தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

குருக்ஷேத்திர ஒன்பதாம் நாள் போர் !!


பீஷ்மர் சர்வதோபத்ர வியூகம் வகுத்தார். பாண்டவர்களும் அதற்கேற்ப திரிசூல வியூகம் வகுத்தனர். திரிசூலத்தின் மும்முனைகளிலும் பாண்டவர்களின் சிறந்த வீரர்களான, அர்ஜுனன், திருஷ்டத்துய்மன், பீமன் என்ன முறையே நின்றனர். தருமர், அபிமன்னு மற்றும் திரௌபதியின் ஐந்து புத்ரர்களும் (பிரதிவிந்தியன் யுதிர்ஷ்டிரனுக்கும், சுதசோமன் பீமனுக்கும், சுருதகீர்த்தி அர்ச்சுனனுக்கும், சதாநீகன் நகுலனுக்கும், சுருதகர்மா சகாதேவனுக்கும் மகனாய்ப் பிறந்தவர்கள்) உட்பக்கம் நின்று தர்மரை காத்தனர். நகுல சகாதேவ சகோதரர்கள் பின்புற சுவராக நின்றனர். திருஷ்டத்துய்மனால் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட வியூகம். பீஷ்மருக்கு எதிராக சரியான நேரத்தில் சரியான நபர்களுடன் அமைக்கப்பட்ட வியூகம். திருஷ்டத்துய்மன் போர் வியூகம் வகுப்பதில் பீஷ்மருக்கு இணையானவன் என்பதை நிரூபித்தான். கிருஷ்ணர் அர்ஜுனன் இருக்கும் போது திருஷ்டத்துய்மனை படை தளபதியாக அறிவித்ததின் காரணத்தை தருமர் இப்போது அறிந்திருந்தார்.

அபிமன்யுவிற்கும் அலம்பசனுக்கும் பெரும்போர் நடந்தது. மாயாவியான அலம்பசனின் அணைத்து மாயங்களும் அபிமன்யுவிடம் தோற்றது. அவனோ மாயப்போர் புரிந்தான். எங்கும் இருள் சூழும்படி அம்பு மழை பொழிந்தான். அபிமன்யூ மாயத்தை மறைக்கும் மாற்றுப் படையால் மாயையை விலக்கி அலம்புசனைத் தாக்கினான். அலம்புசன் போர்க்களம் விட்டு ஓடினான்.
துரியோதனின் நம்பிக்கை பெற்ற மயாவியான அலம்பசன் தனது தேரினை இழந்து போர்க்களத்தை விட்டு ஓடினான். அபிமன்யு மீண்டும் தன்னை நிரூபித்தான். அன்றைய போரில் அபிமன்யு கௌரவ சகோதரர்களில் மேலும் மூவரை கொன்றான். அர்ஜுனனின் பிம்பமாகவே காட்சியளித்தான் அபிமன்யு. “ தந்தையின் ஆற்றல் மகனிடம் இல்லாமல் போகுமா? “ என்றார் பீஷ்மர்.

சாத்தியகிக்கும் அசுவத்தாமனுக்கும் போர் நடந்தது. இருவரும் சமமாக போர் புரிந்தனர். அஸ்வதாமனின் வில் ஒன்று சாத்தியகியின் தேரின் சக்கரத்தை முறித்து. பதிலுக்கு சாத்தியாகி அஸ்வதாமனின் தேர் கோடியை அறுத்தான். அவமானம் அடைந்த அஸ்வத்தாமன் சினம் கொண்டு சாத்தியகியின் குதிரைகளை காயப்படுத்தினான். சாத்தியாகி தன் வில்களால் அஸ்வதாமனின் தேரினை மண்ணோடு பூட்டினான். தேர் அசையவில்லை. அபிமன்யுவை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான்.

துரோணர் அருச்சுனனை எதிர்த்தார். குருவும் சீடன் என எண்ணவில்லை சீடனும் குரு என எண்ணவில்லை. துரோணரின் அம்புகள் அனைத்திற்கும் தன் வில் கொண்டு பதில் அளித்தான் அர்ஜுனன். துரோணரின் அம்புகள் அன்று பார்த்தனுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. அவன் கவனம் முழுவதும் பீஷ்மரை வெற்றி கொள்வதில் மட்டுமே இருந்தது. 

பின்..பாண்டவர்கள் ஒன்று கூடிப் பாட்டனாராகிய பீஷ்மரை எதிர்த்தனர். ஆயினும் பீஷ்மரை அசைக்க முடியவில்லை. பீஷ்மரை எதிர்த்த பாண்டவர்களை விரட்டியடிக்க துச்சாதனனை துரியோதனன் அனுப்பினான். அன்று பாண்டவர் படையில் கடும் சேதத்தை பீஷ்மர் விளைவித்தார். கௌரவர்கள் அனைவரும் அழிந்தாலும் பீஷ்மர் ஒருவர் மட்டும் அவர்களை வெற்றி பெற செய்துவிடுவார் என்பதை பாண்டவர்கள் உணர்ந்தனர். சூரியன் சாய..அன்றைய போர் முடிந்தது.

அன்று இரவு பாண்டவர்கள் கண்ணனை வணங்கி..இதுவரை நடைபெற்ற போரில் பீஷ்மரை வெல்ல முடியவில்லையே என்ற கவலையை வெளியிட்டனர். நீண்ட யோசனைக்குப் பின்..அவரை வெல்வது குறித்து அவரையேக் கேட்க முடிவெடுத்தனர். பின் பீஷ்மர் இருக்குமிடம் சென்று வணங்கினர். பீஷ்மர் அனைவரையும் அன்புடன் தழுவிக் கொண்டார். பின் அர்ச்சுனன் “பிதாமகரே! போர் தொடக்கத்திற்கு முன் உங்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்" என வாழ்த்தினீர்கள். தங்களை வென்றால்தானே எங்களுக்கு வெற்றி? தங்களைத் தோற்கடிப்பது எப்படி?' என்றான்.

அதற்கு பீஷ்மர் 'நான் போரில் புறமுதுகு காட்டி ஓடுபவரோடோ, ஆயுதம் இல்லாதவரோடோ, பெண்ணோடோ, பேடியினிகளிடனோடோ போரிட மாட்டேன். என் ஆயுத பலனன்றி போய்விடும்.' என்றார்.

கங்கை மைந்தன் கூற்றைக் கேட்டு பாண்டவர்கள் அமைதியாகப் பாசறைக்குத் திரும்பினர். சிகண்டியை முன்னிறுத்த கிருஷ்ணர் திட்டம் வகுத்தார். தனது முடிவு நெருங்கி விட்டதை பீஷ்மர் உணர்ந்தார். மகிழ்ந்தார். சாப விமோசனம் கிடைக்க போகும் பீஷ்மரை மனதார வாழ்த்தினார் கிருஷ்ணர்... மெல்லிய புன்னகை பூத்தார்... அந்த புன்கையின் அர்த்தம் பீஷ்மருக்கும் கிருஷ்ணருக்கும் மட்டுமே அன்று புரிந்திருந்தது. குருக்ஷேத்திர போரின் மிக பெரிய சோகமும், இழப்பும் நிகழ போவது அர்ஜுனனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் அன்று இரவு தெரிந்திருக்கவில்லை...

மீண்டும் குறுக்ஷேத்ரத்தில் நாளை சந்திப்போம்....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக