தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 24, 2015

அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ், ரிசாத், சந்திரகுமார் மற்றும் பாருக் கூட்டாக முன்வைத்த கோரிக்கை



வடக்கில் மீள் குடியேறியுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வினைக் காணுமாறு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதனிடம் கூட்டாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ரிசாத் பதியூதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா, முருகேசு சந்திரகுமார், பாருக் ஆகியோர் கூட்டாக இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
வடக்கில் மீள் குடியேறும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், மீள்குடியேற்ற அமைச்சருடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ் மாவட்டங்களில் குடியேறியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பிலும் அவர்களுக்கு தற்காலிக வீடுகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பிலும் அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக மீள்குடியேறிய மக்களின் காணிகள் இன்னும் அரச படையினரால் விடுவிக்கப்படாமல் இருப்பதனால், அந்த மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிகவும் சிரமப்படுவதாகவும் இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடன் பேசி அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக உரிய தரப்பினரின் கவனத்திற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு வருவதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்கலந்துரையாடலில் வீடமைப்பு தொடர்பில் விசேட அமைச்சரவைப் பத்திரமொன்றை அமை்சரவையில் சமர்ப்பிக்குமாறும் அதனூடாக வெளிநாட்டு நன்கொடைகளை இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு பெற்றுக் கொடுக்கும் ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது.
மீள்குடியேறிய மக்களுக்கு மின்சார இணைப்பு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சரிடத்தில் வலியுறுத்தப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் காணப்படும் குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் குழாய் நீர்த்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்த அமைச்சர், மக்கள் பிரதிநிதிகளையம் அரச அதிகாரிகளையும் அழைத்து மீள் குடியேறிய மக்கள் பிரச்சினை குறித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment