தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 31 அக்டோபர், 2013

‘தென்றலும் புயலும்’ /டொக்டர் தயாரித்த படம்!!

‘தென்றலும் புயலும்’ / சில பாடல்கள்.
டொக்டர் தயாரித்த படம்
திருகோணமலையில் பிறந்த ஓர் இளைஞருக்கு சினிமாவின்மீது அதிக ஆர்வம். ஒரு படம் வெளிவந்தால் அதையே அடிக்கடி பார்ப்பான். நடிப்பின்மீதும் இவனுக்கு ஆசை. 10 வயதில் நடிக்கத் தொடங்கிய இவன், 18 வயதில் நாடகம் எழுதி மேடை ஏற்றி நடிக்கத் தொடங்கினான். நடிப்பில் ஈடுபாடு இருந்த பொழுதும் தனது கல்வியையும், குழப்பிவிடாமல் தொடர்ந்தான். இவன் வைத்தியக் கல்லூரிக்கு எடுபட்டு ஒரு டொக்டராக வெளிவந்தான். ‘வைத்தியம்’ போன்ற விஞ்ஞானத் துறையில் ஈடுபடுபவர்களுக்குக் கலைத்துறையில் அதிக ஆர்வம் இருப்பதில்லை என்பார்கள். ஆனால், இந்த டொக்டருக்குத் திரைப்படம் எடுக்கவேண்டும் என்ற ஆசையே பிறந்து விட்டது. அதனால், ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிக்கத்தொடங்கிவிட்டார்.

அந்த டொக்டர்தான் எஸ்.ஆர். வேதநாயகம். அவர் தயாரித்த படத்தின் பெயர்தான் ‘தென்றலும் புயலும்’.

இந்த டொக்டருக்குத் திருகோணமலையிலுள்ள ஒரு வங்கி மனேச்சர் கூட்டாளி. வங்கி மனேஜருக்கு ஓரளவு நடிகர் முத்துராமனின் முகச்சாயல். அதனால், இவருக்கும் படம் நடிக்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசையை டொக்டர் நிறைவேற்றினார். பி.எஸ்.சி. பட்டதாரியான அந்த பேங் மனேஜரின் பெயர்தான் சிவபாதவிருதையர்.

திருகோணமலையில் மேடை நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரம் ஏற்று நடித்து வந்தவர் அமரசிங்கம். அவரும் இப்படத்தில் நடிப்பதற்காகச் சேர்ந்து கொண்டார். கொழும்பு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிய சாம்பசிவமும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

திருகோணமலை, மூதூர் ஆகிய பகுதிகளில் பலமுறை மேடையேற்றப்பட்ட நாடகம்தான் ‘தென்றலும் புயலும்’ இதன் கதையையே திரைப்படத்துக்கு ஏற்ற திரைக்கதையாக அமைந்த வசனம் எழுதினார் டொக்டர் வேதநாயகம்.

டொக்டர் வேதநாயகம், சிவபாதவிருதையர், அமரசிங்கம் அனைவரும் திருகோணமலையிலிருந்து கொழும்புக்கு வந்தார்கள்.

இவர்கள் தங்கள் படத்தை இயக்கக்கூடிய நல்ல இயக்குநரைத் தேடினர். மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் சிங்களத் திரை உலகில் ஒளிப்பதிவுத் துறையில் புகழ்பெற்று விளங்கினார். 50 சிங்களத் திரைப்படங்களுக்கும் ஐந்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்து முடித்திருந்தார். அவர்தான் எம்.ஏ. கபூர். அவரை இப்படத்தின் மூலம் முதன் முதலில் இயக்குநர் ஆக்கினார்கள்.

பி.எஸ். நாகலிங்கம் என்ற இளைஞர் நீண்ட நாட்களாகவே இலங்கைத் திரைப்பட உலகில் பல்வேறு துறைகளில் கடமையாற்றி வந்தார். அவரே இப்படத்துக்கு உதவி இயக்குநராக தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ் மேடை நாடகங்களிலும் சில சிங்களப் படங்களிலும் நடித்த முஸ்லிம் இளைஞர் ஒருவர் ‘புதியகாற்று’ மூலம் அறிமுகமாகி நல்ல பெயர் பெற்றிருந்தார். திடகாத்திரமான உடலும் திரைக்கேற்ற முகவெட்டும் கொண்ட இவ்விளைஞர்தான் டீன்குமார். இவருக்கும் இப்படத்தில் நல்ல பாத்திரம் வழங்கப்பட்டது.

டொக்டர் வேதநாயகம் நடிகைகளைத் தேடினார். அப்பொழுது கொழும்பில் சந்திரகலாவும் ஹெலன் குமாரியும் பிரபல நடிகைகளாக விளங்கினார்கள். தாய்ப்பாத்திரத்துக்கு செல்வம் பெர்னாண்டோ பொருத்தமானவர். இவர்கள் மூவரும் இப்படத்துக்கு ஒப்பந்தமானார்கள்.

இவர்களுடன் கே.ஏ.ஜவாஹர், எஸ்.என்.தனரெத்தினம், கந்தசாமி, ஜோபுநஸீர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

‘நிர்மலா’ என்ற படத்துக்கு இசை அமைத்ததன்மூலம் திருகோணமலை இசைக்கழகத்தைச் சேர்ந்த ரீ.பத்மநாதன் நல்லபெயர் வாங்கியிருந்தார். அவரே தென்றலும் புயலும் படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களுக்கும் இசை அமைத்தார். கவிஞர் சண்முகப்பிரியா இயற்றிய இப்பாடல்களை முத்தழகு, பேர்டின் லோபஸ், கலாவதி, சுஜாதா ஆகியோர் பாடினர். படத்தொகுப்பு அலிமான், கலை – சத்தியன்.

படப்பிடிப்பு திருகோணமலையில் கோணேஸ்வரர் ஆலயம், கடற்கரை, மூதூர்ப்பகுதி போன்ற இடங்களில் நடைபெற்றது.

ராஜேஸ்வரி பிலிம்ஸ், ‘தென்றலும் புயலும்’ திரைப்படம் 12.4.1978இல் இலங்கையில் பல பாகங்களிலும் திரையிடப்பட்டது.

1978ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஜனாதிபதி பரிசு இப்படத்தில் நடித்த செல்வம் பெர்னாண்டோவுக்குக் கிடைத்தது.

இப்படியான ஒரு கலைமுயற்சியில் ஈடுபட்ட டொக்டர் வேதநாயகம் 29-07-93இல் காலமானார். அவர் மறைந்தாலும் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் அவரது பெயர் என்று மறையாது.

தகவல்: இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ் (B.A.(Cey.), B.Ed.(Cey.), Diploma in Journalism.

பாடல்: இயற்கைமகள் எழுதும் கவிதையிலே..!




‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து…. துணை தேடி வந்தது ஒரு பறவை!! பாடியவர்: கலாவதி சின்னச்சாமி வரிகள்: சண்முகப்பிரியா இசை: திருமலை பத்மநாதன்

‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து…. அரும்பான ஆசை நெஞ்சில்!! பாடியவர்: V.முத்தழகு வரிகள்: சண்முகப்பிரியா இசை: திருமலை பத்மநாதன்

‘தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து…. அவள்தான் என்னுயிர்க் காதலி!! பாடியவர்: பேர்டின் லோபஸ் வரிகள்: சண்முகப்பிரியா இசை: திருமலை பத்மநாதன்


தென்றலும் புயலும்’ திரைப்படத்தில் இருந்து….  சந்திரவதனத்தில் இந்திர நீலப்பூ!!
பாடியவர்: V.முத்தழகு, கலாவதி சின்னச்சாமி
வரிகள்: சண்முகப்பிரியா
இசை: திருமலை பத்மநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக