தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஜூன், 2014

முத்தூரணி....!


கீழே புகைப்படத்தில் உள்ள ஊரணி, தேவகோட்டை அருகில் உள்ள தெண்ணீர்வயல் எனும் கிராமத்தின் குடிநீர் ஊரணி. இந்த ஊரணியின் பெயர் முத்தூரணி. இந்த ஊரணிக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சுமார் 75 வருடங்களுக்கு முன்பு இந்த ஊரணி உருவாக்கப்பட்ட பொழுது என் தாத்தா (என் தந்தையின் தந்தை) இந்த ஊரணியின் கட்டுமானப் பணிகளில் இரண்டு கற்களுக்கு இடையில் இணைப்புக்காக சேர்க்கப்படும்சாந்து (தற்போதுள்ள சிமெண்ட் கலைவை போல) தயாரித்துக் கொடுக்கும் பணியில் இருந்துள்ளார். அந்தச் சாந்து எனும் கலவை, சுண்ணாம்பு, கடுக்காய் இன்னும் சில பொருட்களைச் சேர்த்து அரைத்து உருவாக்கப்படுமாம். இந்தக் காலத்தில் உள்ளது போல கட்டுமானப் பணிகளுக்கான இயந்திரம் சம்மந்தப்பட்ட வசதிகள் அக்காலத்தில் இல்லாததால் இந்த ஒட்டுமொத்த ஊரணிக்கும் ஒரு ராட்சத அம்மியின் மூலம் தன் கையாலேயே சாந்து அரைத்துக் கொடுக்கும் பணியை தனது ஏழ்மையின் காரணமாகவும், தனது ஐந்து குழந்தைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பினாலும் தான் ஒருவரே செய்து வந்துள்ளார். ஆறரை அடி உயரமும், உறுதியான உருவமும் கொண்ட என் தாத்தா தொடர்ந்து சில ஆண்டுகள் கடுமையான இந்தப் பணியைச் செய்து வந்ததன் விளைவாக அதனாலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து போனாராம். கடந்த முறை தாயகம் சென்ற பொழுது அந்த ஊரணியைத் தேடிச் சென்று என் தாத்தா விட்டுச் சென்ற வறுமையின் அடையாளங்களைத் தேடிப் பிடித்து புகைப்படக் கருவிக்குள் அடக்கி வந்தேன். என் தாத்தா, சாந்து அரைத்த ராட்சத அம்மி இன்றும் அங்கே புதர்களுக்கு மத்தியில் அவரின் வறுமையின் வரலாற்றைச் சுமந்தபடி உறங்கிக் கிடக்கிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக