தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, March 24, 2017

ஓராண்டுக்கு பசி தாங்கும்… 122 டிகிரி வெயில் தாங்கும்… அதிசய மெத்தைப் பூச்சி

திசய ஒட்டுண்ணி மூட்டைப்பூச்சி. நமது வீடுகளின் அழையா விருந்தாளிகளாக எப்போதும் தங்கியிருக்கும். 3 மாதம் வெளிநாட்டிற்கு சுற்றுலா விசாவில் சென்று வந்தாலும், நம் வீட்டில் நமக்காக பசி தாங்கி காத்துக் கொண்டிருக்கும். மூட்டைப்பூச்சி களைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை தெரிந்து கொள்வோமா…
மூட்டைப்பூச்சிகள் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது. இல்லாத இடமேயில்லை எனும் அளவுக்கு எல்லா இடங்களிலும் வசிக்கும் திறன் பெற்றவை மூட்டைப்பூச்சிகள். ஓட்டல்கள், வீடுகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பள்ளிகள், வாகனங்கள், தியேட்டர்கள் என மனிதர்கள் வசிக்கும் எங்கும் மூட்டைப்பூச்சிகளும் வாழ்கின்றன.
பெரும்பாலும் இருக்கைகள், மெத்தை படுக்கையைச் சுற்றி எந்த இண்டு, இடுக்கிலும் அவற்றால் வசிக்க முடியும். எனவே இதை ஆங்கிலத்தில் ‘மெத்தைப் பூச்சி’ என்று பொருள்படும் வகையில் ‘பெட் பக்ஸ்’ என்றே அழைக்கிறார்கள். இதன் அறிவியல் பெயர் ‘சிமெக்ஸ் லெக்சூலரியஸ்’. ‘சிமிசிடாயி’ உயிரியல் குடும்பத்தை சேர்ந்தது.
வீடுகளில் 89 சதவீதமும், அடுக்கு மாடி குடியிருப்புகளில் 88 சதவீதமும், ஓட்டல்களில் 67 சதவீதமும், கல்லூரிகளில் 35 சதவீதமும், பயண இடங்களில் 9 சதவீதமும், 4 சதவீதம் தியேட்டர்களிலும் மூட்டைப்பூச்சி கடி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
கிராமப்புறங்களின் தூய்மை குறைந்த வீடுகளில் நிறைய மூட்டைப்பூச்சிகள் இருக்கும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கிறது. ஆனால் கிராமங்களைவிட நகரங்களில் 3 மடங்கு அதிகமாக மூட்டைப்பூச்சி தொல்லை நிலவுகிறதாம்.
மூட்டைப்பூச்சிகள் கடிப்பதால் நோய் பரவுவதில்லை. இதுவரை மூட்டைக்கடி வியாதிகள் எதுவும் அறியப்படவில்லை. ஆனால் அவை கடிக்கும்போது லேசான அரிப்பு ஏற்படும். சிலருக்கு சருமத்தில் சிவப்பு புள்ளிகள் உருவாகும்.
மெத்தை ஓரங்கள், மெத்தை விரிப்புகள் மற்றும் போர்வைகளின் ஓரங்களில் ரத்தத்துளிகள் அல்லது மூட்டைப் பூச்சிகளின் எச்சங்கள் இருக்கிறதா? என்று பாருங்கள். இது மூட்டையை கண்டுபிடிக்கும் வழியாகும். நம்மால் எளிதில் மூட்டைப்பூச்சிகளை கண்டுபிடிக்க முடியாது. எனவே மூட்டைப்பூச்சி ஒழிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் துணையுடன் அவற்றை கட்டுப்படுத்தலாம்.
பயணத்தின்போது மூட்டைப்பூச்சிகள் உங்கள் வீடுகளுக்கு விருந்தாளிகளாய் அழைத்து வரப்படலாம். எனவே பயணங்களின்போது பயன்படுத்திய உடைகளை வீட்டிற்கு வந்ததும், உடனே வென்னீரில் அமிழ்த்து துவைத்து பயன் படுத்துவதன் மூலம் வீடுகளில் மூட்டைப்பூச்சிகள் நுழைவதை தவிர்க்கலாம்.
மூட்டைப் பூச்சிகளால் ஒரு ஆண்டு முழுவதும்கூட உணவின்றி உயிர்வாழ முடியும். எனவே இருக்கை, படுக்கை, பை, டிரங்குப்பெட்டி போன்ற பொருட்கள் நமது பயன்பாட்டில் இருந்து நீண்ட காலம் விலகி இருந்தாலும் அதில் தங்கியிருக்கும் மூட்டைப்பூச்சிகள் உயிருடன் இருந்து மீண்டும் நம்முடன் ஒட்டிக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. 0 டிகிரி குளிர் நிலவினாலும், 122 டிகிரி வெப்பநிலை நிலவினாலும் மூட்டைப்பூச்சி களால் உயிர் வாழ முடியும்.
பகலில் மெத்தை, சுவிட்ச்போர்டு, போட்டோ பிரேம், சுவர் போஸ்டர், விரிசல் எதன் உள்ளும் ஒளிந்திருக்கும் மூட்டைப்பூச்சிகள், இரவில் நாம் வெளியிடும் கார்பன்–டை–ஆக்சைடு வாயுவால் ஈர்க்கப்பட்டு ரத்தம் குடிப்பதற்காக வெளியே வருகிறது.
மூட்டைப்பூச்சிகள் சிறந்த மயக்க மருத்துவர் போலத்தான் செயல்படும். உடலுக்குள் தனது உமிழ்நீரான ‘சாலிவா’ திரவத்தை செலுத்துவதன் மூலம் சில நொடிகளுக்கு அந்தப் பகுதியை மரத்துப்போகச் செய்கிறது. இதனால் வலியின்றி ரத்தம் உறிஞ்சப்படுவதால் உறக்கத்தின்போது பலரால் மூட்டைக் கடியை உணர முடிவதில்லை.
மூட்டைப்பூச்சிகளிடம் உள்ள ஒரே நல்ல பண்பு, வயிற்றுக்குப் போதுமான அளவுக்கு மட்டுமே ரத்தம் உறிஞ்சும். ஒருமுறை பசியாற்றிக் கொள்ளும் மூட்டைப்பூச்சி அடுத்ததாக 5 முதல் 10 நாட்களுக்கு மீண்டும் ரத்தம் உறிஞ்சுவதில்லை. தனக்கு பசியெடுக்கும் வரை அவை இனப்பெருக்க வேலைகளில் ஈடுபடும் அல்லது ஓய்வெடுக்கும்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முட்டைகளிட்டு குஞ்சு பொரிக்கக்கூடியது மூட்டைப்பூச்சி. கர்ப்ப காலத்தில் தினமும் 5 முதல் 10 முட்டைகள் இடும். ஒரு பெண் மூட்டைப்பூச்சி, தன் 6 மாத ஆயுள் காலத்தில் சுமார் 400 குஞ்சுகள் பொரிக்கும்.
- See more at: http://www.asrilanka.com/2017/03/24/42064#sthash.MOqBgyfr.dpuf

No comments:

Post a Comment