தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 மார்ச், 2013

ஜும்ஆ கடமை


ஜும்ஆ கடமை
============


492. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''நாம் (பிறப்பால்) பிந்தியவர்கள். மறுமையில் முந்தியவர்களாவோம். எனினும் அவர்கள் நமக்கு முன்பே வேதம் கொடுக்கப்பட்டார்கள். அவர்களுக்குக் கடமையாக்கப்பட்ட இந்த நாளில் அவர்கள் முரண்பட்டனர். அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டினான். மக்கள் நம்மையே பின்தொடர்கிறார்கள். (எவ்வாறெனில், நமக்கு இன்று ஜும்ஆ என்றால்) நாளைக்கு யூதர்களும் அதற்கு மறுநாள் கிறித்தவர்களும் வார வழிபாடு நடத்துகின்றனர் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆவுக்காக நறுமணம் பூசுவது.

493. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 'ஜும்ஆ நாளில் குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவருக்கும் கடமையாகும். மேலும் பல் துலக்குவதும் கிடைக்குமானால் நறுமணம் பூசுவதும் கடமையாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஜும்ஆவின் சிறப்பு.

494. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''ஜும்ஆ நாளில் கடமையான குளிப்புப் போல் குளித்துவிட்டுப் (பின்னர்) பள்ளிக்கு வந்தால் ஓர் ஒட்டகத்தை இறைவழியில் குர்பானி கொடுத்தவர் போலாவார். இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார். இமாம் பள்ளிக்குள் வந்துவிட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கிறார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜும்ஆவுக்காக எண்ணெய் தேய்ப்பது.

495. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''ஜும்ஆ நாளில் குளித்துவிட்டு இயன்றவரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணெய்யைத் தேய்த்துக் கொண்டு தம் வீட்டிலுள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (அங்கு நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்துவிடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுதுவிட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என ஸல்மான் பார்ஸி(ரலி) அறிவித்தார்.

496. தாவூஸ் அறிவித்தார். ''ஜும்ஆ நாளில் உங்களுக்குக் குளிப்புக் கடமையாக இல்லாவிட்டாலும் உங்கள் தலையைக் கழுவிக் கொள்ளுங்கள்; குளியுங்கள்; மேலும் நறுமணம் பூசிக் கொள்ளுங்கள்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனச் சிலர் கூறுகிறார்களே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு குளிப்பைப் பொறுத்தவரை சரிதான்; நறுமணம் பற்றி எனக்குத் தெரியாது' என்று விடையளித்தார்கள்.

இருப்பவற்றில் அழகானதை அணிவது.

497. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். ''மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது'' என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.

ஜும்ஆ நாளில் பல்துலக்குவது.

498. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' ''என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன் என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

499. ஆயிஷா(ரலி) அறிவித்தார். (நபி(ஸல்) அவர்களின் மரணவேளையில்) அபூ பக்ருடைய மகன் அப்துர் ரஹ்மான் வந்தார். அவரிடம் அவர் பல் துலக்கப் பயன்படுத்தும் குச்சி ஒன்றும் இருந்தது. அதனை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். (அவர்களின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட நான்) 'அப்துர் ரஹ்மானே! அந்தக் குச்சியைக் கொடுப்பீராக! என்றேன். அவர் கொடுத்ததும் அதை வெட்டி, மென்று நபி(ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். என் நெஞ்சில் சாய்ந்து கொண்டு நபி(ஸல்) அவர்கள் பல் துலக்கினார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
 —

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக