தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டின் மறுபெயர் இலக்கியங்களில் முலைவிலை என்று குறுிக்கப்பட்டுள்ளது. முலைவிலை என்பது முலைப்பாற்கூலி என்றும் ஐங்குறுநூறு என்ற சங்க நூலில் சுட்டியிருப்பதைக் காணலாம். 
.
முலைப்பாற்கூலி என்றால் ஏறுதழுவுதலில் வெற்றிபெற்ற ஒருவனுக்குத் தனது மகளைச் சந்தோஷசத்துடன் உவந்து அளிக்கும் தாய்க்கு மருமகனால் அன்பளிப்பாகக் கொடுக்கப்படும் பரிசப்பணமாகும். இதனைப் பரிசம் போடுதல் என்றும் அழைப்பர்.
.
ஒருவன் தன் மனைவியின் தனங்கள் தன் நெங்சில் பதைய அணைத்துக்கொள்ள ஆசைப்படுவதுபோல் காளைமாட்டை அடக்கி அதன் கொம்புகள் தன் நெஞ்சில் படும்படி தழுவிக் கொள்ளுதலின் சிறப்பே ஜல்லிக்கட்டின் மகிமையாகும்.
.
இவ்வாறான வீரனுக்குத் தன்மகளைக் கொடுக்க முன்வந்த பெண்ணைப் பெற்றவளுக்குக் கிடைப்பதே பரிசப்பணம். இதனை முலைப்பாற்கூலி என்றும் முலைவிலை என்றும் பழந்தமிழர் மரபில் கூறப்பட்டுள்ளது.
.
(கொல்லும் ஏறென்று அறிந்தும் அஞ்சாமல் அடக்கப் பாயும் வீரத்தமிழரின் விளையாட்டு ஏறுதழுவல் என்று கலித்தொகைப் பாடல் வரிகளில் அறியலாம்.)

சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ
ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு
அவ் வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப
வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி
நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத்
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும்
முறை உளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூஉ
..
கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாகை
ஈன்றன ஆய மகள் தோள்
...
கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இருங்
கூந்தல் அணை கொடுப்பேம் யாம்"
(முல்லைக்கலி 101)

பொருள்
.
சிவனின் கூரிய ஆயுதம்போல்
சீவிக் கூர்த்தீட்டப்பட்டகொம்புடைய
ஏறு தழுவப் புகுந்தனர் இணைந்து
திடலில் இடிபோல் முழக்கம் எழச் சவால் ஏற்று
மணத்தோடு மண்புழுதியும் எழ
பெண்கள் வரிசையாகச் சுற்றிநிற்க
துறையும் ஆலும் தொன்மை வலுவுடைக் கடம்பமும்
முறையாகத் தொழுதுப் பாய்ந்தனர்
மதம்பிடித்த யானையைவிடச் சீறும் காளையை
விடாமல் அடக்குவீரானால் வெற்றிப்பதாகையோடு
வெல்வீர் ஆயர் மகள் கரம்
கொல்லும் எருதை அடக்குபவர்க்கு
அடர்ந்த கருங்கூந்தல் கொண்ட
எம்பெண்டிரைக் கொடுப்போம் யாம் "
.
தொலைந்த அடையாளங்களைத் தோண்டி எடுப்பதைவிடப் பறிக்கப்பட்ட அடையாளங்களைப் பாதுகாப்பதே காலத்தின் தேவையாகிறது. இது எனது ஜல்லிக்கட்டிற்கான ஆதரவிற்காக எழுதப்பட்டது.
.
அன்புடன்
கங்கைமகன்
21.01.2017





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக