தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்


சிறுநீரகத்தையும் இதயத்தையும் தாக்கும் அபாயம்

எந்திரங்களுக்கு இடையில் எந்திரமாக உழன்று கொண்டிருக்கிறோம். எல்லாமே அவசரமாகக் கிடைக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சமையலில் இருந்து, தகவல் பரிமாற்றம் வரை!

அந்த மனப்பான்மை உடலை இளைக்கச் செய்வதிலும் தெரிகிறது சமீப காலமாக. உணவுக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் மட்டுமே உடல் பருமனைக் குறைக்கும் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அதெல்லாம் ஒரே இரவில்நடக்கிற மாயவித்தை அல்ல. மாதங்கள், வருடங்கள் ஆகலாம். ஆனால் நமக்குப் பொறுமை ஏது? விளைவு... ஒரு வாரத்திலோ, பத்து நாள்களிலோ பலன் தருவதாகச் சொல்கிற தவறான வாக்குறுதிகளை நம்மில் பலர் நம்பத் தயாராகிறார்கள். அந்த வகையில் உடலை இளைக்கச் செய்கிற சத்து பானங்களுக்கும், மாத்திரைகளுக்கும் ஏக கிராக்கி!

உடல் பருமனைக் குறைப்பதாக உத்தரவாதம் தரும் இந்தப் பொருட்கள் உண்மையில் உபத்திரவமே தருகின்றன!

பவுடர் வடிவில் வருகிற பருமன் குறைப்பு மருந்தை, தினசரி 2 அல்லது 3 வேளைகள் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். குடித்ததும் பசி உணர்வே உண்டாவதில்லை என்பதால், வேறு உணவுகள் மீது நாட்டம் இருக்காது. 20 முதல் 30 நாட்களுக்குள் உடல் இளைக்க ஆரம்பிப்பதென் னவோ உறுதி. அதன்பின்னர்தான் வருகிறது ஆபத்து... இந்த பவுடர் களின் விலையும் கொஞ்ச நஞ்சமல்ல... ஆயிரங்களில்தான் தொடக்க மே!

தொடர்ந்து குடிப்பவர்களுக்கு வயிறு மற்றும் நெஞ்சு எரிச்சல்தான் முதல் அபாய அறிகுறி. அதையடுத்து அடிக்கடி தலைசுற்றல், மயக்கம், செரிமானக் கோளாறு, இத்யாதி இத்யாதி என நீண்டு, ஒரு கட்டத்தில் படுக்கையில் விழச்செய்து விடும். நிற்கவோ, நடக்கவோ முடியாத நிலையும், சிறுநீரக செயலிழப்பும் போனஸ்!

பருமன் குறைக்கும் பவுடரின் பக்க விளைவுகள் இப்படியென்றால், உடல் இளைக்கச் செய்கிற மாத்திரைகளின் விளைவுகள் இன்னும் மோசம். மனச்சோர்வு, நெஞ்சுவலி, படபடப்பு, ரத்த அழுத்தம், தாறு மாறான இதயத்துடிப்பு, வயிற்றுவலி, சுவாசக் கோளாறு, இதய நோய், க்ளைமாக்ஸாக மாரடைப்பு!

உடலைக் குறைக்க உத்தரவாதம் தரும் இவை எல்லாமே மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலோ, மருந்துக் கடைகளிலோ விற்பனை செய்யப்படுவதில்லை. இவையெல்லாம் மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் எனப்படுகிற கமிஷன் பிசினஸ் மூலம் பரவுவது!

உடலை இளைக்கச் செய்கிற சத்துபானங்கள் எந்தளவு ஆபத்தானவை? உண்மையில் அவை என்ன செய்கின்றன? இதுபற்றிய மருத்துவர்களின் கருத்து என்ன?

உடம்பில் சேரக்கூடிய கொழுப்பைக் குறைக்க இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம். அப்படிக் குறைப்பதாக சொல்லப்படுகின்ற பலதும், ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை வேண்டுமென்றால் குறைக்குமாம். பருமனைக் குறைப்பதாகச் சொல்லி விற்பனைக்கு வருகின்ற பவுடர்கள் எதுவும் மருத்துவர்களால் பரிந்து ரைக்கப்படுவதில்லை.

அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை மட்டும்தான் மருத்துவர்கள் பரிந்து ரைக்க முடியும். அப்படிப்பட்ட மருந்துகள்ல இந்திய அரசின் மருத்துவ சான்றிதழ் குறியீடு இருக்கும். இந்த மருந்துகள் 14 வகை சோதனை களுக்கு உட்படுத்தப் பட்ட பிறகுதான் இந்த அங்கீகாரம் கிடைக்கும். உடம்பைக் குறைக்கிற மாத்திரைகளும் பவுடர்களும் அந்த வகையைச் சேர்ந்தது இல்லை’ என்று கூறும் மருத்துவர்கள், இவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள் கிறவர்களின் குடலும் ரத்தக்குழாய்களும் நைந்து போகும் என எச்சரிக்கின்றனர். அடுத்ததாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, மூளை மற்றும் நரம்பு மண்டலமும் பாதிப்புக்குள்ளாகுமாம்!

பொதுவாக சிறுகுடலுக்குள்ள குறைஞ்சபட்சம் 3 லிட்டர் தண்ணீர் இருக்க வேண்டுமாம். பருமனைக் குறைக்கிற பவுடர்களை எடுத்துக்கொள்கின்றபோது, அது உள்ள போய் ஒரு ஸ்பான்ஜ் மாதிரி அத்தனை தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றதாம். இதன் காரணமாக கிட்னிக்கு போக வேண்டிய தண்ணீர் தடுக்கப்பட்டு, கழிவுகள் வெளியேற முடியாம, கிட்னி பாதிக்கப்படுகின்றது. உடலை இளைக்க வைக்கிற மாத்திரைகளோ இதயத்தைப் பாதிச்சு, மாரடைப்பை உண்டாக்கி, உயிருக்கே உலை வைக்கின்றது எனும் அதிர்ச்சி தகவல்களை முன்வைக்கின்றனர் மருத்துவர்கள். இதுபோன்ற அபாயங்களைப் புரிந்து கொள்ளாமல் இப்படிப்பட்டதையெல்லாம் சாப்பிடறதை மக்கள் கட்டாயம் தவிர்க்கணும்’’ என்ற ஆலோசனைகளையும் கூறுகின்றனர்.

உடம்பைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் மருத்துவரை அணுக வேண்டும். ‘பி.எம்.ஐ’னு சொல்லக் கூடிய ‘பாடி மாஸ் இண்டக்ஸ்’ கணக்கின்படி, அதற்கேற்ற ஆலோசனைகள் மருத்வர்களால் கூறப்படும். சிலருக்கு வெறும் உடற்பயிற்சி மட்டுமே பலன் தரும். இன்னும் சிலருக்கு சிகிச்சைகள் தேவைப்படலாம். எதுவுமே பலன் தராதுங்கிறவங்களுக்கு ‘பாரியாட்ரிக் அறுவை சிகிச்சை’ தீர்வளிக்கும்.

அமெரிக்க மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட லேட்டஸ்ட் மாத்திரை ஒன்று இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை எடுத்துக்கொண்டாலும் அது உடம்பில் சேராதாம். குடலுக்குக் கொழுப்பு போறதை மட்டுமே தடுக்குமாம். அதாவது உணவின் மூலமாக உடலுக்குப் போவதில் 30 சதவிகித கொழுப்பைக் குறைக்க இந்த மாத்திரை உதவுகின்றதாம்.

மீதியை உடற்பயிற்சி மூலமா கரைக்க முயற்சிக்கலாம். இதுவும் கூட ஒவ்வொருவரின் உடல்வாகு, பி.எம்.ஐனு பல விஷயங்களைப் பார்த்து, மருத்துவர்களால மட்டுமே பரிந்துரைக்கப்பட வேண்டியது...என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்..

‘சாதமே கூடாது... ஒன்லி சப்பாத்தி... நிறைய நிறைய தண்ணீர்... ஸ்வீட்ஸ், சாக்லெட்ஸுக்கு நோ’... உடல் இளைக்க நினைப்போருக்கு இந்த மாதிரி உணவுக் கட்டுப்பாடெல்லாம் தேவையே இல்லை என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.

‘‘சரிவிகித உணவும் உடற்பயிற்சியுமே உடலை இளைக்கப் போதும். பிறந்ததுலேர்ந்து சாதம் சாப்பிட்டுப் பழகினவங்களை, திடீர்னு சாதத்தையே கண்ல பார்க்கக்கூடாதுனு சொல்றது மனரீதியா ரொம்ப பாதிக்கும். அது தேவையில்லை. அதுக்குப் பதிலா அளவைக் குறைக்கச் சொல்லியோ, அரிசிக்குப் பதில் சிகப்பரிசி, பருப்புக்குப் பதில் பயறு சேர்த்துக்கச் சொல்லியோ பழக்கலாம்.

எந்த நேரம் அவங்களால பசி தாங்க முடியாதோ, அந்த நேரம் நல்லா சாப்பிடச் சொல்லி, அதிகம் பசிக்காத நேரத்துல சாப்பாட்டு அளவைக் குறைக்கலாம். நிறைய காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கணும். வெண்ணெய் இல்லாம வீட்லயே சூப் செய்து குடிக்கலாம். ஒட்டுமொத்த குடும்பமுமே மாசாமாசம் செலவாகிற எண்ணெயோட அளவைக் குறைக்கணும். எப்பவாவது ஒரு துண்டு ஸ்வீட்டோ, சாக்லெட்டோ எடுத்துக்கிறதால சடார்னு வெயிட் ஏறிடாது. எதை, எவ்வளவு சாப்பிடணுங்கிறது தெரிஞ்சு சாப்பிடறது, தவறாத உடற்பயிற்சி... இந்த ரெண்டையும் சரியா பின்பற்றினாலே, மாசத்துக்கு 3 முதல் 4 கிலோ வரைக்கும் எடையைக் குறைக்கலாம்’’ இது ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையாக இருக்கின்றது..

எது எப்படியோ உடல் இளைப்பதற்கு மருத்துவர்களின் தகுந்த ஆலோசனைகளைப் பெற்று அதன் படி நடப்பது நல்லது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக