தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, July 23, 2014

மறைத்தாலும் மறையாத சந்தேகங்களும் மறைக்க முயன்ற உண்மைகளும் -செல்லக்கிளி அம்மான்!



செல்லக்கிளி அம்மானின் முப்பத்தோராவது நினைவு வருடம் இது!- ச.ச.முத்து
தமிழரின் வரலாற்றில் முக்கியமான ஒரு தாக்குதல் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது. 
தமிழர்கள் என்றாலே தோசை, வடை சாப்பிடும் மெல்லியவர்கள். கோழைகள். தொடை நடுங்கிகள் என்ற சிங்களத்தின் நினைப்பை இதற்கு முன்னமேயே 81 அக்டோபர் 15ம் திகதி யாழ் காங்கேசன்துறை வீதியில் முதன்முதலாக சிங்கள இராணுவத்தின் மீது சீலன் தலைமையில் நடத்தி இருந்தாலும்,
1983 மே 18ம் திகதி கந்தர்மடம் பாடசாலையில் சிங்கள அரச இயந்திர தேர்தலுக்காக காவல் காத்த இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி இருந்தாலும் இது எல்லாம் ஏதோ தனித்த இராணுவத்தின் மீதான திடீரென்ற தாக்குதலாகவே சிங்களம் நினைத்திருந்தது.
தங்களின் ரோந்துகள், அதன் வாகன அணிகள் என்பதன் பலத்தில் அவர்களுக்கு ஒருவித அதீத கர்வம் இருந்தது.  அப்படியான ஒரு இராணுவ தொடர் மீதான தாக்குதலே தின்னைவேலி தபாற்பெட்டி சந்தியில் 1983 யூலை 23ம் நாள் நள்ளிரவில் நடாத்தப்பட்டு முடிந்திருந்தது.
13 சிங்கள இராணுவத்தினர் அழிக்கப்பட்ட அந்த தாக்குதலில் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆயுதங்களில் கமர் கிரைனைட் என்பதும் இருந்தது.
வழமையாக இப்படியான புதிய ஆயுதங்கள் எடுத்தால் அதனை செல்லக்கிளி அம்மான்தான் களற்றி பூட்டி ஒரு வழிப்படுத்துவார்.
ஆனால் இப்போது செல்லக்கிளி அம்மான் குளிர்ந்துவிட்ட உடலாக மரணத்துள்...
விலா பகுதியூடாக ஊடுருவிய ரைபிள் சன்னம் அம்மானின் உயிர் குடித்து வெளியேறி இருந்தது..
வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு தாக்குதலை தலைமையேற்று நடாத்திய செல்லக்கிளி ஒரு முழு திருப்தி முகமெங்கும் தெரிய மரணத்துள் உறைந்துபோய்...
மெல்லிய மழைதூறிக் கொண்டிருந்த இந்த விடிபொழுதில் அம்மானின் உடலை சுற்றி தலைவர் உட்பட அந் நேரத்தைய போராளிகள்...
இயக்கத்தில் அம்மான் என்ற பெயர் குறிப்பிட்டு முதலில் அழைக்கப்பட்டது செல்லக்கிளி அம்மான்தான்.
அதற்கு பிறகே பொன்னனுக்கும் அந்த அடைமொழி பொன்னம்மான் ஆகியது..
செல்லக்கிளி அம்மான் இந்த அமைப்பின் மிக ஆரம்ப உறுப்பினன்.
நகரங்களில் திரியும் போது முழு நகரத்தவனாகவும் அதே நேரம் காடுகளில் திரியும் போது கானகத்து மனிதனாகவும் மாறும் அற்புதமான ரசவாதம் தெரிந்தவர் செல்லக்கிளி அம்மான்.
எந்தவொரு கொம்பாஸ் துணையும் இல்லாமல் அடர் காட்டினுள் இறங்கி அடுத்த துண்டு ஏறும் ஆற்றல் அவருக்கு..வேட்டையில் இனி இல்லை என்ற ஆர்வம்..
இயல்பாகவே செல்லக்கிளி அம்மானுக்கு தமிழ் உணர்வும், தமிழர்கள் தமது பாரம்பரிய நிலத்தில் பூரண சுதந்திரத்துடன் வாழ்வதற்கான போராட்டங்களில் ஈடுபாடும் சிறுவயதில் இருந்தே இருந்துள்ளது..
தேசியதலைவருடன் மிகமிக ஆரம்பத்திலேயே இணைந்தவர்களில் செல்லக்கிளி அம்மானும் ஒருவர்.
ஒருமுறை இயக்கத் தேவை ஒன்றுக்காக தனது மாடுகளை விற்று அந்த நேரம் உதவியவர் அம்மான்.
விடுதலைக்காக பூரண தியாகம் செய்வதற்கு எப்போதும் தயாரான ஒருவர் அவர்.
அதிகமான படிப்போ, அரசியல் கல்வி என்ற ஒன்றோ அதிகம் படித்திராத செல்லக்கிளி அம்மான் அரசியல் கதைக்கும் போது அதில் ஆழமும் நிறைந்த ஆய்வுப் பார்வையும் இருக்கும்.ஆனால் ஒரு எளிய மனிதனின் பாசையில்தான் அதனை அவர் சொல்லும் அழகு நிறைவானது..
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட வரலாற்றில் பல விடயங்களில் செல்லக்கிளி அம்மான் “முதலில்” என்ற அடைமொழிக்கு உரியவராக இருக்கிறார்.
முதன்முதலில் சிங்கள பேரினவாத தலைநகரில் நடாத்தப்பட்ட தாக்குதலில் பங்கு கொண்டவர்களில் செல்லக்கிளி அம்மானும் ஒருவர்.
27.01.1978 அன்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் வைத்து பொத்துவில் பா.உ கனகர் மீதான தாக்குதலில் செல்லக்கிளி அம்மான், தலைவருடன் பங்கெடுத்து கொள்கிறார். சுதந்திர தமிழீழத்தை அமைக்கும் ஆணைக்காக பொத்துவில் மக்களின் வாக்குகளை பெற்ற கனகரெத்தினம் வெற்றி பெற்ற பின்னர் தமிழினத்துக்கு துரோகம் அழைத்து சிங்கள கட்சியுடன் சேர்ந்ததற்கான தண்டனையாகவே சுடப்பட்டார்.
அதனைப் போலவே, முதன்முதலில் இயந்திர துப்பாக்கி ஒன்றை இயக்கி எதிரியை அழித்ததிலும் செல்லக்கிளி அம்மானே..1978ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ம் திகதி முருங்கன் காட்டுப் பகுதியில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம் ஒன்றை சடுதியாக வளைத்த சிங்களஅரச ஏவல் காவல்துறை பஸ்தியாம்பிள்ளை குழு மீது அவர்கள் கொண்டு வந்திருந்த இயந்திர துப்பாக்கியை பறித்தே தாக்குதல் நடாத்தி ஒரு பெரும் அழிவில் இருந்து அமைப்பை காப்பாற்றியவர் செல்லக்கிளி அம்மான்.
அதனைப்போலவே மிக அதிகமாக இராணுவத்தினரை அழித்த முதல் தாக்குதலும் செல்லக்கிளி அம்மான் தலைமையிலேயே..
நகரப்புற கெரிலாக்களாக இருந்த அமைப்பை கானகத்தின் அடர் மரங்களுக்குள் அதன் வயல்வெளிகளில், ஆற்றங்கரைகளில், வெட்டைகளில் பழக்கி எடுத்ததில் செல்லக்கிளி அம்மானுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.
79ல் அமைப்பின் முதலாவது ஒழுங்குபடுத்தப்பட்ட பயிற்சி முகாம் ஆரம்பிக்கபடுவதற்கான பூர்வாங்க வேலைகளை செய்வதில் இருந்து பயிற்சிக்கான கானகத்தை தெரிந்தெடுத்து அதில் பயிற்சி கொட்டில் போடுவதற்கான இடத்தை பண்படுத்தி எல்லாமே செல்லக்கிளி அம்மானே...
இவ்வளவற்றையும் செய்துவிட்டு பிறகு பயிற்சியிலும் ஒரு போராளியாக தேசியதலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு முழு ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்தவர்
செல்லக்கிளி அம்மான். கானகம் அதிர 'வாருங்கள் புலிகளே தமிழீழம் காண்போம், வாழ்வா சாவா ஒரு கை பார்ப்போம் என்ற காசிஆனந்தன் பாடல்வரிகளை பாடிக்கொண்டே எல்லோர்க்கும் முன்பாக செல்லக்கிளி அம்மானே..
செல்லக்கிளி அம்மானுக்கும் தலைவருக்குமான உறவுமுறை மிகமிக ஆழமான அற்புதமான பரிமாணங்களை உடையது. தலைவரை விட ஒரு வயது மூத்தவராக செல்லக்கிளி அம்மான் இருந்ததால் அவரை ஒருமையிலேயே ஆரம்பத்தில் செல்லக்கிளி அம்மான் அழைத்தார்.
அவர்களின் கதையாடலில் ஒருவிதமான பாசப்பிணைப்பும், இலட்சியத்தால் ஒன்றுபட்ட போராளிகளின் விரிந்த அன்பும் நிறைந்திருக்கும்..செல்லக்கிளி அம்மான் தலைவர் மீது வார்த்தைகளால் சொல்லமுடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர். சாதாரண நேரங்களில் பகிடியும் நகைச்சுவையுமாக கதைக்கும் செல்லக்கிளி அம்மான் இயக்கஅலுவல், வேலை என்று வந்துவிட்டால் தேசியதலைவர் என்ற தளபதியின் கட்டளைகளை எதிர்பார்த்து செய்து முடிக்கும் ஒரு போராளியாகவே தெரிவார். 
நடவடிக்கை நேரங்களில் தலைவரிடம் அதிக பேச்சு வாங்கியது செல்லக்கிளி அம்மானாகவே இருப்பார்.
இயக்கத்தின் அரசியல் செல்நெறியை தீர்மானிக்கும் விவாதங்களில் செல்லக்கிளி அம்மான் தனது தரப்பை எடுத்து வைக்கும் விதம் மிகமிக வித்தியாசமானது. அதிலேயே தமிழீழ சாதாரண குடிமகனின் பார்வையும் கருத்தும் இருக்கும்..
மாவட்டசபை என்ற மாயமானை நம்பி தமிழ்அரசியல் பாதை மாறியபோது பகிரங்கமாகவே தமிழ்அரசியல் தலைவர்களுடன் மேடைக்கு கீழே நின்று விவாதித்தவர் செல்லக்கிளி அம்மான்..
ஒரு முழுமையான போராளியாக வாழ்ந்து எல்லாவற்றையும் தானும் கற்று மற்றவர்களுக்கும் கற்பித்த செல்லக்கிளி அம்மானின் வாழ்வு நிறைவான ஒன்று..
அறுத்து வைத்த கதிருக்கு கூடு அடிக்கும் உழவு இயந்திரத்தை ஓட்டுவது எப்படி என்று,
முதன்முதலில் இயந்திரத் துப்பாக்கியை இயக்கி பிறகு அதனையே எல்லோருக்கும் சொல்லி புரியவைத்த,
கானகத்தில் திசைமாறினால் பயம் இல்லாமல் எப்படி பாதை பிடிப்பது என்று,
காட்டின் இடையில் தனிக்குளுவனோ, தனியானையோ வந்துவிட்டால் எப்படி தப்புவது என்று,
வேட்டைத் துப்பாக்கிக்கு எப்படி குறிபார்க்கும் மின்னியை செற் பண்ணுவது என்று,
கட்டுத்தோட்டா எப்படி செய்வது என்று,
தலைவர் முதன்முதலில் வெளியில் இருந்து வாங்கி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது தன்னியக்க ரைபிளான ஜி3 ஐ தலைவர் இல்லாத நேரத்தில் கழற்றி பூட்டி பழகி எல்லோர்க்கும்
தலைவர் அனுமதி உடனேயே பழக்கியது என்று எல்லாவற்றையும் கற்பித்த செல்லக்கிளி அம்மான் நாளைய போராட்டத்துக்கான பாடங்களையும் தந்துவிட்டே சென்று இருக்கிறார்.
என்றும் இதயங்களுள் வாழ்வீர்கள் அம்மான்.
யாழ். திருநெல்வேலி தாக்குதல் நடந்து 31ம் ஆண்டுகள் நிறைவு !
யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து இலங்கைப் படையினர் மீதான தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 31 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.
தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த இலங்கைப் படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது.
கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர்.
படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடியை இயக்கிய லெப். செல்லக்கிளி அம்மான் பின்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல்
1983ம் ஆண்டு ஜுலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது.
வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி மற்றும் ஏனைய தோழர்கள்.
நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை.
வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர்.
முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும்.
என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும் விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.
எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல்.
எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடி புதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும்.
விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது.
கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக் கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான்.
தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது.
செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.
வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் “அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது.
அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக் என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.
ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர்.
வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன.
நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக் கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டு விடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை.
உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.
சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எமக்குத் தெரியவில்லை.
எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம்.
ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான்.
இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை.
எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது.
போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம்.
ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.
தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது.
ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத் தொடங்கியது.
ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது.
சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.
ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது.
ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார்.
எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்ரக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள்.
தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்ரக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.
இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம்.
ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான்.
அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.
விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து “பசீர் காக்கா”, றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான்.
“சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே “கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின.
இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் “தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.
ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது.
சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி.
மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து “யாரது” என்று முன்னே வந்தனர்.
“அது நான்ராப்பா” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். “அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை” என்றார் ரஞ்சன்.
இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்” என்றவாறு தன் பிரியத்திற்குரிய G3 யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி.
மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது.
இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. “எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து “அண்ணா அவன் அனுங்குகிறான்.”மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது.
இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம்.
கரையால் வாருங்கள் என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான்.
இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து “யாரது” என்று வினவ அம்மான் “அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார்.
பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க “அம்மானைக் காணவில்லை” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். “டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன்.வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது. லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.
வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.
அன்புடன் கிட்டு

No comments:

Post a Comment