மகாபிநிஷ்கிரமணம்.
பொற் சங்கிலிகளில் தொங்கிக் கொண்டிருந்த பொன் விளக்குகளின் ஒளியோடு, சாளரங்களின் வழியாக நிலவொளியும் வீசிக் கொண்டு இருந்தது. சீதளம் மிகுந்த இமயமலைக் காற்று ஜில்லென்று வீசியது. நந்தவனங்களின் சண்பகம், முல்லை, மல்லிகை முதலிய மலர்களின் நறுமணமும் அத்துடன் கலந்து வந்தது. உறங்கி கொண்டிருந்த தேவி யசோதையை சித்தார்த்தார் மெளனமாக பார்த்து கொண்டு இருந்தார். திடீரென ஜயோதை திடுக்கிட்டு எழுந்து "நாதா..! நாதா..!" என அழைத்தாள். மெளனம் கலைந்த சித்தார்த்தர் அருகே சென்று "என் உயிரே என்ன நேர்ந்தது..?" என்று கேட்டார்.
தான் கண்ட கனவுகளை பதட்டத்துடன் கூறினாள். "கட்டுக்கடங்காத அழகிய காளை ஒன்று தலைநகரை விட்டே தப்பி ஓடிவிட்டது. நான் அதன் கழுத்தை கட்டிபிடித்து தடுக்க முயற்சி செய்தும் அது கட்டுங்கடங்காமல் பறந்தோடி விட்டது. அந்த காளை போய்விட்டால் மங்களசிறப்புகள் மறைந்து விடும் என்று இந்திரன் கோவிலில் இருந்து சப்தமும் கேட்டது. இரண்டாவது கனவில், நாட்டின் பழைய பொற்கொடி விழவும், அழகிய புதுகொடி ஒன்று உயர ஏறியது. அதில் பொருள் செறிந்த சில புது மொழிகள் இருந்தன, அதன் மீது வானத்தில் தேவர்கள் பூமாரி பொழிந்தனர். மூன்றாவது கனவில், எனது அறையில் எனது நாதன் சித்தார்த்தர் மறைய அவருடைய துகில் ஒன்று மட்டுமே இருந்தது. அத்துடன் எனது காற்சிலம்பும் கழன்று விழ.., கைகாப்புகளும் தறிப்புண்டு சிதறின. காற்றில் அசீரியாக "காலம் வந்து விட்டது, காலம் வந்து விட்டது.. !"என்று உரத்து கேட்டது. இவை ஆகாதகாலமோ என்று அஞ்சுகிறேன்.!"என்றாள்.
சித்தார்த்தர் ஆறுதல் கூறினார். "நீ கண்ட கனவுகள் நன்நிமித்தங்களே.. என்று எடுத்து காட்டி, நான் உன்னிடம் கொண்ட அன்பு மாறாது." என்று இனிய பல மொழிகளை கூறி, அவளை அச்சமின்றி தூங்குமாறு வேண்டினார். அவ்வாறே அவள் மைந்தனை ஒரு கையால் அணைத்த வண்ணம் கண்ணயர்ந்து விட்டாள்.
யசோதரை தான் கண்ட கனவின் நினைவில் "காலம் வந்து விட்டது, காலம் வந்து விட்டது..!" என்று புலம்ப, தான் நாட்டையும் நகரையும் துறந்து உற்றார் உறவினரை பிரிந்து வெளியேறும் காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்தார். "மண்ணக மக்களுக்காவே சகலதையும் துறந்து மெய்பொருள் காணவேண்டும். இனி மண்ணே எனக்கு மலரணை, காடுகளே எனக்கு வீடுகள்..!" என சொல்லி கொண்டார்.
படுத்துறங்கும் யசோதரையை பார்த்து, "இன்பக் கனியமுதே.. அளப்பரிய அன்பினால் உன்னையும் துறக்க துணிந்து விட்டேன்..! என் முயற்சியால் உலகம் உய்ய நேர்ந்தால், அதனோடு சேர்ந்து உனக்கும் உய்வு உண்டாகும்.!" என்று கூறி அரவணைப்பில் இருந்த குழந்தையை கண் குளிர கண்டுவிட்டு வெளியேறினார். மூன்று முறை வெளியேறிய அரச பெருமகனார் மீண்டும் மீண்டும் அறைக்குள்ளேயே திரும்பி விட்டார். அவ்வளவு வலிமை பெற்றிருந்தது தேவியின் அந்தமில்லாத அழகு, அவரும் அவள்பால் வைத்திருந்த அன்பும். அந்த நேரத்தில் உற்றதாயான கெளதமிக்கும், அல்லும் பகலும் கவலையுடன் வளர்த்த தந்தையையும், தம்மிடம் தணவா காதல் கொண்ட நாட்டு மக்களையும் மனதில் நினைத்து கொண்டார்.
"என் பிரிவால் உங்களுக்கு உண்டாகும் சிறு துயரை பொறுத்தருள வேண்டும். ஏன் எனில் நான் உங்களுக்காகவே செல்கிறேன்." என்று கூறிக் கொண்டு வெளியே வந்தார். வெளியே தூங்கி கொண்டு இருந்த பணிப்பெண்களை பார்த்து "இனிய தோழியரே..! இப்போது உள்ள அழகும் இளமையும் இழந்து மூச்சே இல்லாமல் தூங்குவீர்கள் என்பதை எண்ணியே நான் பிரிகிறேன்..!" என்று கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.
சித்தார்த்தரின் உள்ளத்தை உணர்ந்த தேவர்கள் அரண்மனை வாயிற் கதவுகள் தாமாகவே திறந்து கொள்ளும் படி செய்தனர். துயிலே அறியாத காவலர்கள் அந்நேரம் அயர்ந்து துயில் கொண்டனர். கதவுகள் திறப்பதை கண்ட இளவரசர், வேகமாக மாடியில் இருந்து கீழேயிறங்கி, சாரதி சாந்தகனை மெதுவாக கூவி அழைத்தார். எந்த நேரத்திலும் பணி செய்ய காத்திருந்த சாந்தகன் உடனே எழுந்து ஓடி வந்தான். சித்தார்த்தர் அவனிடம் தம் செய்தியை கூறினார்.
"சந்தகா.. பேரின்பத்தை நாடி வெளியே செல்லத் தீர்மானித்துள்ளேன். என் கண்டக குதிரையை விரைவில் கொண்டுவா..! என் உள்ளத்தில் உறுதி பிறந்து விட்டது. சபதமும் செய்து விட்டேன். எவ்வளவோ காவலுடன் பூட்டிய அரண்மனை வாயிற்கதவுகள் தானாகவே திறந்திருப்பதை பார். இந்த நாள் என் வாழ்கையின் சிகரமானநாள். என் சங்கற்பம் நிறைவேறும் நன்னிமித்தங்களே எங்கும் காணப்படுகிறது. ஆதலால் விரைவாக பரியை கொண்டு வந்து தருக.!"
சந்தகன் சற்று யோசித்தான். சுத்தோதனரின் கட்டளையை அவன் மறக்கவில்லை, ஆயினும் இளவரசரை எதிர்த் துரைக்கவும் மனம் வரவில்லை. தேவர்களின் உதவியால் அவன் உள்ளம் உறுதியானது. உடனே சென்று குதிரையை கொணர்ந்து நிறுத்தினான். அசுவ இலக்கணங்கள் அணைத்தும் பொருந்திய குதிரையை கண்டதும் தமது மலர்க்கரங்களால் அதை தடவி கொடுத்தார்.
"அசுவதிலகமே! எத்தனையோ போர்களில் தந்தைக்கு வெற்றி தேடிக் கொடுத்தனை! இப்போது நான் அழியா வாழ்வு பெறச் செல்கிறேன். அதற்கு உன் உதவி தேவை. எனது உயர்ந்த இலட்சியத்தில் எல்லோருக்கும் பங்கு உண்டு. நீயும் உன் சேவையைச் செம்மையாகச் செய்ய வேண்டும்.!" என்று அதற்கு சொன்னார்.
இளவரசர் குதிரைமீது அமர்ந்ததும், சந்தகன் அடர்ந்து வளர்ந்து இருந்த வாலைப் பிடித்து தொங்கி கொண்டான். வெண் மேகம் வானத்தில் விரைந்து செல்வது போல் பாய்ந்து சென்றது கண்டகம். எவருடைய செவியிலும் அதன் காலோசை கேட்கவில்லை. நகர எல்லையை அடைந்ததும் கோட்டை வாயில்களும் தாமாகவே திறந்திருந்தன. அவைகளை கடந்ததும் கபிலநகரை ஒருமுறை நன்றாக திரும்பி பார்த்தார். "ஜனன மரணங்களின் எல்லையைக் கண்டால்லாது, இந்த அணி நகருக்கு இனிதிரும்பேன்..!" என்ற வார்த்தைகள் வாயினின்று வெளிவந்தன.
அன்று பூர்ணிமை. நிறை மதியின் நிறைந்த ஒளியில் குதிரை மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டு இருந்தது. இருபத்தொன்பது ஆண்டுகளாகப் பூமியிலே மனிதர் அடைய கூடிய உயர்ந்த செல்வங்கள் அத்தனையும் ஒரு நொடியிலே துறந்து, அந்த குதிரை ஒன்றை துணையாகக் கொண்டு, நாடும் காடும் கடந்து சென்று கொண்டு இருந்தார் சித்தார்த்தர்.
(பெருந் துறவு தொடரும்..!)
(அன்று கி.மு 543 வைகாசி பூர்ணிமை வெள்ளிக் கிழமை முதல், இன்று வரை சித்தார்த்தரின் இந்த பெருந்துறவை மகாபிநிஷ்கிமணம் என்று போற்றப்படுகிறது. )
அன்புடன் தபோ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக