சென்னையில் வயதான தாயை ஆட்டோவில் ஏற்றி வந்து, பெற்ற மகனே பேருந்து நிலையத்தில் வீசி சென்ற கொடுமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியை சேர்ந்த ராகவன் என்பவரின் மனைவி சரோஜா (65). இவர், கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் ஒரு டீக்கடை அருகில் பசி, பட்டினியுடன் நோய்வாய்ப்பட்ட நிலையில் நேற்று கிடந்தார்.
இதேபோல், உத்திரமேரூர் அடுத்த மருதம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரின் மனைவி சரஸ்வதி (80) பேருந்து நிலைய பயணிகள் உட்காரும் இடத்தில் பெட்டி, படுக்கைகளுடன் அநாதையாக கிடந்துள்ளார்.
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் திரண்டு வந்து 108 அவசரஊர்திக்கு தகவல் கொடுத்தனர். ஆனால், 108 அவசரஊர்தி அடிபட்டு கிடந்தால்தான் வருவோம் என்று கூறி பிடிவாதமாக வர மறுத்துவிட்டனர்.
பின்னர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் கூறினர். இதையடுத்து, எஸ்ஐக்கள் தனசேகரன், முகமதுஅலி ஆகியோர் வந்து இருவரையும் மீட்டு விசாரித்தனர். அப்போது மூதாட்டி சரோஜா பொலிசாரிடம் கண்ணீர் மல்க கூறுகையில், நான் நோய்வாய்ப்பட்டு இருக்கும் நிலையில், எனது மகன் கஜேந்திரன் மருத்துவமனைக்கு செல்லலாம் என்று கூறி வீட்டிலிருந்து என்னை அதிகாலை 5 மணியளவில் ஆட்டோவில் அழைத்து வந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் வீசிவிட்டு சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார்.
இதேபோல், சரஸ்வதி கூறுகையில், எனக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் மகன் நாகராஜ் என்னை தனியாக தவிக்கவிட்டுவிட்டு அவரது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கே சென்று செட்டில் ஆகிவிட்டார்.
இதனால் மகள் கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கும் என்னை யாரும் கவனிக்கவில்லை. எனது மருமகன் தாமஸ் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஊருக்கு போகலாம் வா என்று கூறி ஆட்டோவில் என்னை அழைத்து வந்து கூடுவாஞ்சேரி பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு சென்று விட்டார்.
நான் சாப்பிட்டு 6 நாட்கள் ஆகிறது. என்னிடம் பணமும் இல்லை. பிச்சை எடுக்கவும் எனக்கு அசிங்கமாக உள்ளது. சிலர் என் மீது பரிதாபப்பட்டு ரூ.5 அல்லது 10 கொடுப்பார்கள். அதை வைத்து டீயும், பன்னும் சாப்பிட்டு பேருந்து நிலையத்திலேயே கொசுக்கடியில் தூங்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து பொலிசார் 108 அவசரஊர்தியை வரவழைத்து சரோஜாவை மீட்டு செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சரஸ்வதியை மீட்டு காரில் அவரது மகள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக