தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, March 29, 2017

சர்க்கரைநோய்க்கு மருந்து... சிறுநீரகக் கற்களைத் தடுக்கும்... வாழவைக்கும் வாழைத்தண்டு சாறு!

வாழை மரத்தின் எந்தப் பாகத்தையும் வீண் என்று நம்மால் ஒதுக்கிவிட முடியாது. பழத்திலிருந்து நார் வரை வாழை தரக்கூடிய பயன்கள் ஏராளம். வாழை மரத்தின் தண்டு பொரியல், கூட்டு செய்து சாப்பிடப் பயன்படுவது. ஆனால், வாழைத்தண்டை ஜூஸாக்கிக் குடித்தால், பலன்கள் அதிகமாகக் கிடைக்கும். சிறுநீரகக்கோளாறுகளுக்கு பரவலாகப் பரிந்துரைக்கப்படும் முக்கியமான உணவு. அது மட்டும் அல்ல... இன்னும் எண்ணற்றப் பலன்களை வாரிக் கொடுக்கக்கூடியது வாழைத்தண்டு சாறு. அவை என்னென்ன? பார்க்கலாமா?
வாழைத்தண்டு சாறு
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்!
உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழைத்தண்டு சாறு நல்ல மருந்து. இது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் உதவும்.
ரத்தசோகையை குணப்படுத்தும்!
வாழைத்தண்டு சாறில் இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிக அளவில் உள்ளன. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும். எனவே, வாழைத்தண்டு சாற்றைத் தொடர்ந்து குடித்துவர ரத்தசோகை குணமாகும்.
சிறுநீரகப் பாதையை தூய்மைப்படுத்தும்!
சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்றுகளை நீக்கி, சிறுநீரகப் பாதையை சுத்தமாக்கும். வாரத்துக்கு மூன்று முறை இதன் சாற்றைக் குடித்துவந்தால், சிறுநீரகப்பாதையில் உள்ள தொற்று (Urinary Tract Infections) நீங்கும்.
சர்க்கரைநோய்க்கு மருந்து!
இது இன்சுலினை மேம்படுத்த உதவுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. இதன் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வதைத் தடுக்கும்.
வாழைத்தண்டு
நெஞ்செரிச்சலைப் போக்கும்!
அமிலத்தன்மையால் (Acidity) அடிக்கடி பாதிக்கப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வு தரும். நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளுக்கு இது சிறந்த மருந்து.
வயிற்றுக் கொழுப்பைக் குறைக்கும்!
சிறிது இஞ்சியை வாழைத்தண்டு சாற்றுடன் சேர்த்து குடித்துவர, வயிற்றில் உள்ள கொழுப்பு குறையும். இது செரிமானத்தை எளிதாக்கும். வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும். இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் ஒன்று அல்லது இரண்டு கப் சாற்றைக் குடித்தால் வயிறு நிரம்பிவிடும். சீக்கிரத்தில் பசி எடுக்காது.
மலச்சிக்கலைப் போக்கும்!
இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இதைக் கொடுக்கலாம்.
சிறுநீரகக்கற்களைத் தடுக்கும்!
வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். வாழைத்தண்டில் பொட்டாசியம் உள்ளது. எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. இவை இரண்டும் இணைந்து சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.
வாழைத்தண்டுகள்
எடையைக் குறைக்கும்!
தொடர்ந்து இதன் சாற்றைக் குடித்துவந்தால், உடல் எடை குறையும். சர்க்கரை மற்றும் கொழுப்பு உடனடியாக ரத்தத்தில் கலப்பதை இதன் சாறு தடுக்கும். கொழுப்பை உடலில் இருந்து நீக்கவும் உதவும். வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும்.
நச்சுப்பொருட்களை வெளியேற்றும்!
இது சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். நச்சுப்பொருட்களை உடலில் இருந்து வெளியேற்ற உதவும். வாழைத்தண்டு சாற்றில் ஏலக்காய் தூளைப் போட்டு குடிப்பதும் சிறுநீரகக்கல் வராமல் தடுக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்!
இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. வாரத்துக்கு மூன்று முறை இதை அருந்திவர, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
வாழைத்தண்டு சாற்றை அப்படியே குடிப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான். அப்படிக் குடிக்க முடியாதவர்கள் அதனுடன் மோர், ஆப்பிள் ஜூஸ் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம். ஆனால், இவ்வளவு பயன்களைகொண்டிருக்கும் வாழைத்தண்டு எல்லோருமே கண்டிப்பாகத் தவிர்க்கக் கூடாத ஒன்று. மருந்து, மாத்திரைகளோடு வாழ்வதை தவிர்க்க வாழைத்தண்டு சாறு உதவும்.

No comments:

Post a Comment