மென்பொருள் வளர்ச்சியும், தனிநபர் கணினி பயன்பாடும் உலகின் மேற்பரப்பில் தவழ்ந்து திரிந்து கொண்டிருந்த தருணங்களில், அவற்றின் முதுகில் இறக்கை கட்டி பறக்க வைத்தது பில்கேட்ஸ் என்ற மந்திரச் சொல். 1955ல் அக்டோபர் 28ல் பிறந்த பில்கேட்ஸ் அறுபது வயதை இன்று எட்டிப் பிடிக்கிறார்.
பில்கேட்ஸ் சொல்லும் பண்புகள்
தன் இலக்குகளையும் ஆர்வத்தையும் தன் வாழ்க்கையின் எந்தவொரு சூழ்நிலையிலும் விட்டுக் கொடுத்ததே இல்லை. தன் வழக்கறிஞர் அப்பா, பில்கேட்ஸையும் வழக்கறிஞராக்க அனுதினமும் வாதாடிக் கொண்டிருந்தாலும்  அவற்றையெல்லாம் உதறித்தள்ளிவிட்டு தனக்குப் பிடித்த கணினி சார்ந்த தொழிலை தேர்ந்தெடுத்தார். அவர் யாருக்காவும் தன் இலக்குகளில் இருந்து பின் வாங்வில்லை.
அம்மாவின் செல்லப்பிள்ளையாக துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டிருந்த பில்கேட்ஸ்-க்கு வாசிப்பது மிகப்பிடிக்கும். அம்மா வங்கி இயக்குநர் வாரியத்தில் பணியாற்றியதாலும், அப்பா வழக்கறிஞராக இருந்ததாலும் நிறைய நூல்கள் படிக்கக் கிடைத்தது. கிடைத்தவற்றையெல்லாம் மிகச்சரியாக பயன்படுத்துதல் என்பது பில்கேட்ஸ் சொல்லும் இன்னொரு சேதி. அறிவியலிலும் கணிதத்திலும் மிகுந்த ஆர்வமாக இருந்த பில்கேட்ஸ், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் படித்துக்கொண்டிருந்த பள்ளிக்கு ஒரு டெலி பிரிண்டர் வகையைச் சார்ந்த கணினியை மாணவர்களின் பயன்பாட்டிற்காக அளித்தபின் கணினியின் மீதும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அதில்தான் தன் முதல் புரோகிராமான டிக் டாக் டோவை பில் எழுதினார்.
அதை எழுதும் போது பில்கேட்ஸின் வயது 13 (அடுத்த பத்து ஆண்டுகளில் சரியாக 23ல் பில் கோடீஸ்வரர்.) தன் நண்பர்களோடு சேர்ந்து எந்த மாணவர் எந்த வகுப்பில் இருக்கவேண்டும் என்பதற்கு புரோகிராம் எழுதி அனைவரையும் வியக்கச் செய்தார். அதன்பின் பில்லுக்கு கணித வகுப்பில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டு அவை கணினி வகுப்புகளாக மாற்றப்பட்டது. நகரின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் புரோகிராம், அந்த வயதில் அவர்கள் செய்ததில் மிக முக்கியமானது. பில்கேட்ஸின் தன்னம்பிக்கைக்கு அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிடலாம்.
ஒரு தனியார் நிறுவனத்தின் சம்பளம் வழங்குவது குறித்த புரோகிராம் எழுதித்தரும்போது அவரின் குழுவிற்குள் ஒரு சம்பளப் பிரச்னை வருகிறது. குழுவிலிருந்து யாரையாவது ஒருவரை விலக்க வேண்டிய கட்டாயத்தில் அவரது நண்பர்கள் பில்கேட்ஸை விலக்க முடிவெடுக்கிறார்கள்.
அப்போது பில்கேட்ஸ் சொன்ன வார்த்தைகள் ‘’நான் போகிறேன்.. ஆனால் திரும்பி வரும்போது இந்தக் குழுவிற்கு தலைவனாக வருவேன்’’. இந்தத் தன்னம்பிக்கைதான் அவரை இந்த உயரத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறது.
சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுக்கும் திறன் பில்கேட்ஸின் மகுடத்தில் இன்னொரு வைரம். தனது 17வது வயதில் தன் பால்ய நண்பன் ஆலங் உடன் சேர்ந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை துவக்கினார்.
அந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இவ்வளவு வளரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பில்கேட்ஸ் எதிர்பார்த்தார். அந்த எதிர்பார்ப்புகளை உண்மையாக்குவதற்கு கடினமான உழைத்தார். திடமான தரமான முடிவுகளை எடுத்தார். ஒவ்வொரு நிறுவனத்தோடும் மைக்ரோசாஃப்ட் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒவ்வொன்றும் அவ்வளவு நுட்பமானது. இல்லையெனில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியுமா? ஐ.பி.எம். நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்க இயலுமா?
ஐ.பி.எம். நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் கலிபோர்னியா முதல் கலிங்கபட்டி வரை அவரது கண்டுபிடிப்புகளைக் கொண்டு சேர்த்தது. பில்கேட்ஸ் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார். தொழில் போட்டிகள் எந்த வகையிலும் கண்டுபிடிப்புகளை பாதித்து விடக் கூடாது என்பதுதான் அது. அதன் காரணமாகவே மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தோடும், தன் தொழிநுட்பங்களை பகிர்ந்து கொண்டது.
சரியான திறமைகளை அடையாளம் கண்டு தன் குழுவில் இணைத்துக் கொள்வதிலும் அவர்களின் வளச்சிகளுக்கு வழிவிடுதலுமே ஒரு நிர்வாகியின் வளர்ச்சிக்குரிய குணமாக இருக்க முடியும். அந்த வகையில் பில்கேட்ஸ் பாராட்டுக்குரியவர்.
2008 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் தன்னை முழு நேர பணியிலிருந்து பகுதி நேர பணியாளராக அறிவித்துக் கொண்டர். முழு நேர பங்களிப்பையும் பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் பவுன்டேசன் மூலம் சமூக சேவை செய்வதில் செலுத்திக் கொண்டார்.
உலகெங்கிலும் உள்ள எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்நிறுவனத்தின் மூலம் உதவினார். ரஜினிகாந்த் சொன்னது போல ‘’சாப்பிட்ட உணவை வயிற்றிலேயே வைத்திருந்தால் வயிறு கெட்டு விடும், சம்பாதித்த பணத்தை நாமே வைத்திருந்தால் வாழ்க்கை கெட்டு விடும்’’ என்பதை நன்கு உணந்திருக்கிறார்.
இந்தக் குணம் தான் போர்ப்ஸ் மற்றும் டைம்ஸ் பத்திரிகைகளின் படி உலகின் முதல் பணக்காரராக பன்னிரெண்டு ஆண்டுகள் பில்கேட்ஸ் இருப்பதற்கான காரணமாக இருக்கும். நீங்கள் 1000 டாலர்களை தரையில் போடுகிறீர்கள் என்றால் அதை பில்கேட்ஸ் குனிந்து எடுக்காமல் இருந்தாலே பில்கேட்ஸ்-க்கு லாபம்தான். ஏனெனில் 4 விநாடிகளில் அவர் அந்த பணத்தை சம்பாதித்து விடுகிறார்.
பில்கேட்ஸ்-க்குச் சொல்வோம் பிறந்த நாள் வாழ்த்து..!
பா.குமரேசன்
(மாணவப் பத்திரிகையாளர்)