தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூலை, 2015

" ஆமைகளின் வழித்தடத்தில் கடல்வழிகண்ட ஆதித் தமிழர்கள் "


ஆமைகள் இனப்பெருக்கத்துக்காக, கடல் நீரோட்டங்களைப் பயன்படுத்தி 150, 180 நாட்கள் பயணிக்கின்றன. இதை அவதானித்த தமிழர்கள், ஆமைகளைப் பின்பற்றி கடல் நீரோட்டங்களைக் கண்டறிந்து மத்திய தரைக்கடல், தென் கிழக்கு ஆசியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளுக்கும் கடல் வழிப் பயணம் மேற்கொண்டனர்.

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரம் என சோழர் காலக் கல்வெட்டுகள் கூறுகின்றன. இந்த 20 ஆயிரம் தீவுகளில் 9,000 தீவுகள் நீரில் மூழ்கி விட்டன. இவற்றை சோழர்கள் எப்படிக் கணக்கிட்டார்கள் என்பது வியப்புக்கும் ஆய்வுக்கும் உரியது.

கப்பல் கட்டுமானத்துக்கு மற்ற நாட்டவர் 2 மரங்களைப் பயன்படுத்த, தமிழர்கள் 20 வகையான மரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். பாறைகளில் மோதினால் உடையாமல் இருக்க கப்பலின் அடிப்பகுதியில் கழட்டி விடும்படியான கட்டமைப்பைக் கொண்ட தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர். பிற்காலத்தில்தான் தென்னிந்தியர்களிடம் இருந்து ஐரோப்பியர்கள் கற்றுக் கொண்டனர்.

தெப்பம் என்ற சொல், பல்வேறு மொழிகளில் படகைக் குறிப்பதாகவே உள்ளது. கிரேக்கத்தில் பாண்டியன்-1, 2 என்ற மன்னர்கள் ஆண்டுள்ளனர். அங்கு சிற்றரசர்களாக பல்லா என்ற வம்சத்தினர் ஆண்டுள்ளனர். பல்லா இனத்தவர் கிழக்கில் இருந்து வந்த வேளாண் தொழில் சார்ந்தவர்கள் என கிரேக்க பழம் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகடூரில் இரும்பு சார்ந்த நாகரிகம் இருந்துள்ளது. அப்பகுதியை ஆண்டவன் அதியமான். அவன் மகன் பெயர் எழினி. துருக்கியில் இரும்பு சார்ந்த பகுதி இன்றும் அதியமான் என அழைக்கப்படுகிறது. இரும்பு உருக்கும் ஆலைப் பகுதி எழினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பிரேசிலில் உறை, வசி, ஊர் என அழைக்கப்படும் பகுதிகள் உள்ளன. ஜப்பானில் குரில் என்ற பகுதியில் மருதை என்ற ஊர் உள்ளது. சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில் அமைந்துள்ளன. பாண்டியன் என்ற சொல்லுக்கு சீனத்தில் வேர்ச்சொல் இல்லை. ஆகவே இது தமிழகம் சார்ந்த பெயர் என அறிஞர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கொரியாவின் அரசியாக பாண்டிய இளவரசி ஒருவர் இருந்துள்ளார். கி.பி. 45-இல் இந்தோனேசியாவை ஸ்ரீமாறன் என்ற தமிழ் மன்னன் ஆண்டுள்ளான். ஆஸ்திரேலியாவில், குமரி, நான்மாடல், துங்காவி என்ற பெயரில் ஊர்கள் உள்ளன. பெரு, சிலியில் நெடுங்கற்கள் நிறைந்த பகுதிகள் வால்பாறை என அழைக்கப்படுகின்றன. பழந் தமிழரின் கடல் பயணங்களை இவை உறுதிப்படுத்துகின்றன.

பாண்டியர்கள் காளை, மீன் ஆகியவற்றோடு ஆமை இலச்சினைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமைச் சிற்பங்கள் உள்ளன. கிரேக்க, பாண்டிய நாணயங்களில் ஆமை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆமைகளின் கடல்வழித்தடமும் ஒன்றுதான். ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் கடலோரப் பகுதிகளே பழங்காலங்களில் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளன.

பர்மாவில் இருந்து தேக்கு மரங்களை வெட்டி கடலில் போட்டால் அவை தாமாகவே தனுஷ்கோடி வந்தடைந்துள்ளன. ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த கடல் நீரோட்டத்தைத் தமிழன் பயன்படுத்தியுள்ளான்.

இவ்வாறு ஆய்வாளர் ஒரிசா பாலு கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக