தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 7, 2017

ஈறு முதல் இதயம் வரை... நலம் பல தரும் அர்ஜூனா!

இன்றைக்கு, இதய நோய், சிறுநீரகக் கோளாறு, மூட்டுத் தேய்மானம்... இவையெல்லாம் காய்ச்சல், தலைவலியைப் போல சர்வ சாதாரணமாக ஆகிவிட்டன. மூட்டு அறுவை சிகிச்சை, எலும்பு மாற்று அறுவைசிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, பைபாஸ் உள்ளிட்ட பெரிய சிகிச்சைகளுக்கே மருத்துவமனை வாசலில் வரிசைகட்டி நிற்கிறார்கள் மக்கள்! இதுபோன்ற பெரிய நோய்களுக்கு அலோபதி சிகிச்சைகளை மட்டுமே நம்பி இல்லாமல், பாரம்பர்யம் மிக்க ஆயுர்வேத இயற்கை உணவுகள், பானங்கள், சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளவும் பழக வேண்டும். இவை, நோயை உடலில் இருந்து சீக்கிரம் விரட்ட உதவும். ஆயுர்வேத சிகிச்சையில் இப்படி பல பிரச்னைகளுக்கு நல்ல தீர்வாக இருப்பது, `அர்ஜூனா மரம்.’
அர்ஜூனா
ஆயுர்வேத மருத்துவ முறையில் அதிக மருத்துவக் குணங்கள் கொண்ட மரமாகக் கருதப்படுகிறது மருத மரம். ஆங்கிலத்தில் இதனை, 'அர்ஜூனா மரம்' என்று அழைப்பர். இதன் மரப்பட்டையில் பல இயற்கை நற்குணங்கள் அடங்கியுள்ளன. நாட்டு மருந்துகள் பட்டியலில் முக்கிய இடம் வகிப்பது அர்ஜூனா மரப்பட்டை. இதைக்கொண்டு தயாரிக்கப்படும் டானிக், கஷாயம், தெரப்பி மற்றும் வீட்டிலேயே செய்துகொள்ளக்கூடிய எளிய சிகிச்சைகள் ஆகியவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வோம். அர்ஜூனா மரப்பட்டை அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் குறைந்த விலையில் கிடைக்கும். பாக்கெட்டில் விற்கப்படும் இதன் பட்டைத்தூளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதில் பல கலப்படங்கள் இருக்க வாய்ப்புள்ளது. அதற்குப் பதிலாக மரப்பட்டையை வாங்கி வீட்டில் இடித்துப் பொடி செய்துகொள்ளலாம்.
பலன்கள்
* அர்ஜூனா மரப்பட்டையை அரைத்துப் பொடியாக்கி, நல்லெண்ணெய் கலந்து பற்களில் தேய்த்துவந்தால் பல் சொத்தை, ஈறுகள் பிரச்னை ஆகியவற்றில் இருந்து விடுபடலாம்.
* மரப்பட்டைப் பொடியை தேனில் கலந்து முகத்தில் தடவிவந்தால், கரும்புள்ளிகள் மறையும். முகம் பொலிவு பெறும்.
* மரப்பட்டைப் பொடியை தக்காளி சாறுடன் கலந்து தினமும் காலை பருகிவந்தால், இதயத் துடிப்பு சீரடையும்.
* மரப்பட்டைப் பொடியில் ஒரு டீ ஸ்பூனை எடுத்து, பாலில் கலந்து தினமும் மூன்று வேளை பெண்கள் பருகிவந்தால், மாதவிலக்கின்போது ஏற்படும் உதிரப்போக்கு, அடிவயிற்று வலி நிற்கும்.
* கொனொரோயா (Gonorrhoea) உள்ளிட்ட பாலியல் மூலம் பரவும் நோய்களுக்கும், ஆண்களுக்கு தூக்கத்தில் விந்து வெளிப்படும் பிரச்னைக்கும் (Spermatorrhoea) மரப்பட்டைப்பொடி (Bark powder) சிறந்த மருந்தாக அமைகிறது.
* மரப்பட்டைப் பொடியை நெய்யில் கலந்து, எலும்பு முறிவு ஏற்பட்ட பகுதியில் தடவிவந்தால், விரைவில் குணமடையும்.
* சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டவர்களின் சிறுநீரகத்தால், அவர்கள் குடிக்கும் தண்ணீரில் உள்ள சோடியத்தை ஈர்க்க முடியாமல் போகும். இதனால், அதிக அளவு சிறுநீர் வெளியேறும் (Diuretic properties). இதன் விளைவாக, உடலில் நீர்சத்துப் பற்றாக்குறை ஏற்படும். தினமும் காலை 40 மி.லி அர்ஜூனா பட்டைச் சாறு பருகிவர, இந்தப் பிரச்னை குணமாகும்.
பாலமுருகன், ஆயுர்வேதா மருத்துவர்

பால் கஷாயம்
சுக்குமல்லிக் காபி, கிரீன் டீ போல இதுவும் ஓர் இயற்கை ஊட்டச்சத்து பானம். `ஆர்தரைட்டிஸ்’ என்னும் மூட்டுவலி நோய் உள்ளவர்கள், ஆஸ்ட்டியோபொரோசிஸ் போன்ற எலும்பு அடர்த்திக் குறைதல் நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இதயத் தசை, வால்வு, ரத்தக்குழாய் கோளாறுகள் உள்ளவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் உள்ளிட்டோருக்கு பால் கஷாயம் மிகவும் நல்லது. இது எலும்பை உறுதியாக்கும். இதயத் தசைகளை வலுப்படுத்தும். அலோபதி சிகிச்சை எடுத்துக்கொள்பவர்கள், அதனுடன் பால் கஷாயம் சாப்பிடுவதால், உடலுக்கு எந்தவிதப் பக்கவிளைவுகளும் ஏற்படாது.
மூலிகை
இதை எப்படிச் செய்வது?
10 கிராம் அர்ஜூனா பட்டையுடன் 100 மி.லி பால் மற்றும் 400 மி.லி தண்ணீர் சேர்த்து, மிதமான வெப்பத்தில் கொதிக்கவிட வேண்டும்.
கலவை, 100 மி.லியாகச் சுண்டும் வரை கொதிக்கவைத்த பின்னர், அதனை இறக்கி வடிகட்டவேண்டும். இதை காலை மற்றும் மாலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
எலும்பு முறிவு ஏற்பட்டவர்கள், தினமும் காலை, மாலை இரு வேளையும் 50 மி.லி பால் கஷாயம் பருகிவர, எலும்பு விரைவில் கூடும்.
`லாக்ட்டோஸ் இன்டாலரென்ஸ்’ என்னும் பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள், பால் சேர்க்காமல் கஷாயத்தைத் தயாரித்துப் பருகலாம்.
கஷாயம்
அர்ஜூனாஅரிஷ்டா டானிக்
இது அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பால் கஷாயம் போலவே, இந்த டானிக்கில் இலுப்பைப்பூ மற்றும் சில இயற்கை மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கும். இதயத்துக்கு வலு சேர்க்கும். இது அமிலத்தன்மை நிறைந்தது. எனவே, இதனை வயிற்றுப்புண், வாய்ப்புண் உள்ளவர்கள் சாப்பிடக் கூடாது.
அர்ஜூனா இலை
க்க்ஷீரதாரா சிகிச்சை (Ksheera dhara Therapy)
எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு பால் கஷாயம் கொண்டு செய்யப்படும் தெரப்பி இது. பாதிக்கப்பட்ட உடல் பகுதியில் நல்லெண்ணெய் தடவி, அதன் மேல் பால் கஷாயத்தை ஊற்ற வேண்டும். கீழே வடியும் பாலை ஒரு பாத்திரத்தில் பிடித்து, மிதமாகச் சுடவைத்து, மீண்டும் பாதிக்கப்பட்ட பகுதியில் ஊற்றவேண்டும். இப்படி ஒரு நாளைக்கு மூன்று, நான்கு முறை செய்துவந்தால் எலும்பு உறுதியாகும். வலி, வீக்கம் குறையும்.

1 comment: