தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 17, 2014

ஆடு இல்லை ஆடுவேன்..

இது ஒரு கதை ??! நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்....


ஆடு இல்லை ஆடுவேன்..

ஒரு விவசாயின் கண்காணிப்பில் வளர்ந்த ஆடு ஒன்று வழிதவறி அருகில் இருந்த காட்டுக்குள் நெடுந்தொலைவு சென்றுவிட்டது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைபசேலன தாவரங்களும்,புல் பூண்டுகளும் செழித்து கிடந்தன.ஆனால் ஆவலாய் உண்பதற்கான மனநிலையில் ஆடு இல்லை.பயத்தோடு பதறியபடி ஓடி ஓடி ஓய்ந்து போனதுதான் பலன்.

ஏற்கனவே பதறிபோன நெஞ்சை பதறவைக்கும் விதமாக புதருக்குள் இருந்து பாய்ந்து வந்தான் எமன் சிறுத்தை.திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத ஆடு நிலைகுலைந்துதான் போய்விட்டது.பாய்ந்தது கிழட்டு சிறுத்தை போல் கழுத்துக்கு வைத்த குறி தவறி போய் அருகில் இருந்த மரத்தில் முட்டிக்கொண்டது.இந்த சிலவினாடி புலியின் தடுமாற்றத்தை சாதகமாக்கி சிட்டாக பறந்தது ஆடு.ஓடியது ஓடியது மணிக்கணிக்கில் ஓடி சோர்ந்து விழுந்தது.உடலில் வலுவில்லாத நிலையில் மரணபயத்துடன் தன் சுயநினைவை இழந்துகொண்டிருந்தது ஆடு.

சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஆட்டின் எதிரே ஒரு கரிய உருவம் நின்று கொண்டிருந்தது.அது ஒரு காட்டாடு.கண்விழித்த ஆடு காட்டாடைப்பார்த்து அலறத் துவங்கியது.காட்டாடே கொஞ்சம் அரண்டுதான் போனது .இருந்தாலும் பொறுமையாக பயப்படாதே நண்பா நான் உன் இனம்தான்.உனக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் இங்கு நின்று கொண்டிருக்கிறேன்.

வேண்டாம் நீ எனக்கு உதவ வேண்டாம் இங்கிருந்து நகர்ந்தாலே போதும்.

நீ இந்த காட்டிற்கு புதியவன் என நினைக்கிறேன்.இந்த சூழ்நிலையில் என் உதவி கட்டாயம் உனக்கு தேவைப்படும்.

கொஞ்சம் யோசனையோடு காட்டாடை நோக்கியது கிராமத்து ஆடு.

குறிப்பறிந்த காட்டாடு பயப்படாமல் உன்னைப்பற்றிய விவரத்தை சொல் என்றது.

சிறிய தளர்வுடனான தயக்குத்துடன் தன் முழுக்கதையையும் சொல்லியது.

கதையை கேட்ட காட்டாடு உனக்கு நான் உதவுகிறேன்.அதற்கு முன்பு நான் சொல்வதைக் கேள்.இந்த இயற்கை அளப்பரிய வளங்களை நமக்கு கொடுத்திருக்கிறது.விதவிதமான உணவுகள், விருப்பமான பகுதிகளுச் செல்ல முழு சுதந்திரம் என எல்லாமே இங்கேதானே இருக்கிறது.அதனால் இங்கேயே இருந்து விடலாமே.

ஒருக்காலும் முடியாது.சற்று முன்னர் உன் காட்டில் நடந்த அனுபவமே போதும் என் வாழ்நாள் முழுமைக்கும் இந்த காட்டை வெறுக்க.அதனால் தயவுசெய்து என் கிராமத்துக்குச் செல்வதற்கான வழியை காட்டு என்றது.

காட்டாடு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் பலன் இல்லாததால் வெள்ளாட்டின் கிரமாத்திற்கு செல்வதற்கான வழியை தேட தீர்மானித்தது.

ஒரு வார தீவிர தேடலுக்குப் பிறகு இரு ஆடும் கிராமத்தை அடைந்தன.இந்த ஒரு வாரத்தில் நான்கு முறை நான்கு விதமான விலங்குகளின் தாக்குதலிலிருந்து இரண்டும் தப்பின.இதில் வெள்ளாட்டின் நிலைதான் பரிதாபத்துக்குரியது.

காட்டாடு கிராமத்து ஆட்டைப்பார்த்து கேட்டது.

ஆமா உன் கிராமம் இவ்வளவு வறண்டு காய்ந்து கிடக்கிறதே.இங்கு அதிகபட்சம் என்ன உணவு கிடைத்துவிடும்.என கேட்டது.

உணவை நான் தேடிப்போய் கிடைக்காமல் இருந்தாலும் என் முதலாளி எங்களுக்கான உணவை நாள்தோறும் சிறிதளவேனும் தருவார்.முதலாளியின் பாதுகாப்பில் உணவோடு பயமில்லாமல் இருக்கிறேன்.உன்னைப்போல் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே.அதனால் நீயும் என்னுடன் வந்துவிடு முதலாளி உன்னையும் ஏற்றுக்கொள்வார் என்றது.

காட்டாடு சிரித்து கொண்டே சொன்னது உன் முதலாளியின் அடிமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நீ சிரமபடவேண்டாம்.என் வழி வேற உன் வழி வேற அதனால நான் இப்போதே விடைப்பெற்றுக்கொள்கிறேன்.

சிறிது நேர நட்பு பாராட்டுதல்களோடு நன்றி நவிதல்களும் முடிந்து இரு ஆடுகளும் தங்கள் பகுதிக்கான பாதையில் நடக்கதுவங்கின.

சிறு நேரத்தில் வீட்டை அடைந்த ஆடு தன் மந்தையோடு ஒட்டிக்கொண்டது.

விசாரித்த சகாக்களுக்கு தன் அனுபவத்தை விவரிக்க ஆரம்பித்தது.

மறுநாள் காலை மந்தையை பார்வையிட்ட விவசாயியின் கண்ணில் நம் ஆடும் தென்பட்டது.திருடு போய்விட்டது என்று கருதிய ஆடு ஒரு வாரத்தில் திரும்ப வந்திருக்கிறது.அதுவும் கொஞ்சம் கொழுத்துபோய் வந்திருக்கிறது.விவசாயி இரட்டிப்பு மகிழ்சியோடு அன்றைய பொழுதை கழிக்கச் சென்றான்.

இப்படி இரண்டுநாள் கடந்திருக்கும் மந்தைக்கு வந்த விவசாயியோடு மூன்றுபேர் வந்திருந்தனர்.அவர் மூன்று நான்கு ஆடுகளை சுட்டிகாட்டி பேசியபடி இருந்தனர்.சிறிது நேரத்தில் கையில் கொண்டுவந்த கயிற்றால் மூன்று ஆடுகளை கட்டி இழுத்துச் சென்றனர்.அதில் நம் ஆடும் ஒன்று.

மூன்று ஆடுகளும் ஒரு நிகழ்ச்சியை சிறப்பிக்க இறுதியாக பயணிக்கிறார்கள் என்பது மட்டும் உறுதி.

இந்த கதையின் நீதி.

நம் வாழ்க்கையில் எடுக்கப்படும் முடிவுகள் நாம்தாம் எடுக்கவேண்டும்.அம்முடிவு தவறாக போய்விடினும் கூட இறுதிவரை போராடினால் நூலிளையில் தப்புவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

ஆனால்

நம் முடிவுகளை வேறொருவர் தீர்மானித்தால் எவ்வளவுதான் போராடினாலும் மீள்வதற்கு வாய்ப்பு மிகமிக குறைவு.ஏனென்றால் முடிவு நம்முடையதல்ல...

No comments:

Post a Comment