தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 ஜூன், 2015

பிஸ்தா பருப்பு ! !


பிஸ்தா பருப்பு !

இளமையும், ஆரோக்கியமும் இருக்கும் வரையே நம்மால் புத்துணர்ச்சியாக இருக்க முடிகிறது. அதே நேரம் முதுமையின் ஆரம்பக் கட்டத்தை நெருங்கும் பொழுதும்,

நோய்வாய் படும்பொழுதும் புத்துணர்ச்சி குறைய ஆரம்பிக்கிறது. இளமைக்காலத்தில் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து வந்த உடலானது முதுமையை நெருங்கும் பொழுது செல்களின் பல்முறை பெருக்கம் குறைந்து, செல் அழிவை சந்திக்க நேரிடுகிறது.

இதனால் தோல் சுருங்குதல், சதை வற்றுதல், ஐம்பொறிகளின் பலன் குன்றுதல், முதுமைகால நோய்களின் ஆதிக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல தொல்லைகளை சந்திக்க நேரிடுகிறது. அதுபோல் பல வகையான நோய்களால் உடல் பாதிக்கப்படும் பொழுது செல்களின் ஆற்றல் குறைந்து ஒருவித பலஹீனம் ஏற்படுகிறது. இந்த பலஹீனத்தினாலும் புத்துணர்ச்சி மறைந்து ஒருவிதமான சோர்வு நம்மை ஆட்கொள்கிறது.

உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

நமது உடலின் உறுப்புகள் செயலிழந்தால் அவற்றை மாற்றி பிறரின் உறுப்புகளை அறுவை சிகிச்சையின் மூலம் பொருத்துவது போல் நாளமில்லா சுரப்பிகளை மாற்றம் செய்யும்படியான மருத்துவ விஞ்ஞான வளர்ச்சி இன்னும் ஏற்படவில்லை என்பதே உண்மை. ஹார்மோன்களின் செயல்பாடானது செல் வளர்ச்சியை சீராக்கவும், செல் முதிர்ச்சியை கட்டுப்படுத்தவும், செல் அழிவை தடுக்கவும் பயன்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இனப்பெருக்க உறுப்புகளை கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் ஒரு மனிதனை நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆண்களின் டெஸ்டோஸ்டீரோன் மற்றும் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க ஹார்மோன்கள் முதுமையை கட்டுப்படுத்துகின்றன. டெஸ்டோஸ்டீரோன்கள் குறைபாட்டால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மையும், அலித்தன்மையும், தோல் சுருக்கம், தோல் வறட்சி மற்றும் ஒருவித பலஹீனமும் உண்டாகின்றது. அதே போல் ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் பெண்களுக்கு விரைவில் மெனோபாஸ் ஏற்படுகிறது. ஆண்களுக்கு வளர்வது போன்ற ரோமங்களும், சதை தொங்குதல், முடி உதிர்தல் போன்ற முதுமையின் குணங்களும் தோன்றுகின்றன. இந்த ஹார்மோன்களை சுரக்கக்கூடிய இனப்பெருக்கம் சார்ந்த நாளமில்லா சுரப்பிகளும், இவற்றை கட்டுப்படுத்தும் பிட்டுயூட்டரி என்னும் நாளமில்லா சுரப்பியும் தங்கள் பணியில் தொய்வடைவதால் விரைவில் முதுமை ஏற்படுவதுடன் பாலுறவில் ஆர்வக்குறைவும் தோன்றுகிறது.

தாம்பத்ய உறவில் மிதமாக ஈடுபடுபவர்களுக்கு இதயக்கோளாறு, இரத்தக்கொதிப்பு மற்றும் அதிக இரத்த உறைவு நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறைவாக உள்ளதாக சமூக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பாலுறவில் ஈடுபட வாய்ப்பில்லாத மற்றும் பாலுறவு துணை இல்லாத ஆண்களும், பெண்களும் விரைவில் மனநோய்க்கு ஆளாகின்றனர் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

ஆண் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் இனப்பெருக்க ஹார்மோன்களின் குறைபாட்டை நீக்கி, பாலுறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற உடற்தகுதியையும், மனப்புத்துணர்ச்சியையும் தரும் அற்புத மூலிகை தான் பிஸ்தா. பிஸ்டேசியா வீரா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அனகார்டியேசியே என்ற குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுமரங்களின் உலர்ந்த பழ பருப்புகளே பிஸ்தாபருப்பு என்று அழைக்கப்படுகின்றன.

பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. பிஸ்தா பருப்பை இளவறுப்பாக வறுத்து, ஒன்றிரண்டாக இடித்து, கற்கண்டு சேர்த்த பாலுடன் கலந்து தினமும் 1 முறை சாப்பிட தேகம் ஆரோக்கியமடைவதுடன் பாலுறுப்புகள் வலுவடைகின்றன. பிஸ்தா பருப்பை நெய்விட்டு வறுத்து, ஒன்று அல்லது இரண்டு தினமும் சாப்பிட செரிமான சக்தி அதிகப்படுவதுடன் சுறுசுறுப்பு உண்டாகும். பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும்.

மணம் மற்றும் நறுசுவை நிறைந்த பிஸ்தா பருப்பானது ஐஸ்கிரீம், கேக், சாக்லேட் போன்றவற்றில் பெருமளவு சேர்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக