தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 8 அக்டோபர், 2016

யாழில் தன் கணவரின் குடும்பத்தைப் பார்த்து நெகிழ்ந்த தென்னாபிரிக்க மருமகள்

(தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 26 வயதான shan எனப்படுகின்ற இளம் ஆபிரிக்க பெண்.. யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த அவரது கணவன் விஜீந்திரன் பற்றியும்.. தனது கணவனின் ஊருக்கு வந்து தனது கணவனின் பாட்டியைச் சந்தித்தது பற்றியும்.. மிகவும் அழகாக தனது வலைத்தளத்தில் ஆங்கிலத்தில்.. அழகழகான புகைப்படங்களுடன் விபரித்து எழுதி இருக்கிறார்..
அவர் ஆங்கிலத்தில் எழுதி இருந்ததன் தமிழ் மொழி பெயர்ப்பை படித்துப் பாருங்கள்……
காதல் என்பது எல்லைகளே இல்லாத, வரையறைகளே இல்லாத உணர்வு. என்னுடைய காதல் நான் கனவிலே கூட நினைத்துப் பார்க்காத ஒரு ஊரையும் என்னையும் இணைத்து வைத்தது. அதே எனது காதல்தான் அற்புதமான எனது காதலனை.. எனது வாழ்க்கைத் துணைவனை எனக்கு அறிமுகப் படுத்தியது. எனது கணவன் மூலமாக எனக்கு அறிமுகமான அந்த ஊரின் பெயர் point pedro யாழ்ப்பாணம்.
நான் சிறுமியாக இருந்த போது இன்னொரு நாட்டில் இருந்து.. இன்னொரு இனத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொள்வேன் என்று.. கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனாலும் விஜியோடு பழக ஆரம்பித்து.. சில நாட்களிலேயே.. இவன் தான் எனது கணவன் என்று நான் முடிவு செய்து விட்டேன்.
விஜி ஒரு இலங்கைத் தமிழன், யாழ்ப்பாணம் என்கிற என்கிற ஊரைச் சேர்ந்தவன். இருந்தாலும் பல ஆண்டுகளாக தென்னாபிரிக்காவில் அவர் வாழ்வதால் என்னால் சகஜமாக அவனோடு ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது. இந்த விஜி மூலமாகத்தான் யாழ்ப்பாணம் என்கிற புதிய உலகமும், அந்த புதிய மனிதர்களும் எனக்கு அறிமுகமானார்கள்.
விஜியின் சொந்த ஊர் பருத்தித்துறையில் அவனுக்கு ஒரு பாட்டி இருக்கிறார். அந்த பாட்டிக்கு 85 வயது. விஜியின் தம்பியின் கல்யாணத்திற்காக நானும்.. எனது கணவன் விஜியும்.. எங்கள் மூன்று வயதுக் குழந்தையுமாக இலங்கைக்கு போய் இருந்தோம். அந்த பயண அனுபவத்தை என்னால் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இதற்கு முன்னால் இலங்கையில் இருக்கும் எனது கணவனின் உறவினர்களோடு நான் தொலைபேசியில் பேசியதே கிடையாது.
எனது கணவன் பேசும் தமிழை என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், என்னால் அவனைப் போல தமிழில் பேச முடியாது. முதல் முதலில் யாழ்ப்பாணம் என்கிற அந்த ஊருக்குப் போய் எனது கணவனின் உறவினர்களைச் சந்தித்த போது.. அவர்கள் என்னை எப்படி நடத்துவார்களோ என்று உள்ளுக்குள் பயம் இருந்தாலும்.. அங்கு போன சில மணி நேரங்களிலேயே.. நான் விஜியின் உறவினர்களோடு மிகவும் இலகுவாக ஒட்டி விட்டேன். மிகச் சிலருக்கே அங்கே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. ஆனாலும் அவர்கள் என் மேல் காட்டிய அன்பும் பாசமும் இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று.. இத்தனை எளிமையான அன்பான மக்களை.. இதற்கு முன்னால் நான் பார்த்ததே இல்லை.
எங்கள் கல்யாணத்தில் விஜியின் அம்மாவுக்கு விருப்பமில்லை. வெளிநாட்டில் இருக்கும் தனது மகனுக்கு தன்னுடைய ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருந்தார்கள். எனக்கு எனது கணவனின் அம்மாவின் முகத்தை பார்ப்பதற்கு தயக்கமாக இருந்தாலும்..
நானே ஆச்சரியப்படும் வகையில் அவர்கள் என்மீது எந்த விதமான கோபத்தையோ, புறக்கணிப்பையோ காட்டாதது எனக்கு வியப்பாக இருந்தது. குறிப்பாக எங்களது மூன்று வயதுக் குழந்தை கீர்தனாவை அவர்கள் கீழே நடக்கவே விடவில்லை.. எப்போதும் தூக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.. அங்கே இருக்கும் வயதான மனிதர்கள்.. குழந்தைகள் மேல் வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.
என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய.. என்னால் மறக்கவே முடியாத ஒரே ஒரு நபர் விஜியின் பாட்டிதான்.. அவர்களுக்கு 85 வயது.. எனது கைகளை அந்த மூதாட்டி பிடித்துக் கொண்ட போது.. அவர்களையும் மீறி அவர்களது கண்ணீர் துளிர்ப்பதை நான் பார்த்தேன்.. இவ்வளவு அன்பான பெண்ணை என் வாழ்க்கையில் இதற்கு முன்னால் நான் சந்தித்ததில்லை. தனது பேத்தியை அவர் பாட்டுப் பாடி தூங்க வைப்பதைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.. அவ்வளவு அழகாக அது இருக்கும்.
இந்தப் பாட்டிதான் (புகைப்படத்தில் இருப்பவர்) தன்னை வளர்த்ததாக எனது கணவன் விஜி பல முறை கூறி இருக்கிறான். எங்கள் கல்யாணத்தில் இந்தப் பாட்டிக்கும் பெரிதாக விருப்பமில்லை. எனது கணவருக்கு தனது பாட்டியின் மீது மிகுந்த மரியாதை இருக்கிறது. ஆனால் எங்கள் திருமணத்திற்குப் பிறகு பாட்டி அதிகம் எங்களோடு பேசுவதில்லை.. இப்போதுதான் முதல் முதல் முறையாக நேருக்கு நேர் சந்திக்கிறோம்.. ஆனாலும் இந்த வயதான பெண்..
எந்த விதமான முகச் சுழிப்போ.. கோபமோ இல்லாமல் என்னோடு பேசியதும் பழகியதும் எ னக்கு மிகப் பெரிய வியப்பைக் கொடுத்தது. அவருக்கு ஒரு சில ஆங்கில வார்த்தைகளே தெரிந்திருந்தது. ஆனாலும் அவர் எனது கைகளைப் பிடித்துக் கொள்ளும் போதெல்லாம்.. எங்களுக்குள் மொழியே தேவைப்படவில்லை. 25 வயது தென்னாபிரிக்க கறுப்பினப் பெண்ணுக்கும்.. 85 வயதான ஒரு தமிழ் மூதாட்டிக்குமான பிணைப்பை வார்த்தைகளில் வர்ணிக்க எனக்குத் தெரியவில்லை.. The most beautiful grandma…
நானும் பாட்டியும் பேசிக் கொள்வதற்கு எங்களுக்கு பாஜையே தேவைப் படவில்லை.. இப்படி ஒரு அன்பிற்காக நான் பல வருடங்கள் தனிமையில் ஏங்கித் தவித்திருக்கிறேன். ஒரு வயதான தாயை விட அற்புதமானதொன்று.. இந்த உலகத்தில் எங்கேயும் கிடையாது. அங்கே யாழ்ப்பாணத்தில் எனது கணவனின் பாட்டியோடு நாங்கள் இருந்த அத்தனை நாட்களிலும்.. நானும் எனது குழந்தையும் அவர்களை விட்டு பிரிந்திருக்கவேயில்லை. கடைசி வரைக்கும் நாங்கள் ஒன்றாகவே இருந்தோம்.. ஒன்றாகவே எல்லா இடத்துக்கும் போனோம்.. ஒன்றாகவே சாப்பிட்டோம்.. ஒன்றாகவே தூங்கினோம்..
யாழ்ப்பாணத்தை விட்டு நாங்கள் தென்னாபிரிக்கா திரும்பி வந்ததபோது.. எங்கள் குழந்தை கீர்தனா பாட்டியை விட்டு வரமாட்டேன் என்று அழுததது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது.. கனத்த இதயத்தோடு நானும் எனது கணவனும் குழந்தைகளும் திரும்பவும் தென்னாபிரிக்கா வந்தோம்.. போனிலோ.. ஸ்கைப்பிலோ.. பாட்டியோடு பேசுவது அத்தனை எளிதல்ல.. ஆனாலும் ஒவ்வொரு நாளும் பாட்டியின் முகத்தைப் பார்ப்பதற்கு இங்கே பேத்தி ஆசைப் படுகிறாள்.. தென்னாபிரிக்கைவுக்கும்.. இலங்கைக்கும் வாழ்க்கை முறையில் பல வித்தியாசங்கள் உள்ளன.. இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் குறைந்தது ஒரு மாதமாவது நான் யாழ்ப்பாணத்தில் எனது கணவனின் குடும்பத்தோடு வாழ ஆசைப் படுகிறேன்.
எனது பெண் குழந்தை கீர்தனாவிற்கு.. தனது அப்பாவின் ஊரும்.. தன் அப்பா பேசும் மொழியும்.. தன் அப்பாவின் உறவினர்களைப் பற்றியும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனது கணவனின் உறவுகளை.. குறிப்பாக அந்த பாட்டியை என்னால் மறக்க முடியாது. அங்கே நான் பார்த்த கடற்கரைகளையும், கோயிலையும், என்னால் மறக்க முடியாது. தினமும் போனில் பாட்டியும் பேத்தி கீர்த்தனாவும் பேசிக் கொள்கிறார்கள்.. உண்மையான அன்புக்கும் பாசத்திற்கும் முன்னால் மொழிகள் தேவையா என்ன… இன்னும் மூன்று மாதத்தில் மீண்டும் நாங்கள் யாழ்ப்பாணம் செல்ல இருக்கிறோம். -நன்றி.
அவர் எழுதியிருக்கும் இந்த கட்டுரையைப் படித்து நான் பிரமித்துப் போனேன். ஏதோ ஒரு ஆபிரிக்க நாட்டில் பிறந்து இந்த யாழ்ப்பாண மண்ணுக்கு மருமகளாக வாழ வந்த அந்தப் பெண்ணின் கதை அற்புதமானது…. இப்படி ஏராளமான மனிதர்களின் ஏராளமான அனுபவங்கள் இணையம் முழுவதும் இறைந்து கிடக்கிறது.
நாம் வாழும் இந்த யாழ்ப்பாண மண்ணுக்கும், இங்கே வாழும் மனிதர்களுக்கும் என்று ஒரு தனிப்பட்ட கலாச்சாரமும்.. பண்பாடும் உண்டு. சைவமும் தமிழும் இங்கேதான் இன்னமும் உயிரோடு இறுக்கிறது. எத்தனை அழிவுகள் வந்தாலும்.. எத்தனை இழப்புகள் வந்தாலும்.. நாங்கள் அழிந்து போகமாட்டோம்.. எளிமையும் அன்புமாக… இதோ.. இந்த தென்னாபிரிக்கப் பெண்ணைப் போல.. உறவுகளோடு கூடி வாழ்க்கையை அனுபவித்து வாழ்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக