் உயர்ந்ததாக போற்றப்படுவது நாம்முடைய பூவுலகம்தான். காரணம், சுவர்க்கத்திலோ, பிரம்மலோகத்திலோ இல்லாத சிறப்பு நம்முடைய உலகத்துக்கு ஏற்பட்டதற்குக் காரணம் நம்முடைய உலகத்தில்தான் இறைவன் எண்ணற்ற திவ்விய தேசங்களில் அர்ச்சாரூபமாக எழுந்தருளி இருக்கிறார். புனிதமான நதிகள் யாவும் இந்த உலகத்தில்தான் இருக்கின்றன. அது மட்டுமல்ல, எண்ணற்ற மகான்கள் அவதரித்து இந்த மண்ணுக்கு மகிமை சேர்த்திருக்கின்றனர். இந்த புண்ணிய பூமியில்தான் பகவான் நாராயணன் ஶ்ரீகிருஷ்ணனாக அவதரித்து கோகுலத்தில் எண்ணற்ற லீலைகளைப் புரிந்து யசோதையையும், கோபிகைகளையும் மகிழ்வித்து இருக்கிறான். அவன்தான் நம்மையெல்லாம் கடைத்தேற்றக்கூடியவன். அவனே நமக்கு மோட்சம் தரக் கூடியவன். வாருங்கள், அவன் அருளால் அவனை அடைய நாமும் நோன்பு இருப்பதற்குத் தேவையான காரியங்களைச் செய்வோம் என்று அழைக்கிறாள்.
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி,
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி,
மையிட் டெழுதோம் மலரிட்டு நாம்முடியோம்,
செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி யுகந்தேலோ ரெம்பாவாய்.
பையத் துயின்ற பரமனடி பாடி என்ற வரியின் மூலம் 'பகவானின் உறக்கமானது சிந்தனைவயப்பட்ட உறக்கம் என்று ஆண்டாள் கூறுகிறாள். நல்லவர்களை காப்பதற்காக தான் எடுத்திருக்கும் இந்த அவதாரத்தில், பூதனை, சகடாசூரன் என்று பல அசுரர்களை அழித்தாகிவிட்டது. இன்னும் யாரையெல்லாம் சம்ஹாரம் செய்யவேண்டும் என்று சிந்தித்தபடி உறங்குகிறானாம். அதனால்தான் 'பையத் துயின்ற' என்று பாடுகிறாள்.
பகவான் கிருஷ்ணரின் அருளைப் பெற்றிட, மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் நோன்பு இருக்க அழைக்கிறாள். கிருஷ்ணரின் அருளைப் பெற நோன்பு இருக்கும்போது கடைப்பிடிக்கவேண்டிய நெறிமுறைகளையும் அவள் விவரித்துக் கூறுகிறாள்.
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் நீராடிவிட்டு, கண்களுக்கு மை தீட்டியும், கருத்த கூந்தலுக்கு மலர் சூட்டியும் தங்களை அலங்கரித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டுமாம். அலங்காரத்தில் ஆர்வம் ஏற்பட்டுவிட்டால், பகவானை அடைவதில் ஆர்வம் குறைந்துவிடுமாம். மேலும் நெய்யும் பாலும் உண்ணக்கூடாதாம். சுவைகளில் ஆர்வம் ஏற்பட்டுவிடுமாம். அதுமட்டுமல்ல, செய்யக்கூடாத எந்த ஒரு செயலையும் செய்யக்கூடாதாம். மற்றவர்களைப் பற்றி கலக வார்த்தைகளை - அவதூறு வார்த்தைகளை சொல்லக்கூடாதாம். அப்படிச் சொல்வது மனதில் வெறுப்பை ஏற்படுத்தும் என்பதால், கிருஷ்ணரின் அருளைப் பெற முடியாமல் போய்விடுமாம். இவையெல்லாம் செய்யக்கூடாதவை என்றால், செய்யக்கூடிய ஒரு விஷயத்தையும் ஆண்டாள் சுட்டிக் காட்டுகிறாள். 'ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி' பொருள்: அதாவது தர்மம் கேட்டு யாசித்து வருபவர்களுக்கு தன்னால் முடிந்ததைத் தரவேண்டுமாம். அப்படி தன்னால் எதுவும் தரமுடியாத நிலை இருந்தால், அப்படி தரக்கூடிய சக்தி படைத்த நபர்களை அடையாளம் காட்டி உதவ வேண்டுமாம். இப்படியான நெறிமுறைகளைக் கடைப்பிடித்து நோன்பு இருப்போம் வாருங்கள் என்று ஆண்டாள் தன்னுடைய தோழிகளை அழைக்கிறாள்.
ஆண்டாள் தன்னுடைய திருப்பாவை பாசுரங்களை பகவான் கிருஷ்ணரைக் குறித்தே பாடி இருக்கிறாள் என்றாலும், பாடல்களில் பகவானின் மற்ற அவதாரங்களையும் குறிப்பிட்டு பாடி இருக்கிறாள்.
மூன்றாவது பாசுரமான 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்ற வரியில் ஆண்டாள், பகவானின் வாமன அவதாரத்தைப் பற்றி பாடி இருப்பாள் என்றுதான் அனைவரும் நினைப்போம். ஆனால், இந்த வரியானது பகவான் கிருஷ்ணருக்கு எப்படி பொருந்துகிறது என்று நாளை பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக