தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 26 ஜனவரி, 2016

உடல் எடையை குறைக்க உதவும் பீர்க்கங்காய்

நமது உணவில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய காய்கறி வகைகளில் ஒன்றான பீர்க்கங்காயில் பல மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது.
இனிப்பு சுவையுடன் கூடிய பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து, அயோடின் மற்றும் ஃபுளோரின் என பல சத்துக்கள் நிறைந்து உள்ளது.
இவை உடலில் நோய்கள் வராமல் தடுப்பதுடன், வந்த நோயை விரட்டும் திறனை அதிகரிக்கச் செய்கிறது. இந்நிலையில் பீர்க்கங்காயால் கிடைக்கும் பலன்களைப் பற்றி பார்க்கலாம்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்:
பீர்க்கங்காய் குறைந்த அளவு எரிசக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன.
மஞ்சள் காமாலைக்கு மருந்தாகும்:
பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும்.
மலச்சிக்கலை போக்கும்:
பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது.
சரும ஆரோக்கியம் தரும்:
பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில் குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.
உடல் எடையை குறைக்கும்:
பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக் குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ரத்தத்தை சுத்தப்படுத்தும்:
பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன. குறிப்பாக, மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது.
மருந்தாகும் விதம்:-
* பீர்க்கங்காய் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வருவதால் அதிலுள்ள பீட்டா கரோட்டீன் சத்து கிடைக்கப்பெற்று கண் பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும். பீர்க்கங்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.
* பீர்க்கங்காயைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர் விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு சுவைக்காகப் போதிய உப்பு சேர்த்து, காலை, மாலை என இரு வேளை பருகி வருவதால் வயிற்றினுள் துன்பம் தருகிற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும்.
* ஒரு கப் பீர்க்கங்காய் சாறு எடுத்து அதனோடு இனிப்புச் சுவைக்காக வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்த்து கலக்கி காலை, மாலை என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை நோய் மறைந்து போகும்.
* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் ரத்தக் கசிவு நீங்கி காயம் ஆறும்.
* பீர்க்கங்கொடியின் இலையைக் கசக்கிப்பிழிந்து சாறு எடுத்து நாள்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறி விடும்.
* பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத்துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிக்கட்டிகள் குணமாகும்.
* பீர்க்கங்காய் சாறு எடுத்து அரைடம்ளர் சாறுடன் போதிய இனிப்பு சேர்த்து தினமும் இருவேளை குடித்து வருவதால் ஆஸ்துமா எனும் மூச்சு முட்டுதல் குணமாகும்.
* பீர்க்கங்காய்க் கொடியின் வேர்ப்பகுதியைச் சேகரித்து நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு தினம் இருவேளை சிறிதளவு உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும்.
* பீர்க்கங்கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர் விட்டு அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து சாப்பிட்டு வருவதால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக