தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, October 7, 2016

மரக்கறி வாங்கும்போது!

தற்போதைய காலக்கட்டத்தில் காய்கறிகள் வாங்குவதற்கு ஆண்கள் பெண்கள் என இருபாலரும் செல்கின்றனர். ஆனால் இதில் என்ன சிக்கல் என்றால் காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்குவது என்பது பலருக்கும் தெரியாது. அதிலும் ஆண்கள் இந்த விடயத்தில் சற்று வீக் ஆனவர்கள் தான்.
குளிரூட்டப்பட்ட வர்த்தக நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் காய்கறிகள் வெளித்தோற்றத்திற்கு புதியவை போன்று தோன்றினாலும், சிலவேளைகளில் உள்ளே சரியில்லாமல் இருக்கக்கூடும். அதனால் தான் காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒவ்வொன்றாக நோக்குவோம்.
முருங்கைக்காய் : சற்று முறுக்கிப்பார்க்கும் போது நன்றாக வளைந்து கொடுக்கும் முருங்கைக்காயை வாங்கக் கூடாது.
புடலங்காய் : கெட்டியாக இருக்கும் புடலங்காய்களே சிறந்தவை. கெட்டியாக இருக்கும் புடலங்காய்களில் சதைப்பகுதி அதிகமாக இருக்கும்.
அவரைக்காய் : தொட்டுப்பார்க்கும் போது விதைகள் பெரிதாக இருக்கும் அவரைக்காய்களை தெரிவுசெய்யக் கூடாது. ஏனெனில் அவ்வாறான அவரைக்காய்களில் நார் அதிகமாக காணப்படும்.
வெள்ளரிக்காய் : வெள்ளரிக்காயின் மீது நகத்தால் அழுத்தும் போது நகம் உள்ளே இறங்க வேண்டும். இவ்வாறான காய்களில் தான் விதைப்பகுதி குறைவாக இருக்கும்.
பாகற்காய் : பெரிய காய்களை வாங்கும் போது தட்டையான நீண்ட காய்களை வாங்குவதே சிறந்தது.
பீர்க்கங்காய் : காய் முழுவதுமே ஒரே அளவான அமைப்பை கொண்டிருக்கும் பீர்க்கங்காய்களே சிறந்தவை.
கத்தரிக்காய் : பெரிய கத்தரிக்காய்கள் மென்மையான தோலைக் கொண்டிருப்பின் சிறந்தவையாகும். முற்றல் காய்களில் தோல் தடிப்பாக இருக்கும்.
பூசணிக்காய் : உள்ளே உள்ள விதைகள் முற்றியதாய் இருப்பின் அவை சிறந்ததாகும்.
மாங்காய் : காதருகே வைத்து தட்டிப்பார்க்கும் போது தேங்காயில் வருவது போல சத்தம் கேட்டால் அவை சமையலுக்கு உகந்தவையாகும்.
கோவைக்காய் : காய்கள் முழுக்க பச்சை நிறத்திலிருப்பின் சிறந்தவை.
முள்ளங்கி : முள்ளங்கியை லேசாகக் கீறிப்பார்த்தால் தோல் மென்மையாக இருக்க வேண்டும்.
தக்காளி : நன்றாக சிவந்தவை சிறந்தது.
உருளைக்கிழங்கு : பச்சை நரம்புகள் ஓடாமல், முளைவிடாமல் இருக்க வேண்டும் அத்துடன் லேசாக கீறும் போதே தோல் உரிபட வேண்டும்.
கருணைக்கிழங்கு : முழுகிழங்கை வாங்கும் போது பெரிதாக இருந்தால் நல்லது. வெட்டிய கிழங்கை வாங்கும் போது அதன் உட்புறம் இளஞ்சிவப்பு நிறத்திலிருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.
சக்கரவள்ளி கிழங்கு : சில இடங்களில் அடிபட்டு கறுப்பாகியிருக்கும் கிழங்குகளை தவிர்த்து வாங்குவது நல்லது. இவ்வாறான கிழங்குகள் கசக்கும். உருண்டையான கிழங்குகள் அதிக இனிப்பை கொண்டிருக்கும்.
பூக்கோவா : பூக்களுக்கு இடையில் இடைவெளி இருக்கக்கூடாது. அடர்த்தியான பூக்களைக் கொண்டிருக்க வேண்டும்.
வாழைப்பூ : மேலாக உள்ள இதழைப்பிரித்தால் உள்ளே உள்ள பூக்கள் கறுப்பு நிறத்திலிருக்க கூடாது. கறுப்பு நிறத்திலிருப்பவை பழையவை.
வாழைத்தண்டு : உள்ளே இருக்கும் தண்டுப்பகுதி சிறியதாக இருக்க வேண்டும்.
போஞ்சி : தோல் மென்மையாக இருப்பவை சிறந்தது.
பெரிய வெங்காயம் : பெரிய வெங்காயத்தின் மேல் இருக்கும் தண்டு பெரிதாக இல்லாதவையே சிறந்தவை.
பச்சை மிளகாய் : நீளமாக இருப்பவை காரம் குறைவாயிருக்கும். சற்று குண்டாக இருக்கும் பச்சை மிளகாய்கள் காரமானவையாக காணப்படும்.
இஞ்சி : லேசாக கீறும் போது தோல் பெயர்ந்து வருவது போல காணப்படுமாயின் அவை சமையலுக்கு உகந்தவை.
பூண்டு : பல் தனித்தனியா தெரிபவை சிறந்தவை
இப்போது அனைவருக்கும் காய்கறிகளை எப்படிப்பார்த்து வாங்க வேண்டும் என்று தெரிகின்றதா?
ஆண்களே இனி நீங்கள் மனைவிமாரிடம் திட்டு வாங்க வேண்டியிருக்காது. அதைப் போல் பெண்களும் தமது கணவன்மாரிடம் திட்டு வாங்க மாட்டீர்கள். தற்போது நல்ல மரக்கறி வகைகளை வாங்கி வீட்டிலுள்ளவர்களை அசத்திக்காட்டுங்கள்.

No comments:

Post a Comment