தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

இன்றே அறிந்து கொள்ளுங்கள், வாழைப்பூவின் மகத்துவம்!



நாம் கொஞ்சம் அரிதாக உணவில் சேர்த்துக்கொள்ளும் பூ, வாழைப் பூ. ஆனால் நாம் கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள


வேண்டிய பூ இது. வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவக் குணமுள்ளவையே. வாழைப் பூவின் துவர்ப்புச் சுவை நாம் அறிந்த விஷயம். அந்தத் துவர்ப்பைப் போக்க பெண்கள் பலமுறை தண்ணீர் விட்டுக் கசக்கிப் பிழிந்து எடுத்துவிடுகிறார்கள். துவர்ப்பு இருந்தால் சுவையிருக்காது என்பது அவர்களின் எண்ணம். ஆனால் துவர்ப்பு இருந்தால் ஊட்டச்சத்து வீணாகாமல் உடம்புக்கு வைட்டமின் ‘பி’ கிடைக்கிறது. பல வியாதிகளும் நிவர்த்தி அடைகின்றன. தற்போது சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப் பூவைச் சுத்தம் செய்து, சிறிது சிறிதாக நறுக்கி, அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினை சுரக்கச்செய்யும். சர்க்கரை நோயும் கட்டுப்படும். மலம் கழிக்கும்போது ரத்தமும் சேர்ந்து வெளியேறுவதை ரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப் பூவை உணவில் சேர்த்து வந்தால் ரத்த மூலம் வெகு விரைவில் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டு வந்தால் உடல் சூடு குறையும்.

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக் கடுப்பு உண்டாகும். அவர்கள் வாழைப் பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்கவைத்து வடி கட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்திவந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும். பெண்களுக்கு வாழைப் பூவை ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப் போக்கு ஏற்படும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தைப் பாதியளவு எடுத்து நசுக்கிச் சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. அவர்கள் வாழைப் பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். கை, கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப் பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு, எண்ணை சேர்த்து வதக்கி, கை, கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் எரிச்சல் குணமாகும். வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப் பூ ரசம் செய்து அருந்தி வந்தால் இருமல் நீங்கும். வாரம் இருமுறை வாழைப் பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் தாது விருத்தி அடையும். சிலர் குழந்தையின்மையால் மனவேதனைக்கு ஆளாவார்கள்.


அவர்களுக்கு, வாழைப் பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத் தன்மையைப் போக்கும். இப்படி வகை வகையாய் நன்மைகளை வாரி வழங்கும் வாழைப் பூவை கொஞ்சம் தேடிப் பார்த்து சமையலில் சேர்த்துப் சாப்பிடலாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக