தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 அக்டோபர், 2017

துடக்கு -அசௌசம்!

துடக்கு என்பது பிறப்பு அல்லது இறப்பு நடந்தால் அதனையொட்டி சில தினங்கள் அனுட்டிக்கப்படுகின்ற ஒரு விடயம்.இதனை சைவ சமயத்தின் ரீதியாக ஆசௌசம் என கூறுவார்கள். சௌசம் என்றால் சுத்தி எனப்படும்
ஆசௌசம் என்றால் சுத்தியற்ற என்று பொருள்படும்.நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு துடக்கு எனப்படும் ‘தீண்டத்தகாமை’, ‘தூய்மை இன்மை’ என்னும் ஒரு வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றார்கள். இத்தகைய மரபுமுறை தற்கால சமுதாயக் கட்டமைப்புகளின் மத்தியில் நியாயப்படுத்தகூடியதாக இருக்கின்றதா என்பது ஒரு கேள்விக் குறியே!
துடக்கு காலத்தில் கோவில் செல்வதோ, திருமணம் முதலிய சுபகாரியங்கள் செய்வதோ அல்லது முன் நிற்பதோ, பொது நிகழ்வுகளுக்குச் சென்று மகிழ்வுறுவதோ, துடக்கு இல்லாதவர் அவ்வீட்டில் உணவருந்துவதோ தவிர்க்கப்படுகின்றது.
இத்துடக்கு, அவ்வீட்டினைச் சார்ந்தவர்களை மட்டுமல்ல, அவர்களின் ஆண்வழிப் பரம்பரையில் (பெண்கள் அல்ல; அவர்களின் இரத்தம் மனுஷ இரத்தம் அல்ல!) சகோதரங்கள், பெரியப்பன், சித்தப்பன், பேரன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று எல்லோருடைய ஆண் பிள்ளைகள், மனைவிகள், அவர்களின் ஆண், பெண் குழந்தைகள் என்று எல்லோரையும் பாதிக்கும் என்பது மரபு.துடக்கு என்பது பின்வரும் நிகழ்வுகளுக்குப் பின்னர் காக்கப்படுகின்றது:
ஒருவர் இறந்தால்:குடும்பத்தில் ஒருவர் இறந்தால், அது ஒரு ‘துடக்கு’ சம்பவமாக ஒரு மாத காலத்திற்கு பேணப்படுகின்றது. அவர் உடலை அன்றே கொண்டு சென்று எரித்துவிட்டு வந்தாலும் துடக்கில் மாற்றமில்லை.அதுவும் அவரவர் சாதியைப் பொறுத்து அந்தத் தூய்மையின்மையின் காலமும் மாறுபடும். ‘உயர் சாதி இரத்தம்’ உள்ளவருக்கு தூய்மை 14 நாளிலேயே வந்துவிடும். ஏனையோர் பாவங்கள் 21 நாள், 30 நாள் என்று காத்திருக்க வேண்டும். அந்த நாள் முடிவில் ஐயரை அழைத்து, மந்திரம் சொல்லி ‘துடக்கு கழித்தல்’ கிரியைச் செய்தால் மாத்திரமே இவர்கள் எல்லோரும் வழக்கமான நிலைக்குத் திரும்ப முடியும், இடையில் இன்னொரு துடக்கு சம்பவம் நிகழாதிருந்தால்!ஒரு சிலர் துடக்குக் கழிந்தபின்னரும், இறந்தவர் மேலுள்ள பெரும் பாசப் பெருக்கினால் மிகுதி உள்ள ஒரு வருட காலத்திற்கு ‘துக்கம்’ அனுஷ்டித்து, ஓரளவு இரண்டாம் படிநிலைத் துடக்கும் காப்பர்.
சில சமயத்தவர், இறந்தவர் உடலையே தங்கள் கோவிலுக்குக் கொண்டு செல்கின்றார்களே! அப்போது அந்தக் கடவுளுக்குத் துடக்குத் தொற்றாதா? நம்மர்வர் ஒரு செத்தவீட்டிற்குப் போய்விட்டுக் கோவிலுக்குப் போவதென்றால், முதலில் ஏழு கிணறுகளில் குளித்து சுத்தமாக்கிவிட்டுத்தான் போகவேண்டுமாம். என்ன கொடுமை ஐயா, இறந்தவரை இவ்வளவுக்குக் கேவலப்படுத்துகிறார்களே!
நியாயமாகப் பார்த்தால், இறந்தவர்மேல் உண்மையிலே பாசம் இருக்குமேயானால், அவர் ஆத்மா சாந்தி அடையவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களாக இருந்தால், இறந்தவர் விரும்பிய ‘சொர்க்கம்’ அவர் போய்ச் சேரவேண்டும் என்ற விருப்பம் நெஞ்சில் கொண்டவர்களாக இருந்தால் இறந்தவர் உடலைக் கடவுள் சன்னதியில் கொண்டு சென்று உங்கள் கிரியைகளைச் செய்யவேண்டும். அத்தோடு, தினமும் கோவில் சென்று, இறந்தவரை இடையில் எங்கும் நிற்பாட்டாது நேரே ‘அங்கு’ கொண்டுபோகுமாறு அவர்கள் வணங்கும் கடவுளிடம் விண்ணப்பம் செய்தல்வேண்டும் என்பதுதான் சரியான வழிமுறையாய் இருக்கவேண்டும் அல்லவா?
குழந்தை பிறந்தால்:
குடும்பத்தில் ஒருவர், என்னமாதிரித்தான் சுத்தமான சுகாதார சூழலில், பெரும் வைத்திய சாலையில் ஒரு குழந்தையைப் பிரசவித்தாலும், இந்நிகழ்வும் ஒரு செத்த வீட்டை ஒத்த துடக்குப் போலவே காத்திடுவார். என்றாலும், சந்தோசப்பட வேண்டிய விடயம் என்பதால் துடக்கு கழிந்தவுடன் சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவர்.
பெண் மாதவிடாய் வந்தால்:
பெண் பருவம் எய்தால், அல்லது வழக்கமான மாதவிடாய் வந்தால் அந்த நாட்கள் எல்லாம் அப்பெண்ணுக்கு துடக்குத்தான். அப்பெண்ணை ஒருபுறத்தில் உட்காரவிட்டு, வேறு பக்கங்களுக்குச் சென்று ‘அழைஞ்சு’ துடக்கை மற்றவர்களுக்கும் பரவாமல் கவனமாய் இருக்க வேண்டும். அவர்கள் என்னமாதிரியான நவீன யுக்திகளை உபயோகித்துச் சுத்தமானவர்களாய் இருந்தாலும், அது துடக்கு, துடக்குதான்.மேலை நாடுகளில், இப்படி ஒரு சம்பவம் ஒரு பெண்ணுக்கு நடப்பது என்பது அவரின் வீட்டிலேயே தெரிய வராது. அப்படி என்றால், அவர்கள் எல்லோருமே, எப்போதுமே துடக்கு உள்ளவர்கள் என்று ஆகிவிடுமா?
தாம்பத்திய உறவினால்:
தாம்பத்திய உறவினால் பெரும் துடக்கு உண்டாகுவதாகச் சொல்லி விரத காலத்திலும், கடவுளை வணங்குவதன் முன்னும் இப்படியான ‘அசுத்த’ வேலைகள் செய்வது கூடவே கூடாதாம். இது, இவர்கள் வணங்கும் அந்தக் கடவுளின் அபார சிருஷ்டிதனைக் கொச்சைப் படுத்தும் இந்தச் சாதாரண மானிடரின் கட்டுப்பாடு. ஆனால், கடவுள்மாரின் ஏற்றுக்கொள்ளவே முடியாத பெரும் திருவிளயாடல்களை மட்டும் கதை, கதைகளாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், பஜனைகள் பாடியும், நாட்டியங்கள், தெருக்கூத்துகள் ஆடியும் ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், ஒழுங்கான தாம்பத்தியம் இவர்களுக்கு ஒரு துடக்கு சமாசரமாம்.
துடக்கு இல்லாத எத்தனை பேரை மிகவும் நாற்றமடிக்கும் அழுக்கு உடையுடன் பொது நிகழ்வுகளில் சந்திக்கின்றோம்! இவர்களிலும் பார்க்க சுத்தமான உடையுடன் வரும் துடக்குள்ளவர்களே மேல் என்பது உண்மை. இந்தத் துடக்கு என்பது காக்கப்படுவற்கு, ‘அசுத்தம்’, ‘கிருமி’ என்று பல நவீன காரணங்களைச் சொல்லி நியாயப்படுத்தப் பார்க்கின்றார்கள். அந்தக் காலத்தில் அப்படி அசுத்தமாக இருந்ததோ என்னவோ; அதனால்தான் அப்போது இப்படி ஒரு கட்டுப்பாட்டை வைத்திருந்தார்களோ யார் அறிவர்? நாம் இப்போது தற்கால சூழ்நிலைகளை நோக்கி அதற்கேற்ப எங்கள் செயல்களை, நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
‘அப்போது சொன்னார்கள்’, ‘காலம், காலமாய்க் கடைப்பிடித்தார்கள்’ என்பதற்காக, தேவையற்ற, பிழையான, அர்த்தமற்ற ஒரு விடயம் தற்போதைய சூழலில் இன்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று ஓர் அற்ப அறிவு உள்ள சிறுவர்களுக்கே தெளிவாகப் புரியும்!
ஆசௌசம் அல்லது துடக்கு தீட்டு
————————————–
ஆசௌசம் என்பது விதிவிலக்கு காலமாகும். இவை பற்றிய விபரங்கள் ஏறத்தாழ (700)எழுநூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட அகோரசிவ பத்ததி என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூலில் உள்ளது. இலங்கையில் யாழ்ப்பாண மரபில் ஆலய உற்சவங்களும் மற்றும் கிரியைகளும் இந்த அகோரசிவ பத்ததி வழியாகவே நடாத்தப்படுகின்றன. இதேபோல தமிழ் நாட்டில் கூடுதலாக வழக்கில் உள்ளது மற்றும் பலதேசங்களிலும்,பறசார்த்தப்படுகின்றன,சோமசம்பு சிவாச்சாரியார் செய்த சோமசம்பு பத்ததி ஆகும். இப்போது எமக்கு இலங்கை நாட்டு சமயக்கிரியைகள் மற்றும் வழமைகளுக்கும் நமது இந்தியா நாட்டு வழமைகளுக்கும் உள்ள வேறுபாடுகள் ஏன் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.
சைவத்தின் இருபத்தெட்டு(28)ஆகமங்களிலும் ஆசௌச விதி என்று ஒரு அத்தியாயம் உள்ளது. இவை விரிவாகவும் ஒன்றுக்கொன்று சில வேறுபாடுகளுடனும் இருப்பதால் மேற்சொன்ன தொகுப்பு நூல்களான பத்ததிகள் மிகவும் பயனுள்ள கைநூல்கள் ஆகின்றன. ஆசௌசம் பற்றிய விபரங்கள் மட்டுமே உள்ளதாக ஆசௌச தீபிகை என்ற தமிழ் நூல் ஒன்றும் உள்ளது.
ஒரு குடும்பத்தில் மரணம், பிறப்பு, பூப்பு போன்ற நிகழ்வுகள் நிகழ்ந்தவிடத்து இக்காலத்தில் கோயில் வழிபாடு, தனிப்பட்ட ஆத்மார்த்த பூசை, அதிதிகளை வரவேற்று உபசரித்தல் போன்ற கடப்பாடுகளில் இருந்து அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு விதி விலக்கு அளிக்கப்படுகின்றது. இது அவர்களின் அதீத துக்கம் அல்லது சந்தோஷத்தைக் கொண்டாடும் காலமாகும். எமது வழமையில் ‘செத்த வீடு கொண்டாடுதல்’ என்று சொல்லும் மரபும் கவனிக்கத்தக்கது. பாதிக்கப்பட்டவர்கள் இவ்விதமான மன அதிர்வுகளிலிருந்து தமது வழமை நிலைக்குத் திரும்பும்வரை அவர்களுக்கு அளிக்கப்படும் விடுமுறையே ஆசௌச காலம் ஆகும். இது மறைமுகமாக அவர்களின் மனத்தேறலுக்கான கால அவகாசத்தையும் இத்தனை நாட்கள் என்று உணர்த்தி இதன் பின்னர் அவர்கள் தமது வழமைக்குத்திரும்ப வேண்டிய கடப்பாட்டையும் காட்டி நிற்கின்றது. பிறப்பு என்றால் அந்த புதிய சீவனுக்கு உரிய வரவேற்பை அளிக்கவும், தம்மை அந்த புதிய உறவுடன் நன்கு பிணைத்துக்கொள்ளவும் (Bonding), பிறந்த குழந்தையுடனும் பெற்ற தாயுடனும் காலத்தை நன்றாகவும் ஒன்றாகவும் கழிக்கவும் இந்த ஆசௌச காலம் வழி செய்கின்றது.
இவ்விதமான மன எழுச்சியும் தாக்கமும் இறுக்கமான பாசப்பிணைப்புள்ள எமது பாரம்பரிய குடும்பங்களில் நெருங்கிய உறவுமுறைகளை நேரடியாகப் பாதிக்கின்றது. அதிலும் பெண்ணானவள் சிறு வயதிலேயே திருமணமாகி கணவன் வீட்டுக்கு வந்து அவனின் உறவுகளையே தன்னுறவுகளாகக்கொண்டு வாழும் மரபில் அவளுக்குத் தன் பிறந்த வீட்டு நிகழ்வுகளைவிட புகுந்த வீட்டு நிகழ்வுகளே தன் சொந்த நிகழ்வுகளாக மனதைத் தாக்குகின்றன. அதானால்தான் திருமணமான பெண்களுக்கு அவர்களது பிறந்த வீட்டு சன்ன மரண ஆசௌசங்களின் துடக்கு அல்லது பாதிப்பு இல்லை என்று எமது பாரம்பரியத்தில் சொல்லப்படுகிறது.
அதாவது திருமணமான பெண்ணுக்கு அவளின் கணவனுடைய ஆசௌசமே அவளுடைய ஆசௌசம். அவளுக்கு என்று புறம்பாக ஆசௌசம் இல்லை.
ஆணுக்கு தந்தை ஊடாக உள்ள ஆண் சந்ததி உறவுகளின் ஏழு தலைமுறை வரை ஆசௌசம் உள்ளது.
இவர்களை தாயத்தார்கள் என தமிழ் நாட்டிலும், துடக்குக்காரர் என யாழ்ப்பாண மரபிலும் கூறுவர். இது அக்காலத்தில் நிலவிய ஆணாதிக்க தந்தை வழி சமுதாயத்தின் மரபையும் பிணைப்புகளையும் காட்டி நிற்கின்றது. குடும்பங்களில் உள்ள நெருக்கமான பாசப்பிணைப்பால் அங்கு நிகழும் பிறப்பு, இறப்பு போன்ற நிகழ்வுகளால் அதிக மன எழுச்சிக்கு உள்ளாவது இவர்களே. வெறுமனே சனன மரண நிகழ்வுகள் மட்டுமல்லாது இக்குடும்பங்களில் எந்த நல்லது கெட்டது நிகழ்ந்தாலும் அதில் பங்கு பற்றி தோள் கொடுத்து உதவும் கடப்பாடும் இந்த உறவுகளுக்கு உள்ளது.
ஆசௌசம் கடைப்பிடிப்பதன் மூலம் இந்தப் பொறுப்பும், கடப்பாடும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மறைமுகமாக வலியுறுத்தப்படுகின்றது. இதனாலேயே பெண்களுக்கு அவர்களின் பிறந்த வீட்டு ஆசௌசங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.
இந்த ஆசௌச காலமும் எல்லா நிகழ்வுகளுக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது அந்தந்த நிகழ்வுகளின் மனத்தாக்கங்களுக்கு ஏற்ப கால வரையைறகளைக் கொண்டுள்ளது. அதிலும் ஒரே நிகழ்வுக்கு எல்லாக் குடும்பங்களிலும் ஆசௌசம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
உதாரணமாக பிராமணர்களுக்கு மரண ஆசௌசம் பத்து நாட்களாகும்.
“தசமராத்ரீ ஜாதம் ந்தோஹன் தசராத்ரீ ரதுஹந்தீ”
என்று வேதம் சொல்லுகின்றது. இது அவரவர் ஆத்மீக நிலை மற்றும் ஆத்மீக அறிவைப் பொறுத்து வேறுபடுகின்றது. ஆத்மீகத்தை முழுநேரத் தொழிலாகக்கொண்ட பிராமணர்கள் இறப்பையும், பிறப்பையும் வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளாகப் புரிந்து கொள்ளுதலினாலும், அவற்றின் தாற்பரியத்தை நன்கு உணர்ந்திருப்பதினாலும் அவர்களுக்கு இவற்றால் ஏற்படும் மன எழுச்சிகள் குறைவு. எனவே அவர்களுக்கு துடக்கு காலமும் குறைவு. இதுவே சாதாரண குடிமகனுக்கு முப்பது நாட்களாக உள்ளது.
இந்த பின்புலத்தை விளங்கிக்கொண்டால் தற்காலத்தில் இந்த ஆசௌச விதிகளை நாம் எப்படி கடைப்பிடிக்கவேண்டும் என்பதை இலகுவில் புரிந்து கொள்ளலாம், காலத்துக்கேற்ற மாற்றங்களுடன் இவற்றை அனுசரிக்கவும் முடியும். உதாரணமாக மனைவியின் உறவுகளுடன் சேர்ந்து வாழும் கணவனுக்கு அந்த உறவுகளின் இறப்பு மற்றும் பிறப்புகளில் அதிக பிணைப்பும், மன ஈடுபாடும் உள்ளன. இங்கு அவனுக்கு அவர்களின் ஆசௌசத்தில் பங்கு உண்டு. இவ்வாறே தனது பெற்றோருடன் ஒன்றாக வாழும் மனைவிக்கு அவளின் பிறந்த வீட்டு உறவுகளின் சுக துக்கங்களின் பாதிப்பு நிறையவே உண்டு. ஆகவே அவளுக்கு பிறந்த வீட்டு ஆசௌசத்திலும் பங்கு உண்டு. இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் உறவுகளே தெரியாமல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்றவர்களுக்கு அவர்களின் குடும்ப உறவுகளின் சுக துக்கங்கள் பெரும் மனப்பாதிப்பை உண்டுபண்ணுவதில்லை. இந்நிலையில் ஏழு தலைமுறைத் துடக்கு என்பது இங்கு அர்த்தமற்றதொன்றாகி விடுகின்றது.
பிராமணனாகப் பிறந்தும் வேத அத்தியயனமோ, சமயக் கல்வியோ இல்லாமல் சாதாரண வாழ்க்கை வாழும் பிராமணருக்கு பிறப்பு, இறப்பு பற்றிய தத்துவங்களும், தாற்பரியமும் தெரிந்திருக்க நியாயமில்லை. இந்நிலையில் அவர்களுக்கு குறுகிய காலத்தில் துக்கம் கொண்டாடுதலை முடிக்கும்போது, இழப்பு மனநிலைத் துயரத்தைக் கொட்டி முடிக்க சந்தர்ப்பம் இல்லாமையால் அவர்கள் நாட்பட்ட இழப்பு துக்க நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது அவர்களின் கல்வி, தொழில், மற்றும் வாழ்க்கை சார்ந்த வினைத்திறனைப் பாதிக்கின்றது.
இவர்கள் தமது வாழ்க்கையில் வழமை நிலைக்குத் திரும்புதலில் இடர்ப்பாடுகளை எதிர்கொள்ளுகின்றார்கள்.
சைவத்திலே ஐந்து வகையான ஆசௌசங்கள் அல்லது துடக்கு கூறப்படுகின்றன. இவற்றை பஞ்ச ஆசௌசம் என்பர்.
1. ஜனன ஆசௌசம் அல்லது பிறப்பு துடக்கு; இது ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதனால் அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
2. மரண ஆசௌசம் அல்லது மரணத்துடக்கு; இது ஒரு குடும்பத்தில் மரணம் நிகழும்போது அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படும் துடக்காகும்.
3. சூதக ஆசௌசம் அல்லது பூப்புத்தீட்டு; ஒரு பெண் பருவமடையும்போதும் அதன் பின்னர் மாதாமாதம் மாதவிடாய் குருதிப்போக்கு வரும்பொழுதும் அவளுக்கு மட்டும் ஏற்படும் துடக்கு இது.
இதன்போது ஐந்தாம் நாள் தலை முழுகி பால் அல்லது பஞ்ச கவ்வியம் உண்ண இந்த துடக்கு விலகும். பெரும்பாடு போன்ற மாதவிடாய்க் குருதிப்போக்கு தீட்டாக கருதப்படுவதில்லை. ஆதாரம்- பராசர ஸ்மிருதி. நன்றாகவே அவதாணிக்க.
4. உச்சிஷ்ட ஆசௌசம் அல்லது எச்சில் துடக்கு; இன்னொருவரின் எச்சில்பட்ட உணவு அல்லது பானத்தை அருந்துவதால் ஏற்படும் துடக்கு. இது ஸ்நானத்தினாலும், பிராயச்சித்தத்தினாலும் போகும். எல்லாருக்கும் உரியது
5. ஜாதி ஆசௌசம் அல்லது சாதித் துடக்கு; இறை சிந்தனை மற்றும் நல்ல வாழ்நெறி இல்லாதவர்களுடன் இணங்குவதால் ஏற்படும் தோஷம்.
இது பிறப்பால் மட்டும் வருவது இல்லை, குணத்தாலும், பண்பாலும், வாழ்க்கை நெறியாலும் வருவது. இதனாலேயே
சம்பந்தர் பல குடிப்பிறந்த சிவ தொண்டர்களுடன் ஒன்றாக உண்டு குடித்து உறங்கி யாத்திரை செய்து வந்தார்.
வீர சைவ மரபில் உள்ளவர்களுக்கு மட்டும் இவ்விதமான ஆசௌசங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
1.1. தாய்க்கும் தந்தைக்கும் ஆண்குழந்தை பிறந்தால் 30 நாட்களும்
பெண்குழந்தை பிறந்தால் 40 நாட்களும் துடக்கு உண்டு.
பிராமணர்களுக்கு இது (10)பத்து நாட்கள்.
1.2. ஆண் குழந்தை பிறந்தால் தந்தை வழி ஆண் சந்ததி உறவுகளின் ஏழு தலைமுறைக்கு துடக்கு உண்டு. இவர்களையே உறவுகளில் துடக்குகாரர் என்று கூறும் வழமை யாழ்ப்பாணத்தில் உள்ளது.இந்தியாவிலும் உள்ளது,
1.3. பெண் குழந்தை பிறந்தால் குழந்தையின் ஆண் சகோதரர்களுக்கும், தந்தைக்கும், தந்தையின் சகோதரர்களுக்கும், தந்தை வழிப்பாட்டனுக்கும், அப்பாட்டனின் உடன் பிறந்தோருக்கும் 40 நாள் துடக்கு உண்டு.
1.4. நிறை மாதத்தில் குழந்தை பிறந்து இறந்தாலும் இறந்து பிறந்தாலும் இவ்வாறே பிறப்புத் துடக்கு உறவுகளுக்கு உண்டு. ஆனால் இதற்கு மரணத்துடக்கு இல்லை.
1.5. ஏழாம் எட்டாம் ஒன்பதாம் மாதங்களில் இவ்வாறு பிறந்து இறந்தாலோ அல்லது இறந்து பிறந்தாலோ தாய்க்கும், தந்தைக்கும் முன் சொன்னவாறே பூரண துடக்கு உண்டு. முன் சொன்ன மற்ற உறவுகளுக்கு கேள்விப்பட்டதில் இருந்து துடக்கு. இது அவர்கள் தலை முழுகியவுடன் கழியும்.
1.6. கர்ப்பத்தில் ஏழு மாதங்களுக்கு முன்னர் கருச்சிதைவு நடந்தால் எத்தனையாவது மாதத்தில் கரு கலைந்ததோ அத்தனை நாட்களுக்கு தாய்க்கு மாத்திரம் துடக்கு உண்டு.
உதாரணமாக நான்காம் மாதம் கருச்சிதைவானால் பிராமணப் பெண்ணுக்கு நான்கு நாட்கள் துடக்கு. ஏனையோருக்கு இதன் மூன்று மடங்கு அதாவது 12 நாட்கள் துடக்கு.
1.7. ஒரு குழந்தையின் பிறப்பு பற்றிய விபரத்தை அதன் துடக்கு கழிந்த காலத்தின் பின் கேள்விப்பட்டால் கேள்விப்பட்டதில் இருந்து ஏற்படும் துடக்கு தந்தைக்கு மட்டுமே. இது தலை முழுகுவதால் விலகும்.
“ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார்
ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்தபின்
ஆசூசம் மானிடம் ஆசூச மாமே”
-திருமந்திரம் 2551-
“ஆசூச மில்லை அருநிய மத்தருக்
ஆசூச மில்லை அரனைஅர்ச் சிப்பவர்க்
காசூச மில்லையாம் அங்கி வளர்ப்போரக்
காசூச மில்லை அருமறை யோர்க்கே”


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக