தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜனவரி, 2014

தினமும் காணும் கடவுள்!


இந்துமதம் ஆறுபிரிவுகளாக இருந்த காலம் ஒன்று உண்டு. கணபதியை வழிபடுவோர் காணாபத்யம், சிவனை வழிபடுவோர் சைவம், விஷ்ணுவை வழிபடுவோர் வைணவம், சக்தியை வழிபடுவோர் சாக்தம், குமரனை வழிபடுவோர் கவுமாரம் எனப்பட்டனர். இந்தக் கடவுள்களின் வழிபாடு இன்று வரை நிலைத்து நிற்கிறது. ஆனால், சூரியனை வழிபடும் சவுமாரம் என்ற மதம் மட்டும் காலப்போக்கில் மறைந்து விட்டது. அதுவும் வடமாநிலங்களில் தான். தற்போது, பெயரளவுக்கு சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகம் சொல்லுதல் ஆகிய அளவோடு சூரிய வழிபாடு நிற்கிறது.


ஆனால், தமிழகத்திலும் கேரளாவிலும் மட்டும், சூரிய வழிபாட்டுக்கென தனிநாள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரியனின் வடதிசைப் பயணம் ஆரம்பமாகும் உத்தராயண காலத்தின் முதல்நாள் பொங்கல் பண்டிகையாக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில், இந்நாள் "மகர சங்கராந்தி'. அன்று ஒளி வடிவமாக சாஸ்தாவை மக்கள் வணங்குகின்றனர். சபரிமலையில் விசேஷ பூஜை நடக்கிறது.
மற்ற தெய்வங்களை நாம் சிலை வடிவிலேயே பார்க்கிறோம். ஆனால், சூரியன் கண்கண்ட தெய்வமாக தினமும் நம் கண்முன் தெரிகிறார். புராணங்களின்படி அவர் பெரிய பணக்காரர். ஆனால், இரக்க குணமுள்ளவர். யார் என்ன கேட்டாலும் கொடுக்கக்கூடியவர். "ஸ்யமந்தகம்' என்னும் மணியை அவர் மாலையாக அணிந்து இருந்தார். அந்த மணிமாலை இன்னொரு
சூரியனுக்கு ஒப்பானது. சூரியனின் அளவுக்கு ஒளி வீசக்கூடியது. அந்த மாலை யாரிடம் இருக்கிறதோ, அவருக்கு எட்டுப் பாரம் அளவுக்கு தங்கம் கிடைக்கும். அது மட்டுமல்ல! அதை அணிந்திருப்பவர் என்ன நினைக்கிறாரோ, அந்தப் பொருள் உடனடியாக கையில் கிடைத்து விடும். இப்படிப்பட்ட மாலையை இழக்க யாருக்காவது மனது கேட்குமா!


ஆனால், இதை துவாரகையில் வசித்த தனது பக்தரான சத்ராஜித்துக்கு அன்பளிப்பாக கொடுத்து விட்டார். அந்தளவுக்கு இரக்க மனமுள்ளவர்.' சூரியஒளியே உலகில் பயிர்பச்சை விளையக் காரணமாக இருக்கிறது. சூரியன் இல்லாவிட்டால் உலகம் இல்லை. ஒரு காலத்தில் மகான்கள், சூரிய ஒளியைப் பார்க்காவிட்டால், அன்றைய தினம் சாப்பிடவே மாட்டார்கள். தொடர்ந்து அடைமழை பெய்யும் காலங்களில் சூரிய உதயம் இருக்காது. அதுபோன்று இரண்டு, மூன்று மாதங்கள் வரை கூட அவர்கள் சாப்பிடாமல் இருந்து விடுவர்.


காந்திஜியின் தாயார் புத்லிபாயிடம் இந்தப் பழக்கம் உண்டு. அவர், சூரியன் உதயமாகாத நாட்களில் சாப்பிடமாட்டார். சிறுவனான
காந்திஜிக்கு அதைக்கண்டு வருத்தமாக இருக்கும். வாசலில் வந்து நின்றபடி, சூரிய வெளிச்சம் வெளியே தெரிகிறதா என்று
கவனித்துக் கொண்டே இருப்பார். திடீரென மேகங்கள் விலகி, லேசாக சூரிய கிரணங்கள் வெளியே தெரிந்ததும், வீட்டுக்குள் ஓடிப்போய் அம்மாவிடம் சொல்வார். அம்மாவும் வெளியே வந்து எட்டிப் பார்ப்பதற்குள், சூரியனை மீண்டும் மேகம் மறைத்து விடும். அந்த அம்மையார் சாப்பிடமாட்டார். இப்படி, இரண்டு மூன்று நாட்கள் வரை அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார்.


சூரியன் எளிமையானவர். அவருக்கு பிடித்த பூ "எருக்கு'. விநாயகருக்கும் இதே மலர் பிடிக்கும். உலக மக்களுக்கு தன்னாலான எல்லா பொருட்களையும் வழங்கிவிட்டு, தனக்கென யாரும் பயன்படுத்தாத எருக்கம்பூவை மாலையாக அணிந்து கொண்டவர்.
இதனால் அவரை "அர்க்கன்' என்று சொல்வர். "அர்க்கம்' என்றால் "எருக்கு'. அர்க்கன் என்றால், 'எருக்கு மாலை அணிந்தவர்' என்று பொருள்.


இதனால், தமிழகத்தின் ஒரே சூரியக்கோயிலான சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தல விருட்சமாக உள்ளது. சிவனும், அம்பாளும் சூரியனைத் தங்கள் கண்களாகக் கொண்டுள்ளனர் என்பர். ஒரு கண் சூரியன் மற்றொரு கண் சந்திரன். நெற்றிக்கண் அக்னி என்று வர்ணிக்கின்றனர். விஷ்ணுவையும் "சூரிய நாராயணர்' என்று சொல்வதுண்டு. அதிகாலையில் சூரியனைப் பார்க்காத
கண்கள் வீணே என்கின்றனர் மகான்கள். எனவே, தினமும் அதிகாலையில் எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்த பிறகு, நம் அன்றாடப்பணிகளைத் துவங்க வேண்டும். பொங்கல் திருநாளில் நாம் எடுக்க வேண்டிய உறுதிமொழி இது தான்!


அன்பு ஒன்றே வழியெனக் கொண்டு
அகிலம் முழுவதும் அமைதி வேண்டிடுவோம்.....!!
"அன்பினிய உள்ளங்கள் அனைத்திற்கும்
அன்புடன் கூடிய பொங்கல் வாழ்த்துக்கள்"
அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய வணக்கங்கள்`!!!
அன்புடன் vicknasai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக