தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, December 20, 2016

எமனை விரட்டும் நமசிவாய மந்திரம்!

தொகுப்பு: சியாகினி சிறிபரன்
சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும் ஐந்து எழுத்துக்கள் மட்டுமே. அந்த ‘மா மந்திரம்’ திருவைந்தெழுத்து. மந்திர ராஜம், பஞ்சாட்சரம் போன்ற இதர பெயர்களாலும் இம்மந்திரம் ஓதப்படுவதுண்டு.
சிவ வழிபாட்டில் திருநீறும், ருத்திராட்சமும், புறச்சாதனங்களாக விளங்க ‘நமசிவாய’ எனும் திருவைந்தெழுத்து அகச்சாதனமாக விளங்குகிறது.
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயவே என திருஞான சம்பந்தரும்,
கற்றுணை பூட்டியோர் கடலினிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமசிவாயவே என திருநாவுக்கரசரும்,
நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே என சுந்தரரும் கூறியுள்ளனர்.
“நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க” என்றே மாணிக்கவாசகப் பெருமானும், தனது சிவபுராணத்தைத் துவக்கியுள்ளார்.
ஆதி மந்திரம் ஐந்தெழுத்து ஓதுவார் நோக்கும் மாதிரத்தும் மற்றை மந்திர விதி வருமே என சேக்கிழார் பெருமானும் ஆதிமந்திரம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இப்பஞ்சாட்சரமானது, தூல பஞ்சாட்சரம், சூக்கும பஞ்சாட்சரம், அதி சூக்கும பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என ஐந்து வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
நமசிவாய எனும் எளிய ஐந்தெழுத்துக்களே தூல பஞ்சாட்சரம் எனப்படும். ‘ந’ என்பது திரோதாண சக்தியையும், ‘ம’ என்பது ஆணவமலத்தையும், ‘சி’ என்பது சிவத்தையும், ‘வா’ என்பது திருவருள் சக்தியையும், ‘ய’ என்பது ஆன்மாவையும் குறிப்பிடுகின்றன. இப்பிறவியில் இன்பமாக வாழ விரும்புபவர்கள் ஓத வேண்டிய மந்திரமே நமசிவாய.
மேற்கூறிய ஐந்தெழுத்துக்களை இடம்மாற்றி ‘சிவாய நம’ என்று ஓதுவதே சூக்கும பஞ்சாட்சரம். தூலப் பஞ்சாட்சரத்தில் இரு மலங்களை பின்னுக்குத்தள்ளி, சிவத்தையும் சக்தியையும் முன்னிறுத்தி ஓதுதல் வேண்டும். முக்திப் பேறு விரும்புபவர்கள் ஓதக்கூடிய மந்திரம் இதுவே.
“சிவாய நம என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு நாளும் இல்லை “ என ஒளவைப் பிராட்டியும், “செம்பும் பொன்னாகும் சிவாயநம எண்ணில்” என திருமூலரும் இதன் சிறப்பைக் கூறியுள்ளார்.
சிவாய நம எனும் சூக்கும பஞ்சாட்சரம், நடராசப் பெருமானின் ஞானத் திருவுருவைப் பிரதிபலிப்பதாகவும் கூறுவார்கள். ‘சி’ உடுக்கை ஏந்திய திருக்கரத்தையும், ‘வா’ தூக்கிய திருவடியைக் காட்டும் இடது கரத்தையும். ‘ய’ அஞ்சேல் என்ற வலது அபய கரத்தையும், ‘ந’ அனலேந்திய இடக்கரத்தையும், ‘ம’ முயலகன் மீது ஊன்றிய திருவடியையும் குறிப்பனவாக உள்ளன.
சிவசிவ என்ற நான்கெழுத்து மந்திரமே அதிசூக்கும பஞ்சாட்சரம். மும்மலங்களை அறுத்தெறிந்த பின்னரும் தொடரும் வாசனா மலத்தையும் போக்க வேண்டும் என எண்ணுபவர்கள் ‘சிவசிவ’ என்ற காரண பஞ்சாட்சரத்தை ஓதி, உன்னத முக்திநிலையை எய்தலாம். ‘
சி’ என்ற ஓரெழுத்து மந்திரமே மகா காரண பஞ்சாட்சரம் என அழைக்கப்படுகிறது. மேற்கூறிய ஐந்துவகை பஞ்சாட்சரத்தில் பிந்தைய மூன்றிலும் ஐந்தெழுத்துக்கள் முழுமையாக இல்லாவிடினும்,
ஐந்தெழுத்து மந்திரத்திற்கு ஒப்பானதே. முதல் இரண்டை மட்டுமே நம்மைப் போன்ற எளிய மக்களால் ஓதி, அருள்பெற இயலும் வண்ணம் உள்ளது. ஞானியர், துறவியர் மட்டுமே இதர மூன்றை ஓதவல்லவர்கள்.
எப்போது ஓதலாம்?
எவர் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், நமசிவாய என்றோ சிவாய நம என்றோ ஓதலாம். எவ்வித பேதமும் இம்மந்திரத்திற்கு இல்லை.
திருமந்திரத்தில் திருமூலர் கூறியது
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சுமின் நச்சி நமஎன்று நாமத்தை விச்சுமின் விச்சி விரசுடர் மூன்றினும் நச்சுமின் பேர்நந்தி நாயகனாகுமே. திருமந்திரம்
இரவும் பகலும் சந்திக்கும் நேரம் காலை, உச்சிப் பொழுது, மற்றும் மாலை ஆகிய மூன்று காலங்களிலும் சிவாயநம என்னும் ஆதி மந்திரத்தை சொல்லி சிவபெருமானாரை வழிபட வேண்டும்.
காலை - சூரியன், உச்சி - நெருப்பு, மாலை - சந்திரன் என்றவாறு இந்த மூன்று வேளைகளிலும் மூன்று கண்களாக சூரியன், நெருப்பு, சந்திரன் நினைந்து வழிபட்டால் இந்த மூவரையும் சேர்த்து வணங்குவதே ஆகும்,
வீண் விவாதத்தை தவிர்த்து
எளிய வாது செய்வார் எங்கள் ஈசனை ஒளியை உன்னி உருகும் மனத்தராய்த் தெளிய ஓதி சிவாயநம என்னும் குளிகை இட்டுப் பொன்னாக்குவன் இக்கூட்டையே. திருமந்திரம்
வீணாக விவாதம் செய்வதை விட்டுவிட்டு அஞ்ஞான இருளை நீக்கும் ஞான ஒளியாகிய ( அறிவுமயமான) சிவபெருமானாரை மனத்தில் நினைந்து உருகும் மனத்துடன் ஐந்தெழுத்தை கணிக்க வேண்டும் (செபித்தல்)
நாமாவளியைச் சிந்திக்கும் பொழுது மனதில் வேறு நினைவுகள் இருக்கக் கூடாது. சிவாயநம என்னும் மந்திரத்திற்குரிய சிவபெருமானாரையே நினைத்து உருகிய உள்ளத்துடன் செபித்தல் வேண்டும்.
இதனால் ஆணவம் நீங்கும், ஆணவம் நீங்கிய உயிர் சிவமாய் விளங்கும், இரசகுளிகையால் செம்பில் உள்ள களிம்பு நீங்கி செம்பு பொன்னாவது போல என்று உணர்க. உயிர் சிவமானால் உடம்பும் சிவகாயமேயாகும்.
எனினும் குறைந்த பட்சம் படுக்கையிலிருந்து எழும் போதும், உணவு உண்ணும் போதும், நற்காரியங்களைத் தொடங்கும்போதும், உறங்கச்செல்லும் போதும் இதனைக் கூறலாம், ஆலயச் சுற்றின் போது இதர மந்திரங்கள், பதிகங்கள் ஓதாவிடினும், இதைமட்டுமே ஓதினால் சிவ புண்ணியம் கிட்டும்.
குழந்தைகளுக்குப் பெயர்
நாம் அடிக்கடி நமசிவாய மந்திரத்தைக் கூறவேண்டும் என்பதற்காக முன்னோர்கள் ஒரு யுக்தியைக் கையாண்டனர். அதாவது மழலைகளுக்கு நமசிவாய என்ற பெயரைச் சூட்டி அப்பெயரை உச்சரிப்பதன் மூலம் நம்மையறியாமல் சிவ மந்திரத்தை உச்சரிக்கச் செய்து சிவனருள் கிடைக்க வழி செய்தனர்.
நாம் மறந்தாலும் நம்முடைய நாவில் ஐந்தெழுத்தே வெளிப்ட வேண்டும், இடரினும் தளரினும்,தும்மலோடு அருந்துயர் தோன்றிடினும், திருஐந்தெழுத்தே நம் வாயில் வெளிப்பட வேண்டும், இதனால் பிறவியில்லாமல் போகும், சுந்தரர்
நமசிவாய எனும் அருமந்திரம் ஓதினால் எவ்வித உடற்பிணியும் வராது என்ற பொருளில் சேக்கிழார் கூறியுள்ளார். உறக்கத்திலும், உறக்கமில்லா நிலையிலும்,
நமசிவாய எனும் ஐந்தெழுத்தை நெஞ்சுருகத் தினமும் வழிபடுவோருக்கு எமனும் அஞ்சுவான். ஐந்தெழுத்து மந்திரம் எமனையே அஞ்சும் அளவிற்கு உதைத்துவிடும் என்கிறார் திருஞானசம்பந்தர்-திருச்சிற்றம்பலம்
ஆங்காரமாய் ஓங்காரமாய் ரீங்காரமாய் அகங்காரம் ஏதுமின்றி பவ்யமாக ஈசனை எண்ணத்தில் வைத்து திவ்யமாக திருமந்திரத்தை ஓதுபவருக்கு எந்நாளும் துன்பம் நெருங்காது உலகில் புகழே நிலைத்து நிற்கும்
“சிவனை பணிந்தால் மரணமில்லை தந்திரமின்றி திரு மந்திரம் சொன்னால் நற்றுணையாவான் நமசிவாயனே தருணம் இது தான் திருமுறை பாடு நாளும் நமக்கு நன்மைகள் சேரும் “
வாழ்க நமசிவாயம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

No comments:

Post a Comment