தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, April 16, 2017

தோப்புக்கரணம் கொடுக்கும் பலன்கள் என்னென்ன?

பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே, யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம். அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை.
தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்?
தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும்,அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் பார்ப்போம்.
தோப்புக்கரணம் வந்த வரலாறு
கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான்.அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான்.
தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.
விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார்.கஜமுகாசுரனை அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.
தோப்புக்கரணம் போடுவதால் என்னென்ன பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்று பார்ப்போம்?
நமது முன்னோர்கள் விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தையும் வைத்திருந்தனர். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.
காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.
உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள 'சோலியஸ்' எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது .
தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி?
தோப்புக்கரணம் போடும் முறை
முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.
இடது கையால் வலது காது மடலையும்,வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.
கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.
வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
தலையை நேராக வைத்து,மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.
நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.
பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.
இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.
தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து செய்தாலே,நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை.
லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறும் என்கிறார்.
பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகிறார். பரீட்சைக்கு செல்லும் முன்பு விநாயகனை தரிசிக்க சொல்வதன் காரணமும் இதுவே.
யேல் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் அங், இடது கையால் தோப்புக்கரணம் போடுவதால், அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.
விநாயகர்
வெளிநாடுகளில் 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது. ஆனால், நம் முன்னோர்களோ வழிபாட்டின் ஒரு பகுதியாக இதை வைத்துள்ளனர். இதன் மூலம் நாம் விநாயகப் பெருமானிடம் ஆசியும் அருளும் பெறலாம். தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பெறலாம்.
பரபரப்பான இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்னைகள் இருக்கின்றன .நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்போம்.அப்போது தான் நம் உடல் மனம் நலம் பெறும். தினமும் விநாயகனை தரிசித்து தோப்புக்கரணம் போடுவோம். நாளும் நன்மைகள் பல பெறுவோம்.



No comments:

Post a Comment