தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 மார்ச், 2014

விநாயகருக்கு சூரதேங்காய் உடைப்பின் கதை ..............................................................


விநாயகரை காசி மன்னன், தன் அரண்மனைக்கு அழைத்து சென்றுக் கொண்டிருந்தார். விநாயகரின் வரவை பிடிக்காத அசுரனோருவன், விநாயகர் வரும் வழியில் மலைபோல மாய உருவெடுத்து வழி மறித்தான். இதைகண்ட காசி மன்னன், “இறைவா இது என்ன சோதனை.?” என்று வேதனைப்பட்டு நின்றார். அரசனின் வேதனையை போக்க, “அரசே எனக்காக கொண்டு வந்த கும்ப மரியாதை கலசங்களிலுள்ள தேங்காய்களையெல்லாம் எடுத்து, இந்த அசுர மலையின் மீது வீசி உடையுங்கள்.” என விநாயக பெருமான் கூறினார்.

ஆனைமுகன் கூறியதை போல, தேங்காய்களை வீச, அந்த அசுர மாய மலை மறைந்தது. ஆக விநாயகருக்கு நாம் சூரதேங்காய் உடைத்தால், கல்லை கண்டு நாய் ஓடுவதை போன்று, நாம் செய்யும் நற்காரியங்களுக்கு தடையாக இருக்கும் துஷ்டசக்திகள் விலகியோடும்.

வலம்புரி விநாயகர்

விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவபெருமான் விளையாட்டாக எடுத்து வைத்துக் கொண்டார். ஸ்ரீமகாவிஷ்ணு, சிவனிடம் சென்று தன்னுடைய வலம்புரி சங்கை தந்து விடுமாறு கேட்டார்.

“என்னிடம் உமது வலம்புரி சங்கு இல்லை. என் மகன் விநாயகரிடம்தான் இருக்கிறது. அவனிடம் சென்று வாங்கிக்கொள்ளுங்கள்.” என்று சிவன் விஷ்ணுவிடம் சொல்ல, விநாயகரிடம் சென்று தன் வலம்புரிச் சங்கை தருமாறு கேட்டார் ஸ்ரீமகாவிஷ்ணு. அதற்கு விநாயகர், “உங்கள் வலம்புரி சங்கு எப்படி இருக்கும்?” என்று கேட்க, ஸ்ரீமன் நாராயணனால் விளக்க முடியவில்லை. உடனே விநாயகர் தன் தும்பிக்கையை வலதுபக்கமாக திருப்பி, “இப்படிதானே வலம்புரி இருக்கும்..“ என்று சொல்ல, ஸ்ரீமன் நாராயணன், விநாயகரின் வேடிக்கையை கண்டு மகிழ்ந்தார். ஆனாலும் பல நாள் அலைந்த பிறகே வலம்புரி சங்கை விநாயகரிடமிருந்து வாங்கினார் விஷ்ணுபகவான். வலம்புரி சங்கை விநாயகப் பெருமான் விருப்பத்துடன் தன்னிடம் வைத்திருந்ததால், வலம்புரிச் சங்கு, மேலும் பல மகத்துவங்களை பெற்றது. விநாயகருக்கு “வலம்புரி விநாயகர்” என்ற சிறப்பு பெயரும் வந்தது. வலம்புரி விநாயகரை வணங்கினால் ஸ்ரீலஷ்மி நாராயணனின் ஆசியால் சகலகாரியங்களும் சித்தியடையும்.

விநாயகருக்கு எலிவாகனம் உருவான கதை

சவுபரி என்ற முனிவர் இருந்தார். இவருடைய மனைவி மனோரமை. இவர்கள் சிறந்த சிவபக்தர்கள். ஒருநாள் வான்வழியாக வந்துக்கொண்டிருந்த கிரவுஞ்சன் என்கிற கந்தர்வராஜன், மனோரமையை முனிபத்தினி என்று கூட பாராமல், அவள் கையை பிடித்து இழுத்துவிடுகிறார். இதை சற்றும் எதிர்பாராத மனோரமை அதிர்ச்சி அடைகிறாள். கந்தர்வராஜனின் செயலை கண்ட முனிவர் சவுபரி கோபம் கொண்டு, “முனிவனாகிய என் பத்தினியை அடைய திருட்டுதனமாக எங்கள் பகுதிக்குள் நுழைந்த நீ, காலம் முழுவதும் அனுமதியின்றி திருட்டுதனமாக நுழையும் மூஷிக (பெருச்சாளி)பிறவியை அடைவாயாக.” என்று கிரவுஞ்சனனை சபித்துவிடுகிறார்.

இதை கேட்ட கிரவுஞ்சன் மனம் வருந்தி தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். “ நீ தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டவனாகயால் உன்னை மன்னிக்கிறேன். ஆனால் நான் கொடுத்த சாபத்தை திரும்ப பெற முடியாது. பராசுவ முனிவர் இல்லத்திற்கு விநாயகப் பெருமான், ஒரு குழந்தையாக வருவார். விநாயகருக்கு நீ வாகனமாக மாறுவாய்.” என்றார் சவுபரி முனிவர்.

முனிவர் கூறியதுபோல் சம்பவங்கள் நிகழும் சூழ்நிலை உருவானது. அதன்படி, வரேணியன் என்ற அரசர் இருந்தார். அவருடைய மனைவி பெயர் புஷ்பகம் என்கிற புட்பகை. அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தும்பிக்கையுடனும் பெரிய வயிற்றுடனும் பிறந்ததால், அரசதம்பதி மனம் வருந்தினர். “நாம் இந்த குழந்தையை வளர்ப்பது கடினம். உலகம் நம்மை பார்த்து நகைக்கும். அதனால் நீ மனதை சமாதானப்படுத்திக்கொள்.” என்று அரசியிடம் சொன்ன அரசர், “இக்குழந்தையை ஏதோ கண்காணாத இடத்தில் பத்திரமாக வைத்துவிடுங்கள்.” என்று கூறி காவலர்களிடம் குழந்தையை கொடுத்தனுப்பினார்.

அந்த காவலர்களும் அந்த குழந்தையை பராசுவ முனிவர் ஆசிரமத்தின் அருகில் வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். ஆசிரமத்தின் வெளியே குழந்தை அழும் குரல் கேட்ட முனிவர், வெளியே வந்து பார்த்தார். குழந்தையின் உருவத்தை கண்டு மகிழ்ந்து, “அட கஜேந்திரன்.” என்று கூறி, அந்த குழந்தையை அன்பாக வளர்த்து வந்தார். குழந்தை வளர்ந்து விளையாட ஆரம்பித்தது. அப்போது முன்னோரு சமயம் சவுபரி முனிவரிடம் கந்தர்வராஜனான கிரவுஞ்சன் சாபம் பெற்று பெருச்சாளி பிறவியை அடைந்தான் அல்லவா. அவன் இப்போது, பராசுவ முனிவரின் ஆசிரமத்திற்குள் பெருச்சாளியாக புகுந்து சேட்டை செய்தான். அந்த எலியை ஒடஒட விரட்டி துரத்தினார் கணபதி. ஒருகட்டத்தில் எலியை கொன்றுவிட நினைத்த விநாயகரிடம், தன்னை மன்னிக்குமாறு வேண்டியது எலி. விநாயகரும் அதனை மன்னித்து தன்னுடைய மூஷிக வாகனமாக பதவி தந்தார்.

விநாயகர் சதுர்த்தியில் வழிப்பட விநாயகரை ஏன் தண்ணீரில் கரைக்க வேண்டும்.?

பார்வதிதேவி ஒருசமயம், “என் செல்ல மகனே உனக்கு கங்கையும் ஒரு தாயாக இருப்பதால் நீ அவரையும் காணவேண்டும் அவருக்கும் நன்மைகளை செய்யவாய் சென்று சொல்ல, விநாயகரும் தன் தாய் சொல்லை தட்டாமல் இன்றுவரை விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, நமக்கு தனது பரிபூரண ஆசியை தந்துவிட்டு, அம்மாவிடமே செல்ல தண்ணீரில் கரைந்து செல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் விநாயகர் தோஷங்களை போக்கும் ஆற்றல் படைத்தவர். கடல்-ஆறு-நதி-குளம் போன்றவற்றில் சில சமயம் அசம்பாவிதங்கள் நடப்பதால் அத்தகைய கடல்-ஆறு-நதி-குளம் போன்றவற்றுக்கு அந்த தோஷம் ஏற்படுகிறது. இப்படி நீ நிலைகள் தங்கள் தோஷத்தை போக்க யாரிடம் செல்லும்.? எங்கே பரிகாரம் தேடும்.? அதற்காகதான் அவற்றுக்கு உண்டான தோஷத்தை போக்கவே விநாயகர் பெருமானே ஆண்டுக்கு ஒருமுறை இவ்வாறு நீர் நிலைகளை தேடி சென்று அவற்றின் தோஷத்தை போக்குகிறார்.

விநாயகர் சதுர்த்திக்கு பிறகு, 3,5,7,9-வது நாளில் தண்ணீரில் விநாயகரை கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி அன்று, வீட்டில் விநாயகரின் சிலையின் வயிற்றின் மேல் வைத்து பூஜித்த நாணயம் (காசு) மகிமை வாய்ந்தது. அதை பணப்பெட்டியில் வைக்கலாம் அல்லது பூஜை அறையில் பத்திரமாக வைத்து பூஜித்து வணங்கி வந்தால் ஸ்ரீமகாலட்சுமி அருள் எப்போதும் கிடைக்கும். வறுமை வராது.

செய்வினை தோஷம் அகற்றும் ஆற்றல் நிறைந்தவர் விக்னேஷ்வரர்

மகிஷாசுரனிடம் போரிட்டாள் சக்திதேவி. கடுமையான யுத்தமாக அது இருந்தது. அசுரர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதனால் மாந்தீரிகத்தில் வல்லவனான விசுக்ரனை அனுப்பி பராசக்திக்கு செய்வினை செய்ய சொன்னான் பண்டாசுரன். விசுக்ரன், போர்களத்திற்கு சென்று, விக்னயந்திரத்தை தகடில் வரைந்து, துஷ்டசக்தியின் மந்திரத்தை உச்சரித்து, எவர் கண்ணிலும் படாமல் அன்னை பராசக்தியின் அரண்மனையில் மறைத்து வைத்தான். இதனால் சக்திதேவியின் படையினர், பின்தங்கினர். போர்களத்தில் விழுந்தால் மீண்டும் அவர்களால் எழ முடியாதபடி பலவீனம் அடைந்தார்கள்.

அன்னை பராசக்திக்கு உதவிய பல ஜீவராசிகள் உயிர் இழந்தன. எதனால் இப்படி ஓர் விபரீதம் நடக்கிறது? என்பதை அம்பிகை தன் தவஞானத்தால் கண்டாள். பண்டாசுரன், விக்னயந்திரத்தில் செய்வினை செய்திருப்பதை அறிந்தாள். செய்வினை தகடை தேட சொன்னாள். பலர் தேடியும் அந்த யந்திரம் கிடைக்கவில்லை. கடைசியாக விநாயகப் பெருமானிடம் அந்த யந்திரத்தை தேடி எடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தாள் அம்பிகை. யாராலும் கண்டுபிடிக்க முடியாத மாய விக்னயந்திரத்தை விநாயகர் சர்வசாதாரணமாக கண்டுபிடித்து அந்த யந்திரத்தை பொடி பொடியாக உடைத்து, கடலில் வீசி எறிந்தார். இதனால் விக்னயந்திரத்தை செயல் இழக்கச் செய்த விநாயகருக்கு “விக்னேஷ்வரர்” என்று பெயர் வந்தது. பிறகு சக்திதேவியும் அசுரர்களை அழித்து வெற்றி பெற்றார்.

தோப்புக்கரணமும் தலையில் குட்டிக் கொள்வதும் ஏன்?

கஜமுகாசுரன் இறைவனிடம் வரம் பெற்றதால், “இந்த உலகத்தில் இருக்கும் அத்தனை பேரும் தம் அடிமைகள்.” என்று கூறி தேவர்கள் யாவரையும் தோப்புக்கரணம் போட வைத்தான். அதனால் விநாயகப் பெருமான், கஜமுகாசுரனின் ஆணவத்தை அடக்கி, தன் முன்பாக அவனை தோப்புக்கரணம் போடவைத்தார். அதேபோல் ஒருசமயம் விஷ்ணுவின் சக்கரத்தை விநாயகர் விழுங்கிவிடுகிறார். அதை திரும்பபெற ஸ்ரீமகாவிஷ்ணு எவ்வளவோ முயற்சித்தார். ஆனால் விநாயகர் கொடுப்பதாக இல்லை. அதனால பெருமாள், விநாயகருக்கு இஷ்டமான தோப்புக்கரணத்தை இட்டார். இதை கண்ட பிள்ளை சிரித்து விடுகிறார். இதனால் அவர் வாயில் இருந்த விஷ்ணு சக்கரம் வெளியே வந்து மீண்டும் ஸ்ரீமகாவிஷ்ணுவிடம் சேர்நதது. தோப்புக்கரணம் போட்டால் விநாயகருக்கு மிகவும் பிடிக்கிறது என்பதை அறிந்த தேவர்களும் முனிவர்களும், விநாயகரின் முன்னதாக தோப்புக்கரணம் போட்டு ஆசி பெற்றார்கள்.

ஒருசமயம், கணபதி காக்கை உருவெடுத்து அகத்திய முனிவர் தன் கமண்டலத்தில் அடைத்து வைத்திருந்த காவிரியை தட்டி விட்டார். அதை கண்ட முனிவர், கோபம் கொண்டு காக்கையின் தலையில் குட்ட சென்றார். அப்போது விநாயகர் காட்சி தந்தார். குட்ட வந்த முனிவர், தன் தலையில் குட்டிக்கொண்டார். இவ்வாறு நம் தலையில் நாம் குட்டிக்கொள்வதால், நம்முடைய உடலில் உள்ள ஏழுசக்கரங்களும் சக்தி பெறுகிறது. ஸஹஸ்ரார கமலத்தில் தட்டி எழுப்புவதற்காகதான் நம் தலையில் குட்டிக்கொள்கிறோம். இதனால் உடல் வலிமை பெறும். எல்லா நரம்புகளும் சக்தி பெறும். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார்.

விநாயகரை நம் வீட்டுக்கு அழைத்து வரும் முறை

விநாயகர் சதுர்த்தி அன்று, நாம் விநாயகரை வழிப்பட களிமண்ணால் ஆன சிலையை வாங்கி வர வேண்டும். வாங்கி வரும் போது ஒரு பெரிய தட்டிலோ அல்லது பக்கெட்டிலோ விபூதி குங்குமம் பூசி கொண்டு சென்று, அதிலே விநாயகரை பத்திரமாக வைத்து நம் வீட்டுக்கு அவரை அழைத்து வரவேண்டும்.

விநாயகருக்கு பிடித்த உணவு

லட்டு, கொழுக்கட்டை, அவல், பொரி, போன்ற தின்பண்டங்கள் விநாயகருக்கு பிடிக்கும். அத்துடன் மலர்களை படைக்க வேண்டும். விநாயகருக்கு என்று விலை உயர்ந்த மலர்கள் கிடையாது. தெருவோரத்தில் முலைக்கும் எருக்கம்பூ கூட விநாயகருக்கு பிடிக்கும். வன்னி இலை இருந்தால் சிறப்பு. அறுகம்புல்லை கண்டிப்பாக வைத்தால்தான் பூஜை செய்த பலனே கிடைக்கும்
 —
kokuvil nanthaavil amman

சேற்றைப் பூசிக் கொண்டு கடவுளுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்...

இவர்களைக் காட்டுமிராண்டிகள் என்று சொன்னால் கோபப்படுகிறார்கள்...
அதை முறையாக செய்தால் அது ஒரு சிகிச்சை முறை என்கிறார்கள் ! ///இது கூட தெரியாதவனெல்லாம் நக்கல் செய்ய வந்திடுகிரார்கள்,வெள்ளைத்தோல் சொன்னால்த்தான் நம்புவீகள் போல!!அதனால்த்தான் கிறிஸ்தவமும் இஸ்லாமும் வளர்ந்தது!!கருப்பன் சொல்லியிருந்தால் இன்னொரு கருப்பன் அவனை காட்டுமிராண்டி என்கிறான்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக