தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, June 25, 2017

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நயினை மூல விக்கிரகம்


நயினை நாகபூசணி அம்மன் ஆலய மூலஸ்தானத்தில் இந்திரனால் அமைக்கப்பட்ட ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்ட அம்பாளின் உருவமும் சுயம்பாக உள்ள ஐந்து தலை நாகமும் காட்சி அளிக்கின்றன. கருங்கல் அல்லாத கல்லினால் அமைக்கப்பட்ட இப் பீடத்தில் பல சிறப்பு சிற்ப வடிவங்களும் ஜலஜந்துக்களும் பஞ்சாசன அமைப்பும் காணப்படுகின்றன. சுயம்பாக தோற்றம் பெற்ற ஐந்து தலை நாகத்தின் கீழ் அம்பிகை உருவம் அமர்ந்து நாகமும் அம்பிகையும் சேர்ந்து சிவசக்தி வடிவமாக மூலவிக்கிரகம் காட்சியளிக்கின்றது. சிற்ப வடிவில் செதுக்கியோ செப்புருவாய் வார்த்தெடுத்தோ பிரதிஷ்டை செய்யப்படாது தாமாகவே தோன்றிய வழிபாட்டிற்குரிய தெய்வ உருவங்கள் சுயம்பு மூர்த்தங்கள் என வழங்கப்படும். இவ்வாறாக அமையப்பெற்ற அம்பாளின் விக்கிரகம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதற்கு முன்பதாகவே சுயம்பு நாக பிரதிஸ்டை ஏற்பட்டுள்ளது எனவும் இந்த நாகம் பதினான்காயிரம் வருடங்கள் பழமைவாய்ந்தது எனவும் ஆட்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நாகத்தினுடைய வால் எங்கு முடிவடைகின்றது என்று அறியமுடியாத ஒன்றாகவே உள்ளது. எனினும் நயினாதீவுக்கு அண்மையில் உள்ள புளியந்தீவு நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள சிவிலிங்கம் இந்த நாகத்தின் வாலில் இருந்து வெளிக்கிளம்பி இருக்கலாம் என்ற ஆழமான நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆலயங்கள் பொதுவாக நாசரம் வேசரம் திராவிடம் என்ற மூவகைப் பாணிகளில் அமைக்கப்படுகின்றன அந்த வகையில் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயம் திராவிட பாணியில் அமையப் பெற்றுள்ளது. இராமலிங்க இராமச்சந்திரரால் 1788 ஆம் ஆண்டு நயினாதீவின் வடகிழக்கு கரையோரமாக சிறிதாக அமைக்கப்பட்ட கற்கோயில் காலத்திற்கு காலம் இடம்பெற்ற புதிய புதிய திருப்பணிகளினாலும் புணரமைப்புக்களினாலும் பொலிவு பெற்று இன்று நான்கு இராஜகோபுரங்களுடன் கூடிய சிற்ப கோயிலாக காட்சியளிக்கின்றது.

நயினை நாகபூசணி அம்மன் ஆலய புனித தீர்த்தமாக கங்காதரணி விளங்குகின்றது இத் தீர்த்தமானது ஒரு ஆன்மீக அலையைக் கொண்டது ஈழத்துச் சித்தர்களில் ஒருவராக போற்றப்படும் நயினை சித்தரான ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமிகளின் திருவுளத்தின் படி உருவானதே இக் கங்காதரனி என்ற புனித தீர்த்தம். சுவாமிகள் தனது சீடர்களில் ஒருவரால் நயினாதீவின் மேற்கு கடலோர மாக கங்காதரணி தீர்த்தக் கேணியினை அமைப்பித்தார் நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் தீர்த்த திருவிழா அன்று இந்த தீர்த்தக் கேணியிலேயே தீர்த்தமாடி மெய்யடியார்களுக்கு அருள்பாலித்து வருகின்றாள். அடியார்கள் புனித தீர்த்தத்தில் நீராடி தம் பாவவினைகள் அறுத்து பரமானந்த பெரும் பேற்றை பெறுகின்றார்கள் .இவ் ஆலய தல விருட்சம் வன்னி மரம் ஆகும் இம்மரமானது ஆலய கிழக்கு வாயில் கோபுரத்திற்கு பககத்தே உள்ளது

No comments:

Post a Comment