தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 25 மார்ச், 2014

போராட்டத்தின் சகாப்தம் பகத் சிங்

ஆங்கிலேய ஆட்சியை வெளியேற்றி, இந்தியாவை சுதந்திர நாடாக்க ஆயுதமேந்தி போராடியவர் மாவீரர் பகத்சிங்.


பிறப்பு
சாஹீது பகத்சிங் என அழைக்கப்படும் ‘பகத்சிங்’ அவர்கள், 1907ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் திகதி இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லயால்பூர் மாவட்டத்திலுள்ள பங்கா என்ற கிராமத்தில், சர்தார் கிசன் சிங் என்பவருக்கும், வித்தியாவதிக்கும் இரண்டாவது மகனாக ஒரு சீக்கிய குடும்பத்தில் பிறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை
பகத்சிங்கின் குடும்பம் ஒரு விடுதலைப் போராட்ட வீரர்களைக் கொண்ட குடும்பம் என்பதால், இளம் வயதிலேயே நாட்டுப்பற்று மிக்கவராக விளங்கினார்.
லாகூரில் உள்ள டி.ஏ.வி பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பகத்சிங் அவர்கள், லாலா லஜபதிராய் மற்றும் ராஸ் பிஹாரி போஸ் போன்ற அரசியல் தலைவர்களிடம் நட்புறவு கொண்டிருந்தார்.
1919ம் ஆண்டு இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில், ஆயுதம் ஏதுமின்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல், ஆங்கில அரசு, ‘ரெஜினால்ட் டையர்’ என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது.
அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலைக் கண்டு நாடே கொதித்தது.
இந்த கொடூரமான படுகொலை, பகத்சிங்கின் மனதில் பெரும் மாற்றத்தையும் விதைத்ததோடு மட்டுமல்லாமல், இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்துவந்து தன்னுடன் வைத்துக்கொண்டு, அவர் வெள்ளையர்களை விரட்ட சபதமும் பூண்டார்.

விடுதலைப் போரில் பகத்சிங்கின் பங்கு
தன்னுடைய பதின்மூன்று வயதில், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.
பின் 1922ம் ஆண்டு கோரக்பூரீல் நடந்த “சௌரி சௌரா” வன்முறைக்கு எதிராக காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியபோது, பகத்சிங் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார்.
அகிம்சை வழியில் சென்றால் சுதந்திரம் பெறமுடியாது, ஆயுதம் தாங்கினால் மட்டுமே சுதந்திரம் பெறமுடியும்!’ என முடிவுக்கு வந்தார்.
1924 ம் ஆண்டு, சச்சீந்திரநாத் சன்யால் என்பவரால் தொடங்கப்பட்ட “இந்துஸ்தான் குடியரசுக் கழகம்” என்னும் அமைப்பில் இணைந்தார்.
பின்னர் 1926ம் ஆண்டில் பகத்சிங், சுகதேவ், பவதிசரண் வேரா, எஷ்பால் போன்றோர் இணைந்து “நவ்ஜவான் பாரத் சபா” என்ற இளைஞர் அமைப்பை நிறுவினர்.
பகத் சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து, மே 1927ல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

கொலை வழக்கில் சிக்கிய பகத்சிங்
1928ம் ஆண்டு, “சைமன் கமிஷனை” எதிர்த்து காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அந்த போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் பொலிசாரால் தடியடிப்பட்டு இறந்தார்.
இதனால் கோபம்முற்ற பகத் சிங், ராஜகுரு, கோபால், மற்றும் சுக்தேவ் இணைந்து, லாலா லஜபதிராய் இறப்புக்கு காரணமாயிருந்த காவலதிகாரியான ஸ்காட்டை கொல்ல திட்டமிட்டனர். ஆனால் தவறான சமிக்ஞையால் பகத் சிங், சாண்டர்ஸை சுட்டுக் கொன்றுவிட்டார், சான்டர்சை கொலை செய்த பின்பு, சிங்கும் குழுவினரும் லாஹுருக்கு தப்பிச் சென்றனர்.
தன் அடையாளத்தை மறைக்க சீக்கிய மதத்தின் புனிதமான கொள்கைகளை மீறி தாடியையும், தலைமுடியையும் நீக்கினார்.
1929ம் ஆண்டு ஏப்ரல் 8ம் திகதி தொழிலாளர்களை ஒடுக்க நினைத்த ஆங்கில அரசு “தொழில் தகராறு சட்ட வரைவு” என்ற ஒன்றை நிறைவேற்ற, லாகூரில் மத்திய சட்டமன்றம் கூடியிருந்தது.
இச்சட்ட வரைவை ஏற்காத பகத்சிங் “சென்ட்ரல் அசெம்பிளி ஹாலில்” குண்டு வீசுவதென்று தீர்மானித்தார். பகத் சிங் மற்றும் பட்டுகேஸ்வர் தத் இருவரும் இணைந்து மக்கள் இல்லாத இடத்தில் " இன்குலாப் ஜிந்தாபாத் (ஏகாதிபத்தியம் ஒழிக) ! " என்று குரல் கொடுத்துக்கொண்டே குண்டுகளை வீசினார்கள். தப்பிக்க முயலாமல் கம்பீரமாக சரணடைந்தார்கள்.

இறப்பு
தனது 24வது அகவையில் 1931 ஆம் ஆண்டு, மார்ச் 23ம் திகதி தூக்கு மேடையை தொடுகிற பொழுது, மரணத்தை புன்னகையோடு எதிர்கொள்ளும் ஒரு புரட்சியாளனின் முகத்தை பார்க்கும் பேறு பெற்றீர்கள் நீங்கள்!" என்று சொல்லிவிட்டு மரணத்தின் வாசலைத் தொட்டார்.
ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல, அது ஒரு பாடமும் கூட. இன்றைய இந்தியாவில் எத்தனையோ இளைஞர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் பகத்சிங் வாழ்க்கை போற்றத்தக்க ஒன்றாகும்.
அவர் வாழ்ந்த வாழ்க்கை காலம் குறுகியது என்றாலும் நூற்றாண்டுகளை கடந்து சுமந்து நிற்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக