தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 29 மே, 2013

சாதி என்றால் என்ன ?சாதி ஏற்றத்தாழ்வுகள்!( மனு நூல்...அல்லது மனு தர்ம சாஸ்திரம்)

திருக்குறள் / Thirukural

இன்று தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருக்கின்றது.

ஒரு புறம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சொந்த இடத்திலேயே அகதிகளாய் வாழும் நிலை இருக்கின்றது.

மறுபுறமோ, கடலிற்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் உயிர்கள் கேட்பார் எவருமின்றி பறிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றன...கூடங்குளத்துப் போராட்டங்களிலும் சரி, முல்லைப் பெரியார், காவேரி நதி நீர்ப் பிரச்சனைகளிலும் சரி தமிழன் அவனது உரிமையினை இழந்தே நிற்கின்றான். வற்றிப் போகும் ஆறுகள், நலிந்துப் போகும் சிறு தொழில்கள், மறைந்துக் கொண்டிருக்கும் தமிழ் கலைகள், வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருக்கும் விவசாய நிலங்கள் என்று தமிழகம் இன்று ஒரு அழிவுப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

காரணம் என்னவென்றுப் பார்த்தால் விடையாய் கிட்டுவது - தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஏன் ஒற்றுமை இல்லை என்றுப் பார்த்தால் அதற்கு காரணியாக விளங்குவது சாதிகள்...குறிப்பாக சாதி ஏற்றத் தாழ்வுகள். இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகளின் மூலமாகத் தான் தமிழன் இன்று பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து அவனுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றான்.


இந்த சாதி ஏற்றத் தாழ்வு என்ற ஒரு கொடிய நோய் அவனை பலமாக ஆட்க்கொண்டு இருக்கின்றது. அந்த நோயின் காரணமாக சிலர் தங்களைப் பிறப்பால் உயர்ந்த சாதி என்றுக் கூறி மற்றவர்களை பிறப்பால் தாழ்ந்தவர்கள் என்று வைத்து இருக்கின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் அனைவரும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக ஒன்றாக இருப்பார்கள் என்று நாம் எண்ணினால், அவர்களோ நான் தாழ்த்தப்பட்டவன் தான் ஆனால் இவன் என்னை விடத் தாழ்த்தப்பட்டவன் என்று அவர்களுக்குள்ளேயே பல பிரிவுகளாய் பிரிந்து அடுத்தவனை ஒடுக்குவதில் சுகம் கண்டுக் கொண்டு இருக்கின்றனர். அந்தளவு அந்த சாதி ஏற்றத் தாழ்வு என்னும் நோய் இங்கே பரவி இருக்கின்றது.

இப்பொழுது அந்த நோயினைப் பற்றித் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு வரலாற்றினைப் பற்றியும் சமயங்களைப் பற்றியும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இன்றைக்கு தமிழர்கள் என்பவர்கள் ஒரு தோற்ற இனம்....அதில் மாற்றுக் கருத்தே இல்லை. வெறும் ஈழத்தில் பெற்றத் தோல்வியினை வைத்து மட்டுமே நாம் இதனைக் கூறி விடவில்லை. தமிழர்களின் வரலாற்றினைப் பார்த்தால் இராசேந்திர சோழனின் காலத்திற்குப் பின்னர் மாபெரும் தமிழ் மன்னர்கள் இங்கே எழவே இல்லை. மேலும் கி.பி 14 ஆம் நூற்றாண்டில் இருந்து தெலுங்குப் பேரரசான விஜயநகர பேரரசின் தமிழகத்தின் பெரும் பகுதி வந்து விட்டு இருந்தது. அதாவது தமிழர்கள் தோற்று இருந்தனர்.

ஒரு போரில் தோற்ற இனத்திடம் என்ன இருக்கும்? அடிமைத்தனம் மட்டுமே இருக்கும். வென்றவர்கள் தோற்றவர்களின் அனைத்து உரிமைகளையும் சரி உடைமைகளையும் சரி எடுத்துக் கொண்டு அவர்களை அடிமையாக்கத்தானே செய்து இருப்பர்? இன்று ஈழத்தில் அவ்வாறு தானே நிகழ்ந்து இருக்கின்றது...தோற்றவர்கள்நிலங்கள், உரிமைகள் என்று அனைத்தையும் இழந்து ஒடுக்கப்பட்டு தானே இருப்பர். சரி இப்பொழுது ஒரு கேள்வி,

இன்று ஈழத்திலே போர் நடந்து முடிந்து இருக்கின்றது. இப்பொழுது அங்கே மக்களின் வாழ்க்கை நிலை எவ்வாறு இருக்கும்?

முதல் நிலையில் போரில் வென்ற சிங்களவர்கள் இருப்பர்.
இரண்டாம் நிலையில் காட்டிக் கொடுத்த எதிர் அணியினைச் சார்ந்த கருணா போன்றோர் இருப்பர்.
மூன்றாம் நிலையில் 'யார் ஆண்டால் என்ன' என்ற மனநிலையில் இருக்கும் தமிழ் மக்கள் இருப்பர்.
நான்காம் நிலையில் சிங்களவர்களை எதிர்த்து வீரத்துடன் போர் புரிந்த வீரர்கள், தலைவர்கள் இருப்பர்...மிகுந்த ஒடுக்கப்பட்ட நிலையில். இவர்கள் மீண்டும் எழவே கூடாது என்பதில் முதல் நிலையில் இருப்பவர்கள் உறுதியாய் இருப்பர் தானே.

ஈழத்தில் நிலை இவ்வாறு தானே இருக்கின்றது? ஏன்... எங்கு போர் நிகழ்ந்தாலும் நிலை இவ்வாறு தானே இருக்கக் கூடும்? இந்த நிலையில் தான் நாம் விஜயநகர பேரரசின் ஆட்சியினையும் தமிழர்களின் சாதிகளையும் சற்றுக் காண வேண்டி இருக்கின்றது.

ஒரு போர் நிகழ்ந்து இருக்கின்றது...அதனில் தமிழர்கள் தோற்று இருக்கின்றனர். இந்நிலையில் தமிழர்களின் தலைவர்கள் ஒடுக்கப்பட்டு இருப்பார்களா இல்லையா? தேசத்தினை விட்டு அவர்களின் வம்சம் துரத்தப்பட்டு இருக்குமா இருக்காதா? அவர்கள் நிலையில் தாழ்த்தப்பட்டு இருப்பார்களா இல்லையா?

தாழ்த்தப்பட்டு இருப்பார்கள் தானே...அவ்வாறு தாழ்த்தப்பட்டவர்கள் மீண்டும் எழுந்து வர வாய்ப்பே கிட்டவில்லை என்றால் அவர்கள் தொடர்ந்து தாழ்த்தப்பட்டவர்களாகத் தானே இருந்து வருவர்..அவர்களின் உடைமைகளும் சரி உரிமைகளும் சரி போனது போனவாறே தானே இருக்கும்?

தெலுங்கர்களிடம் அடிமையாகி உடைமைகளை இழந்த தமிழர்கள் அடுத்து ஆங்கிலேயர்களுடன் அடிமையாகின்றனர்...ஆனால் முன்பிருந்த அதே தாழ்த்தப்பட்ட நிலையில் தான் அவர்கள் இருக்கின்றனர். பின்னர் ஆங்கிலேயனிடம் இருந்து விடுதலைப் பெறுகின்றனர்...ஆனால் முன்னர் அவர்கள் தெலுங்கர்களிடம் இழந்த உடைமைகளும் சரி பெற்ற தாழ்த்தப்பட்ட நிலையும் சரி மாறவே இல்லை. இந்நிலையிலேயே தான் நாம் இன்று தமிழர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அணுக வேண்டி இருக்கின்றது. நிற்க...!!!

இங்கே சில கேள்விகள் எழலாம்...

1) தமிழ் தலைவர்கள் தாழ்த்தப்பட்டு இருப்பர் என்றுக் கூறினால்...இன்று தாழ்த்தப்பட்டோராக இருப்பவர்கள் தமிழ் அரசர்களாக இருந்தவர்கள் என்று கூறுகின்றீர்களா?

2) விஜயநகர பேரரசின் காலத்தில் தான் தமிழர்கள் தாழ்த்தப்பட்டனர் என்றால் அதற்கு முன்னர் தமிழகத்தில் சாதி ஏற்றத் தாழ்வுகளே இல்லையா?

3) இன்று பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருக்கும் தமிழர்கள் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சேர்ந்தவர்கள் என்றுக் கூறுகின்றனரே அது உண்மையா?

மேலும் பல கேள்விகள் இருக்கலாம்...அக்கேள்விகளுக்கு எல்லாம் இப்பொழுது விடையினைத் தேடுவது இன்றியமையாத ஒன்றாக இருப்பதனால் நாம் பல வரலாற்று விடயங்களோடு சாதிய அடிப்படைகளையும் வரலாற்றையும் காண வேண்டி இருக்கின்றது.

உதாரணமாக,

1) விஜயநகர பேரரசுக் காலத்தில் தான் தமிழ் கோவில்களில் இருந்து பெருமளவில் தமிழர்கள் வெளியேற்றப்பட்டு பிராமணர்கள் கருவறையினுள் நுழைகின்றனர் என்பதற்கு கல்வெட்டுச் சான்றுகள் பல இருக்கின்றன என்று நமக்குத் தெரியுமா?

2) பள்ளர், பறையர், சானார், சக்கிலியர் என்ற சாதியினைச் சார்ந்த மக்கள் விஜயநகரப் பேரரசுக் காலத்தில் பஞ்சமர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். அதில் சானார் சாதியினைச் சார்ந்த மக்களை பார்க்கத்தகாதவர்களாக வைத்து இருந்தனர்.

அப்படி இருந்த சானார் மக்கள் தான் இன்றைக்கு சமூகத்தில் நாடார் இனமாக திகழ்கின்றனர் என்றுத் தெரியுமா?

இறைவனால் பஞ்சமர் என்று வைக்கப்பட்டு இருந்தால் எவ்வாறு அவர்கள் மாறினர்? மேலும் அவர்களை அவர்கள் சத்திரியர்கள் என்றும் கூறிக் கொள்கின்றனரே...அவர்கள் சத்திரியர்களாக இருந்தால் எவ்வாறு பஞ்சமராக ஆக்கப்பட்டனர்?

தமிழர்கள் சத்திரியர்களா?

3) சைவ சமயத்தின் இறுதி நாயன்மாரான நந்தனார் என்பவர் பறையர் குலத்தினைச் சார்ந்தவர் என்பதும் அவர் சைவ சமயத்தின் தலைமைக் கோவிலான சிதம்பரத்தில் பூசை செய்து வந்தவர் என்றக் குறிப்புகளும், அவர் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் இருக்கின்றது என்பதும் தெரியுமா? அதே போல் தான் இறுதி ஆழ்வாரான திருப்பாணாழ்வாரும் கொலை செய்யப்பட்டார் என்ற கூற்றும் தெரியுமா?

அவர்களின் இனம் எவ்வாறு தாழ்த்தப்பட்டு பஞ்சம வரிசைக்கு வந்தது?

விடையினைத் தேடத் தான் வேண்டி இருக்கின்றது...!!!

தேடுவோம்...!!!

பி.கு:

1) இது ஒரு தேடல் முயற்சியே...விவாதங்களும் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன.

2) மேலும் பொதுவாக இன்றைக்கு சாதிய தலைப்புகள் எல்லாமே உணர்ச்சிகரமான தலைப்புகள்...எனவே இங்கே யார் மனதினையும் புண் படுத்த வேண்டும் என்ற நோக்குடன் எதுவும் எழுதப்படவில்லை என்பதை தாழ்மையுடன் தோழர்களுக்குத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாதி என்றால் என்ன என்றும் சாதி ஏற்றத்தாழ்வுகள் எப்பொழுதில் இருந்து இருக்கின்றன என்றக் கேள்விக்கு இரு வகையான பதில்கள் வருகின்றன...

1) சாதிகள் என்பது அவர் அவர்கள் செய்த தொழில்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதாவது,

இன்று மருத்துவம் பார்ப்பவர் என்றால் - மருத்துவர் - மருத்துவ சாதி
பொறியியல் நிபுணர் என்றால் - பொறியாளர் - பொறியாள சாதி
ஓவியம் வரைபவர் என்றால் - ஓவியர் - ஓவிய சாதி

அதாவது சாதிகள் என்பவை தொழிற்பிரிவுகளே அன்றி வேறல்ல. ஆனால் பிற்காலத்தில் இவ்வகைப் பிரிவுகளை பிறப்பின் அடிப்படையில் மாற்றி சிலரைத் தாழ்ந்தவர் என்றும் சிலரை உயர்ந்தவர் என்றும் மாற்றி விட்டனர் என்பது ஒரு சிலரின் கூற்றாக இருக்கின்றது.

2) சாதிகள் என்பன இறைவனால் படைக்கப்பட்டவை...இவர்கள் தாழ்ந்தவர்கள் இவர்கள் உயர்ந்தவர்கள்...இவர்கள் இந்த வேலையினைத் தான் செய்ய வேண்டும் என்பது அவன் வகுத்தப் பாதை...எனவே ஆதி முதலே சாதிகளும் ஏற்றத் தாழ்வுகளும் இங்கே இருந்துக் கொண்டு தான் இருக்கின்றன. இது மற்ற சிலரின் கூற்று.

இப்பொழுது இந்த இரு கூற்றுகளையும் பற்றி நாம் காணத் தான் வேண்டி இருக்கின்றது. முதலில் சாதிகள் என்பன தொழிற்பிரிவுகளாக இருந்தவை என்றக் கூற்றினைக் காண்போம்.

தொழில் அடிப்படையில் மக்கள் பிரிந்து இருப்பது என்பது வரலாற்றில் இயல்பான ஒன்றாகும். உதாரணத்திற்கு இன்றைய தொழிற் சங்கங்களை எடுத்துக் கொள்ளுங்கள்...ஒவ்வொரு தொழிலிற்கும் அந்தந்த தொழிலினைச் செய்யும் மக்களை ஒன்றுபடுத்தி அவர்களுக்கான உரிமைகளுக்காக குரல் கொடுக்க உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான் தொழிற் சங்கங்கள். ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு சங்கம் என தொழில் அடிப்படையில் அவர்கள் பிரிந்து தான் இருக்கின்றனர்...ஆனால் சமூகத்தில் அவர்களின் நிலை சமமாகவே இருக்கின்றது.

அதாவது தொழில் வேறுபட்டாலும், தொழிற் குழுக்கள் வேறு பட்டாலும் அவர்கள் அனைவரும் சமூகத்தில் சமமாகவே இருக்கின்றனர். அவர்களுள் ஏற்றத் தாழ்வு வர வாய்ப்புகள் இல்லை.

"அட என்னங்க... இப்போ ஒருத்தர் மருத்துவராக இருக்காரு...இன்னொருத்தரு மருந்துச் சீட்டு எடுத்து தரவரா இருக்காரு...ரெண்டுமே தொழில் தான். ஆனா இதுல வேறுபாடு இருக்குள்ள...மருத்துவருக்கு தர மரியாதைய சீட்டு எடுத்துக் கொடுக்கும் தம்பிக்கு யாராவது தருவாங்களா? வித்தியாசம் இருக்குள்ள...அந்த வித்தியாசம் தான் காலப்போக்குல நிரந்திரம் ஆகி...மருத்துவர் ஒசந்த சாதி...சீட்டு எடுத்து கொடுக்குற தம்பி தாழ்ந்த சாதி அப்படின்னு வந்துருச்சி" என்று இங்கே சில நண்பர்கள் கருத்தும் கூறலாம்.

அவர்களுக்கு ஒரு கேள்வி..."அந்த சீட்டு எடுத்துக் கொடுப்பவரின் பிள்ளை மருத்துவராக படித்து தேர்ச்சிப் பெற்றால் அவர் ஒசந்த சாதியாக இருப்பாரா அல்லது தாழ்ந்த சாதியாகவே இருப்பாரா?"

தொழிலின் அடிப்படையில் ஒருவரின் தகுதி முடிவு செய்யப்படுகின்றது என்றால் அவர் உயர்ந்த சாதியாக இருக்க வேண்டும். இல்லை அவர் தாழ்ந்த சாதியாகத் தான் இருப்பார் என்றால் தொழில் அடிப்படையிலான பிரிவுகள் எங்கேயோ பிறப்பின் அடிப்படையில் மாற்றம் பெற்று விட்டன என்றே பொருள் வருகின்றது.

அத்தகைய ஒரு மாற்றம் இயல்பாக ஒரு சமூகத்தில் வந்திருக்க வாய்ப்பே இல்லை...இந்நிலையில் சாதிகள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் உருவாக்கம் பெற்றன என்றும் எக்காலத்தில் இருந்து அத்தகைய மாற்றங்கள் சமூகத்தில் நிலைப் பெறத் துவங்கின என்றும் நாம் காண வேண்டித் தான் இருக்கின்றது.

பொதுவாக நமது சமூகத்தின் எண்ணம் எவ்வாறு இருக்கின்றது என்றால் ஆதி முதல் இத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகள் நம்முடைய சமூகத்தில் நிலவிக் கொண்டு தான் வருகின்றன என்று தான் இருக்கின்றது. ஆனால் இதனை மெய்ப்பிப்பதற்கு சான்றுகள் அரிதாகவே உள்ளன. அதுவும் குறிப்பாக கி.மு நூற்றாண்டுகளில் அத்தகைய சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்தமைக்கு சான்றுகள் மிகக் குறைவு. மாறாக அத்தகைய சாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லாததற்கே சான்றுகள் கிட்டப் பெறுகின்றன.

உதாரணமாக,

கி.மு நான்காம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்த கிரேக்க தூதர் மெகஸ்தனிஸ் இந்தியாவினைப் பற்றி எழுதியக் குறிப்பில் இந்திய மக்களின் பிரிவுகளைப் பற்றி எழுதி உள்ளார். அவரின் குறிப்புகள் படி மக்களுள் எவ்வித ஏற்றத் தாழ்வுகளும் இல்லை, மேலாக இன்றுப் பார்க்கும் பிரிவுகளும் அன்று நமது நாட்டினில் இருக்க வில்லை. அவரின் குறிப்பின் படி மக்கள் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

முதல் இடத்தில் தத்துவ ஞானிகள் இருந்தனர்.
இரண்டாம் இடத்தில் விவசாயிகள் இருந்தனர்.
மூன்றாம் இடத்தில் ஆடு/மாடு மேய்ப்பவர்கள் இருந்தனர்.
நான்காம் இடத்தில் வணிகர்கள் மற்றும் பொருள் செய்வோர்கள் இருந்தனர்.
ஐந்தாம் இடத்தில் போர் வீரர்கள் இருந்தனர்.
ஆறாம் இடத்தில் ஒற்றர்கள் இருந்தனர்.
ஏழாம் இடத்தில் அரசாங்க அலுவலர்கள் போன்றோர் இருக்கின்றனர்.

இந்தப் பிரிவுகள் இன்று நம்மிடையே காணப்படும் பிரிவுகளுக்கு முற்றிலுமாக வேறாக இருக்கின்றன.

இந்நிலையில் மெகஸ்தனிஸ் உண்மையினைக் கூறி இருக்கின்றாரா என்றும் அவர் அவ்வாறு உண்மையினைக் கூறி இருந்தால் எவ்வாறு மக்கள் பிரிவுகள் அவர் கூறிய நிலையில் இருந்து மாறி இன்றைக்கு இருக்கும் நிலைக்கு வந்து இருக்கின்றது என்றும் நாம் காண வேண்டி இருக்கின்றது.

சரி அது இருக்கட்டும். அதனைக் காணும் முன்னர் நாம் சாதிகள் எவ்வாறு தோன்றி இருக்கலாம் என்ற கேள்விக்கு 'கடவுள் அவ்வாறு படைத்தார்' என்று கூறுபவர்களின் கூற்றினைக் காண வேண்டி இருக்கின்றது...

காண்போம்...!!!


"கடவுள் சாதிய படைத்தாரப்பா...அவன் அவன் போன பிறவில பண்ணுன புண்ணிய பாவத்திற்கேற்ப உயர்ந்தவனாவும் தாழ்ந்தவனாவும் பிறக்கின்றான்...சரி தான" என்று சிலர் இன்றைக்கு நம்மிடையே இருக்கும் சாதிய அமைப்பிற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இப்பொழுது இவர்களின் இந்தக் கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

இவர்களின் இந்தக் கூற்றினை நாம் காணும் பொழுது சில கேள்விகள் எழுவதனை தடுக்க இயலவில்லை. இவர்கள் சாதியினை இறைவன் படைத்ததாகக் கூறுகின்றனர். சாதிகள் என்பது தேவர், பள்ளர், பறையர், கவுண்டர், நாடார், வேளாளர், வன்னியர், நாயக்கர்,ஐயர்....போன்றப் பிரிவுகள் ஆகும். இப்பிரிவுகளில் சில உயர்ந்தவைகளாகவும் சில தாழ்ந்தவைகளாகவும் இன்று இருப்பதனை நாம் காணுகின்றோம்.

இங்கே நம்முடையக் கேள்வி என்னவென்றால் இந்த இந்த சாதி உயர்ந்த சாதி இன்னின்ன சாதி தாழ்ந்த சாதி என்று இறைவன் கூறியதாக கூறும் இலக்கியமோ அல்லது வேறு சான்றுகள் ஏதேனும் இருக்கின்றனவா? அவ்வாறு இல்லாத பொழுது எந்த அடிப்படையில் சாதிகள் ஏற்றத் தாழ்வுடன் அமைக்கப்பட்டன?

மேலும் இறைவனின் அருள் பெற்றவர்களாக அறியப்பெறும் சித்தர்கள் எதனால் சாதி ஏற்றத்தாழ்வினை எதிர்க்க வேண்டும்? இறைவன் சாதியினைப் படைத்து இருந்தான் என்றால் அவன் படைத்ததை எதற்காக சித்தர்கள் மறுக்க வேண்டும்?

"சாதியாவது ஏதடா? சலம்திரண்ட நீரெலாம்
பூதவாசல் ஒன்றலோ, பூதம்ஐந்தும் ஒன்றலோ?
காதில்வாளி, காரை, கம்வி, பாடகம்பொன் ஒன்றலோ?
சாதிபேதம் ஓதுகின்ற தன்மைஎன்ன தன்மையோ?"
-ஆசான் சிவவாக்கியார்

"சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ ?
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு"
-ஆசான் கொங்கணச்சித்தர்

மேலும் சரி சென்ற பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மனிதன் இப்பிறவியில் சாதிகளில் பிறக்கின்றான் என்று கூறினால் மறுபிறப்பு என்பதே கிடையாது என்று சித்தர் கூறுகின்றனரே அது ஏன்?

கறந்த பால் முலைப் புகா, கடைந்த வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா,
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா,
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே

இவ்வாறு கேள்விகள் பல இருக்கின்றன...இவைகளுக்கு விடைகள் இருக்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில் ஆகும். சாதிகள் அடிப்படையில் இறைவன் மனிதர்களைப் பிரித்தான் என்பதற்கு சான்றுகளே இல்லை.

"அட என்னங்க பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்று இறைவன் மக்களைப் படைத்தான் என்று வேதத்துல சொல்லி இருக்குல...அப்புறம் எப்படி நீங்க இறைவன் சாதியின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்தான் என்பதற்கு சான்றுகளே இல்லை அப்படின்னு சொல்றீங்க" என்று சில நண்பர்கள் இங்கே கேள்விகள் கேட்கலாம். அவர்களுக்கு ஒரு கேள்வி...!!!

பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பன சாதிகளா? அவைகளும் பள்ளர், வன்னியர், தேவர், நாடார், பறையர், செட்டியார் போன்றப் பிரிவுகளும் ஒன்றா?

இல்லை தானே. பிராமணன்,சத்திரியன், வைசியன், சூத்திரன் என்பவைகள் வருணங்கள் எனப்படுபவை. அவைகளும் சாதிகளும் வெவ்வேறுப் பொருள் கொண்டவை. இன்னும் கூற வேண்டும் என்றால் நாம் மேலே கண்டுள்ள அனைத்து சாதிகளும் சரி மற்ற தமிழ் சாதிகளும் சரி அனைத்தும் சூத்திர வர்ணத்தின் கீழேயே வருகின்றன. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் இன்று தமிழகத்தில் இருக்கும் சாதிகளை இரண்டுப் வர்ணங்களுக்குள் அடக்கி விடலாம்...

ஒன்று ஐயர், ஐயங்கார் போன்றச் சாதிகள்...அவர்கள் பிராமண வர்ணத்தின் கீழ் சென்று விடுவர்.
பின்னர் பிராமணர்கள் அல்லாத மற்றவர்கள் அனைவரும் சூத்திர வர்ணத்தின் கீழ் வருவர் (சிலர் சற் சூத்திரர் எனப்படுவர்...சிலர் பஞ்சமர் வரிசையில் வருவர் அவற்றினைப் பற்றி நாம் பின்னர் விரிவாகக் காணலாம்).

"எவ்வாறு தமிழர்கள் எல்லோரும் சூத்திர வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றுக் கூறுகின்றனர்...இங்கே பல நண்பர்கள் தாங்கள் ஆண்ட இனத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் தாங்கள் சத்திரியர்கள் என்றும் கூறுகின்றனரே...அவ்வாறு இருக்க அனைவரும் சூத்திரர்கள் என்றுக் கூறுவது எங்கனம் முறையாகும்" என்று இங்கே நண்பர்கள் சிலர் சில சந்தேகங்களை முன் வைக்கலாம்....!!!

இந்த கேள்விக்கு நாம் விடையினைக் காண முயல வேண்டும் என்றால் நாம் வர்ணங்களைப் பற்றியும் அவை தமிழ் சமுதாயத்திற்கு உரியனவா என்றும் காண வேண்டி இருக்கின்றது.

இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்றும் இறைவனின் வாயில் இருந்து வந்தவர்கள் பிராமண வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறைவனின் கையில் இருந்து வந்தவர்கள் சத்திரிய வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறைவனின் தொடையில் இருந்து வந்தவர்கள் வைசிய வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் இறுதியாக இறைவனின் காலில் இருந்து தோன்றியவர்கள் சூத்திர வர்ணத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கருத்து நம் சமூகத்தில் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றது.

இப்பொழுது இந்தக் கருத்தினைத் தான் நாம் சில கேள்விகளுக்கு உள்ளாக்க வேண்டி இருக்கின்றது.

இறைவன் படைத்தான் என்று கூறுகின்றார்களே அதற்கு இலக்கியச் சான்றுகள் ஏதேனும் இருக்கின்றதா என்று நாம் வினவினால், சான்றுகள் வேதத்தில் இருக்கின்றது என்றே கூறுகின்றனர் (வேதங்கள் என்று அவர்கள் கூறுவது ரிக், யசுர், சாம மற்றும் அதர்வண வேதங்கள் ஆகும்). சரி வேதத்தில் இருக்கின்றதா என்று நாம் கண்டோமே என்றால் ரிக் வேதத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அத்தகையக் குறிப்பு வருகின்றது. மற்றபடி வர்ணங்களைப் பற்றி வேறு எந்தக் குறிப்புகளும் அவர்கள் கூறும் வேதங்களில் இல்லை. அவ்வாறு இருக்க நமதுக் கேள்வி இங்கே என்னவென்றால் வேதங்கள் என்று இன்று வழங்கப்பெறும் நூல்களில் ஏன் இத்தகையக் கருத்தினை இடைச் செருகலாக சிலர் நுழைத்து இருக்கக் கூடாது? சரி அது இருக்கட்டும்... இப்பொழுது வேதங்களுக்கு வருவோம்...!!!

ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் யாருக்கு உரியவை? இந்துக்களுக்கா? இன்று இந்துக்கள் என்றால் அவர்கள் சைவ வைணவ சமயத்தினைச் சார்ந்த மக்களே ஆவர். அவ்வாறு இருக்க அவ்வேதங்கள் அவர்களுக்கு உரியவை என்றால் அவர்களின் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் அவ்வேதங்களில் காணப்படவேண்டும் அல்லவா?

ஆனால் வேதங்கள் என்று இன்றுக் கூறப்படுபவைகளில், சிவன் என்றப் பெயரோ...கோவில் வழிபாடோ, சிவலிங்க வழிபாடோ, பெருமாள் வழிபாடோ, முருகன், பிள்ளையார், அம்மன் போன்ற தெய்வங்களின் பெயரோ எவையுமே காணப்படவில்லையே. மேலே நாம் கண்டவைகள் இல்லாது சைவ வைணவ சமயங்கள் கிடையாது. அவ்வாறு இருக்க ரிக், யசுர் சாம அதர்வண வேதங்கள் என்பன இந்துக்களுக்கு உரிய வேதங்கள் என்று எதனை வைத்துக் கூற முடியும்?

சிலர் ருத்திரன் என்ற பெயர் சிவனையும் விஷ்ணு என்றப் பெயர் பெருமாளையும் குறிக்கும் என்றுக் கூறினாலும், வேதத்தில் ருத்திரன் காற்றுக் கடவுளாகவும், விஷ்ணு வான் கடவுளாகவுமே குறிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பதனை அவர்களால் மறுக்க முடியாது.

மேலும் தமிழர் கூறும் நான் மறை வேதங்கள் வேறு 'ரிக், யசுர்,சாம அதர்வண வேதங்கள்' வேறு என்று பல தமிழ் அறிஞர்கள் ஆய்ந்து கூறிச் சென்று இருக்கின்றனர். அவ்வாறு இருக்க தமிழர்களுக்கும் சரி தமிழர் கடவுள்களுக்கும் சரி சற்றும் தொடர்பில்லாத நூல்களில் ஏதோ ஒரு இடத்தில் 'இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாக படைத்தான்' என்று வந்து இருப்பதை எவ்வாறு தமிழர்களுக்கு உரியதாக நாம் கருத முடியும்?

மேலும் ரிக், யசுர், சாம, அதர்வண வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட புனித நூல்கள் என்றால் இறையருள் பெற்றச் சித்தர்கள் அவற்றை எதற்காக தாக்க வேண்டும் என்றக் கேள்வியும் இங்கே இருக்கின்றது...

இட்டகுண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?
சுட்டமண் கலத்திலே சுற்றுநூல்கள் ஏதடா?
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியைப்
பற்றிநின்றது ஏதடா பட்டநாத பட்டரே. - சிவவாக்கியர்

சரி ...சுருக்கமாக காண வேண்டும் என்றால்,

1) இறைவன் மனிதனை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்பது இன்று வேதங்கள் என்று வழங்கப்படுபவைகளில் உள்ள இடைச் செருகலே ஆகும்.
2) அவ்வேதங்களுக்கும் சைவ வைணவ சமயங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.
3) சைவ வைணவ சமயங்களுக்கும் நான்கு வர்ணங்களுக்கும் தொடர்பு இல்லை என்றால் இந்திய மக்களுக்கும் அந்த வர்ணங்களுக்கும் யாதொரு தொடர்பும் கிடையாது.

அவ்வாறு மனிதர்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வர்ணங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்பில்லாத பட்சத்தில் எவ்வாறு சில சாதிகள் பிறப்பிலேயே உயர்ந்ததாகவும் சில சாதிகள் பிறப்பிலேயே தாழ்ந்ததாகவும் ஆகும்?

(மேலே உள்ள கருத்துக்கள் வேறு தொடரில் விரிவாக விளக்கப்பட்டு இருப்பதனால் அதனை இங்கே விலாவரியாக கூறவில்லை. அக்கருத்துகளைப் பற்றி அறிய விரும்பும் நண்பர்கள் இப்பதிவுகளைப் படிக்கலாம்- முகப்பு(http://vazhipokkanpayanangal.blogspot.in/2013/03/blog-post.html) , வேதங்களும் சைவ வைணவமும்(http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/06/30.html), வேதங்கள் எனப்படுபவை யாதெனின் -1 (http://vazhipokkanpayanangal.blogspot.in/2012/08/1_25.html))

சரி இருக்கட்டும்... இப்பொழுது வர்ணங்களுக்கும் இந்திய மக்களுக்கும் தொடர்புகள் இல்லை என்றுக் கண்டு இருக்கின்றோம்...ஆனால் அவ்வாறு நாம் கூறுவதற்கு நாம் மேலே கண்டுள்ள விடயங்கள் போதுமா என்றால் இல்லை என்றே பதில் வரும். அந்நிலையில் நாம் மேலும் சில விடயங்களைப் பற்றிப் பார்க்க வேண்டி இருக்கின்றது.

வேதத்தில் ஒரே இடத்தில் வரும் வர்ணங்களைப் பற்றி விலாவரியாக பேசும் ஒரு நூல் நம்மிடையே இருக்கின்றது. அதைத் தான் நாம் இப்பொழுது பார்க்க வேண்டி இருக்கின்றது.

அட அதாங்க மனு நூல்....!!!

காண்போம்...!!!



மனு நூல்...அல்லது மனு தர்ம சாஸ்திரம்.

இன்றைக்கு நம் நாட்டினில் 'தர்மம் காக்கவும்...தர்மம் தழைக்கவும்...' என்று பல இந்துத்துவ அமைப்புகள் முழங்குவது எல்லாம் மேலே நாம் கண்டுள்ள மனு தர்மத்தையே ஆகும். அப்படிப்பட்ட ஒரு நூலினைப் பற்றியே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது. காரணம் இறைவன் மனிதர்களை நான்கு வர்ணமாகப் படைத்தான் என்று வேதத்தில் ஒரு வரியோடு நின்று விட்ட ஒரு விடயத்தினைப் பற்றி விரிவாக பேசுவது இந்த நூலே ஆகும். பிறப்பால் இவர் உயர்ந்தவர் இவர் தாழ்ந்தவர் என்று கூறும் நூலினை நாம் சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பற்றிப் பார்க்கும் பொழுது நிச்சயம் காணத் தானே வேண்டி இருக்கின்றது.

"அந்த பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் முகம் தோள் தொடை பாதம் இவைகளில் இருந்து உண்டான பிராமண, சத்திரிய, வைசிய சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு உபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்" - மனு அத்தியாயம் 1 - 87

"நாலு வருணத்தாருக்குள் பிராமணன் சத்திரியன் வைசியன் இம்மூவரும் இரண்டு விதமாகப் பிறப்பதனால் துவிஜாதிகள் என்று சொல்லப்படுகின்றார்கள். சூத்திரனுக்கு உபநயம் முதலியன இல்லாததால் ஒரு சாதியாகவே இருக்கின்றான். இந்த நான்கு வருணத்தார் தவிர ஐந்தாவது வருணத்தான் கிடையாது." மனு அத்தியாயம் 10 - 4

பிரம்மா மனிதர்களை நான்கு வர்ணங்களாகப் படைத்து அவர்களுக்கென்று தனித்தனி கர்மங்களை வகுத்து வைத்தார் என்றும் இவர்களைத் தவிர வேறு வருணத்தார் கிடையாது என்றக் கருத்தினை நாம் மேலே உள்ள மனு தர்ம வசனங்களால் அறிந்துக் கொள்கின்றோம். ஆனால் அக்கருத்துக்கள் மட்டுமே அங்கே கூறப்பட்டு இருக்கவில்லை...கூடுதலாக பிராமண, சத்திரிய மற்றும் வைசிய வருணத்தினைச் சார்ந்தவர்கள் துவிஜாதிகள் என்றுக் குறிக்கப்பட்டு இருக்கின்றது. சூத்திரன் துவிஜாதி அல்ல என்றும் கூறப்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் துவிஜாதி என்றால் என்ன என்றே நாம் இப்பொழுது காண வேண்டி இருக்கின்றது.

துவிஜாதி என்றால் இருப்பிறப்பாளர்கள் என்றே, அதாவது இரண்டு முறை பிறந்தவர்கள் என்றே அர்த்தம் வரும். ஒரு மனிதன் ஒருமுறைப் பிறப்பான் அதில் நமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை...ஆனால் இங்கே இரண்டு பிறப்பு பிறக்கின்றார்கள் என்றே கூறுகின்றார்களே அது ஏன்? மேலும் அது என்ன இரண்டாம் பிறப்பு என்றக் கேள்விகள் இங்கே இயல்பாக எழும் தானே. அக்கேள்விகளுக்கு விடையினைத் தேடினால் மனு தர்மத்திலேயே விடை கிட்டுகின்றது.

"துவிஜனுக்கு முதற்பிறப்புத் தாயாலும், இரண்டாவது உபநயநத்தாலும் மூன்றாவது எக்கிய தீட்சையிலாலும் உண்டாகின்றது என்று வேதத்திற் சொல்லப்படுகின்றது." மனு அத்தியாயம் 2 - 169

அதாவது இரு பிறப்பாளர்கள் எனப்படும் முதல் மூன்று வருணத்தார் முதல் பிறப்பினை தாயிடம் இருந்து பெறுகின்றனர் என்றும் இரண்டாவது பிறப்பு உபநயம் செய்வதன் மூலமாகவும் பெறுகின்றனர் என்றுமே நாம் மேலே உள்ள வசனத்தின் மூலம் அறிந்துக் கொள்ளுகின்றோம். மேலும் மூன்றாவது பிறப்பினைப் பற்றிய ஒரு குறிப்பும் அங்கே இருக்கின்றது, ஆனால் அது இப்போதைக்கு நமக்குத் தேவை இல்லாததால் அதனைப் பற்றி நாம் காண வேண்டியதில்லை.

இது வரை நாம் கண்ட விடயங்களின் படி உபநயம் செய்வதால் மட்டுமே பிராமண, சத்திரிய, வைசிய வருணங்களைச் சார்ந்தோர் இருப்பிறப்பாளர்கள் என்று அறியப்படுகின்றனர் என்றும் உபநயம் செய்ய தடை உள்ளதால் சூத்திர வருணத்தார் ஒருப் பிறப்பினை மட்டுமே உடையவராய் இருக்கின்றனர் என்றும் நாம் அறிந்து இருக்கின்றோம். இந்நிலையில் தான் மற்றுமொரு மனு தர்ம வசனத்தைக் காண வேண்டி இருக்கின்றது.

"உபநயம் செய்துக் கொள்வதற்கு முன்னால் இவன் சூத்திரனுக்கு ஒப்பானவன். ஆனால் மாதா பிதா கர்மத்தில் மாத்திரம் அதற்கு வேண்டிய வேத மந்திரத்தைச் சொல்லலாம்." மனு அத்தியாயம் 2 - 172

உபநயம் செய்தால் இருப்பிறப்பாளர்கள் ஆகின்றனர் என்றுக் கண்டோம் சரி...ஆனால் இங்கே அவன் உபநயம் செய்யும் வரை, அது பிராமணனாக இருக்கட்டும்...சத்திரியனாகஇருக்கட்டும்...வைசியனாக இருக்கட்டும் , அவர்கள் சூத்திரர்களாகவே காணப்படுவர் என்றே கூற்று வருகின்றதே.

இதன் படி பார்த்தோம் என்றால் தாயின் மூலம் வரும் முதல் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகவே பிறக்கின்றனர் என்றே பொருள் வருகின்றதே. சூத்திரனாக பிறந்த ஒருவன் உபநயம் செய்துக் கொள்வதன் வாயிலாகவே இரு பிறப்பாளன் ஆகின்றான் என்றால்,

பிரமன் படைக்கும் போதே பிராமணன் ஆக படைத்தான் சத்திரியனாகப் படைத்தான் என்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய் விடுகின்றதே. ஏனென்றால் ஒருவன் உபநயம் செய்யாமல் இருந்தால் அவன் மனு தர்மத்தின் கூற்றின் படி இறுதி வரை சூத்திரனாகவே தானே இருப்பான்.

மேலும் சூத்திரத்தன்மையோடு இருப்பவர்கள் உபநயம் செய்வதன் மூலம் உயர் நிலையை அடைகின்றனர் என்றால் இவர் தான் உபநயம் செய்ய வேண்டும் என்றும் இவர்கள் எல்லாம் செய்யக் கூடாது என்று எதன் அடிப்படையில் யார் பிரித்துக் கூற முடியும்? ஏனெனில் முதற் பிறப்பில் அனைவரும் சூத்திரர்களாகத் தானே பிறக்கின்றனர். அவர்களுள் எவ்வாறு பிறப்பின் அடிப்படையில் வேற்றுமைகளைக் காண முடியும்?

மேலும், பிராமண சத்திரிய வைசிய சூத்திர வர்ணங்கள் ஆகிய நான்கு வர்ணங்களைத் தவிர வேறு வர்ணங்கள் இல்லை என்றே மனு தர்மத்தில் வருகின்றது...ஆனால் பஞ்சமர் என்ற வர்ணம் கடவுளில் இருந்து வாரா ஒரு வர்ணமாக இன்று அறியப்படுகின்றது. நிற்க.

இப்பொழுது ஏன் இந்த முரண்பாடுகள் என்றே நாம் காண வேண்டி இருக்கின்றது. அதற்கு முன்னர் சில விடயங்களை நாம் அறிந்துக் கொள்வது நலமாக இருக்கும்.

1) இப்பொழுது இலங்கை ஈழத் தமிழர்களின் மேல் படை எடுத்துச் சென்று போரில் வெற்றிப் பெற்று இருக்கின்றது. இந்நிலையில் ஈழத்தமிழர்கள் அங்கே அடிமையாக இருப்பர். சிங்களவர்களின் சட்டங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டுத் தான் ஆக வேண்டும். ஆனால் சிங்களவர்களின் சட்டம் தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்கள் மேல் செல்லுபடியாகாது. சரி தானே.

அதைப் போல் தான் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இந்தியாவின் வடக்குப் பகுதியை பிடித்த ஆரியர்கள் அவர்கள் பிடித்த பகுதியை ஆரிய வர்த்தம் என்று அழைத்துக் கொண்டு, அப்பகுதிகளில் வாழ்ந்த இந்தியர்களை அடிமைகள் என்ற பொருள்படி சூத்திரர்கள் என்றுக் குறித்து சட்டம் இயற்றினர். அச்சட்டம் தான் மனு தர்மம்.

அதாவது ஆரியர்களின் ஆட்சிக்கு உட்பட்டு இருந்த இடத்தில் வாழ்ந்த மக்களுக்காக ஆரியர்களால் இயற்றப்பட்ட ஒரு சட்ட நூல் தான் மனு தர்மம். அச் சட்டத்தின் படி,

பிராமணர்கள் - ஆரிய பிரோகிதர்கள்
சத்திரியர்கள் - போர் செய்யும் ஆரியர்கள்
வைசியர்கள் - வணிகம் செய்யும் ஆரியர்கள்

என்ற ஆரியப் பிரிவுகள் உயர்ந்ததாகவும்....அங்கே வாழ்ந்து வந்த இந்திய மக்கள் அனைவரும் அடிமைகள் என்று குறிக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சூத்திர பிரிவு தாழ்ந்ததாகவும் அமைக்கப்பட்டது.

அவர்களின் ஆட்சிக்கு அடிபணியாத மற்ற தேசங்களில் ஆரியர்களின் செல்வாக்கும் செல்லாது அவர்களின் சட்டமும் செல்லாது என்பதனால் அவர்கள் பஞ்சமர் அல்லது எதிரிகள் என்று குறிக்கப்பட்டனர்.

2) இருப்பிறப்பாளர்கள் என்றச் சொல் ஆன்மீகச் சான்றோர்களைக் குறிக்கும் சொல். முதல் பிறப்பு மானுடப் பிறப்பு...இரண்டாம் பிறப்பு ஆன்மீகப் பிறப்பு. இதற்கும் உபனயதிற்கும் யாதொரு தொடர்பும் கிடையாது. (இருப்பிறப்பினைப் பற்றி நாம் மற்றதொரு பதிவில் காண்போம்)

இந்தியாவின் மேல் படை எடுத்து வந்த ஆரியர்கள், இந்தியாவில் நிலவிய பல வழக்கங்களைக் கைப்பற்றிக் கொண்டு அதன் அர்த்தங்களை காலங்களில் மாற்றிக் கொண்டனர்.

சற்று புதிதான/புதிரான கூற்றுகளாகத் தானே இருக்கின்றன. இப்பொழுது இவற்றைப் பற்றித் தான் நாம் விரிவாகக் காண வேண்டி இருக்கின்றது.

காண்போம்....!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக