தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, June 27, 2017

இந்த நாளில் வீட்டு வாசலில் விளக்கு ஏற்றுங்கள்! லட்சுமி தேடி வரும்!!!

விளக்கு வழிபாடு என்பது, நமது அன்றாட வாழ்வில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் நமது வீட்டுக்கு தெய்விகப் பேரொளியும் லட்சுமி கடாட்சமும் ஒரு சேர வருவதாக ஐதீகம்

பெண்கள் காலையில் எழுந்ததும் விளக்கேற்றி இஷ்ட தெய்வத்தை வழிபட்டு, அதன் பிறகு அன்றைய வேலைகளைச் செய்யத் தொடங்கும்போது மனதில் உற்சாகமும் செயலில் ஒரு உத்வேகமும் பிறக்கும்

புராண இதிகாச காலங்களில், நமது மகரிஷிகள் யாகங்களையும், ஹோமங்களையும் செய்து இறைவனை வழிபட்டனர். இப்போது இதுவே எளிமையாக்கப்பட்டு சகலரும் தங்களது அன்றாட வாழ்வில் கடைப்பிடிக்கும் விதமாக விளக்கு வழிபாடு, திருவிளக்கு பூஜை எனச் செய்யப்படுகின்றது.

இறைவனை ஜோதி வடிவில் வழிபாடு செய்வதால், மனித வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகுகின்றது. ‘காஸ்மிக் பவர்’ என்று சொல்லப்படும் பிரபஞ்ச சக்தியை நமக்குப் பெற்றுத் தரும் சிறிய வடிவிலான ஆன்ட்டனா என்று கூட சொல்லலாம்.

விளக்கு வழிபாடு சுற்றுப்புற இருளைப் போக்குவதோடு, மனதின் இருளையும் அகற்றுகிறது. விளக்கின் சுடரொளியில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதியும் எழுந்தருளுவதாக ஐதீகம். இதனால்தான் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒன்றாகப் பெறலாம்.

விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றுவது நல்லது. பசுநெய் தீபத்தில் அம்பாள் வாசம் செய்வதாக நம்பப்படுவதால், அதை ஏற்றும்போது சிவமாகிய ஜோதியுடன் இணைந்து சிவசக்தி சொரூபமாகிறது.

விளக்கு வழிபாட்டை தினந்தோறும் கடைப்பிடிக்கும் இல்லங்களில் தெய்வபலம் பெருகுவதால், தீய சக்திகள், செய்வினைகள், திருஷ்டிகள் எதுவும் அணுகாது.

வெள்ளிக்கிழமை, வீட்டுவாசலில் மாக்கோலம் இட்டு, அதன் நடுவில் விளக்கை ஏற்றிவைத்து, வீட்டு பூஜையறைக்குள், அந்த விளக்கைக் கொண்டு வந்து வைத்தால், விளக்குடன் மகாலட்சுமியும் வீட்டுக்கு வருவதாக நம்பிக்கை. வீடுகளில் காலை மாலை இரண்டுவேளைகளிலும் விளக்கேற்றுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்க்கையை ஒளிமயமாக்கும்.

பொதுவாக விளக்கு ஏற்றினால், எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். விளக்கை ஏற்றியதிலிருந்து குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை வீசி அணைக்கக்கூடாது. வாயால் ஊதியும் அணைக்கக்கூடாது. விளக்கு என்றல்ல கற்பூரம், மெழுகுவர்த்தி என்று எதையும் வாயால் ஊதி அணைக்கக் கூடாது. சாஸ்திரப்படி பஞ்சபூதங்களாக நெருப்பு, நீர், நிலம், காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் நாம் வழிபடுவதால், ஒன்றால் ஒன்றை அணைக்கக்கூடாது.

பூக்களால் சாந்தப்படுத்தி அணைக்க வேண்டும். இதையும் பெண்கள்தான் செய்ய வேண்டும். ஆண்கள் செய்யக்கூடாது. தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும்.
27 Jun 2017
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1498571013&archive=&start_from=&ucat=1&

No comments:

Post a Comment