தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 7 டிசம்பர், 2013

கால பைரவர்!!


காலபைரவாஷ்டமி பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்:அஷ்டமி திதியில் சம்பவிக்கும் சில முக்கிய நிகழ்வுகளான கோகுலாஷ்டமி, த...ுர்காஷ்டமி, பீஷ்மாஷ்டமி போன்றவற்றிற்குச் சற்றும் முக்கியத்துவம் குறைவில்லாமல் விளங்குவது கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில் வரும் கால பைரவாஷ்டமி ஆகும். இது மகா தேவாஷ்டமி என்று வட இந்தியப் பஞ்சாங்கப்படி மார்கசீர்ஷ மாதம் தேய்பிறை அஷ்டமியின்போது அனுசரிக்கப்படுகிறது. இதுவே மகேசனின் தோற்றமான கால பைரவருக்கு உகந்த நன்னாளாகும்.


பைரவர் தன்னை அண்டியவர்களுக்கு உண்டாகும் பய உணர்வைப் போக்குபவர், கெடுமதியுடையோர்அஞ்சி நடுங்கும் வண்ணம் பயத்தை உண்டாக்குபவர். கால பைரவர் (அ) வைரவர் என்று தமிழகத்திலும், அன்னதானி என கர்நாடகாவிலும்,பைரோன், பைராத்தியா, பேரூஜி என்று ராஜஸ்தான் முதலிய வடஇந்திய மாநிலங்களிலும் அழைக்கப்படுகிறார்.
உக்ர வடிவில், அழித்தல் செயலுக்கு அதிபதியாகவும், கிராம தேவதை, ஊர்க் காவல் தெய்வம், அஷ்ட திக்குகளை இரட்சிப்பவராகவும் விளங்குகிறார். காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் பைரவர். தேவிக்கு உரிய சக்திப் பீடங்களில் அவளுக்குத் துணை நின்று காப்பவராக விளங்குகிறார். தாந்த்ரீகர்களால் உபாசிக்கப்படுபவர். சைவசமய உட்பிரிவைச் சார்ந்த காளாமுகர், கபாலிகர், அகோரப் பிரிவினரால் பூஜிக்கப்படுபவர்.


பார்த்தாலே மனதைப் பதற வைக்கும் இவரது தோற்றங்கள். நாகங்களைக் காது குண்டலங்களாகவும், கைகளில் காப்பு, கங்கணமாகவும், கால்களில் தண்டையாகவும், மார்பில் உப வீதமாகவும் (பூணூல்) அணிந்து, இடையில் புலித் தோல் தரித்து, மானிட கபாலம் எலும்புகளை மாலையாக அணிந்து, கைகளில் சூலம், பிரம்புடனும், ஸ்வானம் (நாய்) வாகனமேறி ருத்ரரூபமாய்க் காட்சி அளிப்பார்.
காலச் சக்கரத்தை இயக்கும் பரம்பொருள் பைரவர். அதையும் அடுத்து, சனி பகவானின் குருவாக விளங்குவதால், ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி பாதிப்புகளிலிருந்து மீளவைப்பவராவார்.
மகா காலேஷ்வர், உஜ்ஜயனி, காசி கால பைரவர், சோமுக பைரவர், கேத்ரி, ராஜஸ்தான், சதாரா வர்னேகாவ் பைரவர், தருமபுரி அதியமான் கோட்டை மல்லிகார்ஜுநேஸ்வரர் கோயில் பைரவர், திருவிசை நல்லூர் சிவ யோகிநாதர் கோயில் சதுர் கால பைரவர் போன்ற பைரவர்கள் பற்பல சிறப்புகள் கொண்டதாகத் திகழ்கின்றனர்.


12 ராசிகளையும் அவற்றிற்குரிய நட்சத்திரங்களையும் தனது உடல் பாகங்களாகக் கொண்டவர். இந்தச் சிறப்புமிக்க வடிவத்தை மன்னன் அதியமான் நெடுமான் அஞ்சி தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டை மல்லிகார்ஜுநேச்வரர் கோயில் வளாகத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டில் நிர்மாணித்துள்ளான். இது தோஷங்களைப் போக்கும் ஒரு பரிகாரத் தலமாக விளங்குகிறது. அவரவர்க்குரிய ராசிப்படி, பைரவரின் அங்கத்தை வழிபட்டால் தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது நியதி.
அவையாவன- தலை-மேஷம். முகம், கழுத்து-ரிஷபம்,கைகள்-மிதுனம், மார்பு-கடகம், வயிறு-சிம்மம், இடுப்பு-கன்னி, பிறப்புறுப்பு-துலாம், தொடைகள்-விருச்சிகம், முழங்கால்-தனுசு, ஆடுசதைக் கால்பகுதி-மகரம், கணுக்கால் பாதம்-கும்பம், பாதவிரல்கள், கால் அடிபாகம்-மீனம்.
ஈசனுக்குப் பஞ்ச முகார்ச்சனை, கந்தனுக்கு ஷண்முகார்ச்சனை செய்விப்பது போல், பைரவருக்கு எட்டுப் பண்டிதர்கள் சுற்றி நின்று, தும்பை, செம்பருத்தி, ஆத்தி, கொன்றை, ஊமத்தை, செண்பகம், கள்ளி, நெருஞ்சி ஆகிய மலர், தளிர், இலைகளைக் கொண்டு சிறப்பாக அஷ்டவித அர்ச்சனை செய்வது வழக்கம். அதைத் தொடர்ந்து, பைரவரை மகிழ்விக்க எட்டுவிதமான அன்னவகைகள், முக்கியமாக நெய்யில் ஊறிய வடை, தேனில் அமிழ்த்திய வடை, தேனில் ஊறவைத்த இஞ்சி முதலியவை இடம் பெறும்.
ஒரு சிறிய துணியில் மிளகைக் கட்டி அகலில் வைத்து நல்லெண்ணெயை ஊற்றி தீபம் ஏற்றி 12 ஞாயிறு ராகு கால பூஜை மூன்று தேய்பிறை அஷ்டமி பூஜை செய்து வழிபட வாழ்வில் வளம் பெருகும். தேங்காய் மூடியில் நெய் தீபம் ஏற்றியும் தொழலாம். மற்றும் சாம்பல் பூசணிக்காயை நடுவே இரண்டாகப் பிளந்து எண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறந்தது.


அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அந்நன்னாளில் நாமும் பைரவரை வழிபட்டால் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப் பெறுவோம் என்பது நம்பிக்கை. பொதுவாக பைரவர் தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். சிலவிடங்களில் வாகனம் இடப்பக்கம் தலை உள்ளவாறு காணப்படும். மிகவும் அதிசயமாக சிற்சில தலங்களில் மட்டும் இரு பக்கங்களிலும் நாய் வாகனங்களுடன் காட்சி தரும் பைரவர் மிக்க சக்தி வாய்ந்தவராவார்.அவரைத் தொழுவது சாலச் சிறந்தது.
பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிட்டும். அந்தி நேரத்தில் வழிபட, செய்துள்ள பாபம் எல்லாம் விலகும். அர்த்த சாம வழிபாட்டால் மனச்சாந்தியும்,கல்வி கேள்விகளில் தேர்ச்சியும் வளமான வாழ்வும் பெறலாம்.



ஓம் காலகாலாய வித்மஹே காலாத்தாய தீமஹி
தன்னோ கால பைரவ பிரசோதயாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக