தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 13 ஜனவரி, 2014

இன்று பிரதோஷம் மற்றும் போகிப் பண்டிகை (13.01.2014)


போகி பண்டிகை நல்வாழ்த்துகள் ( பிளாஸ்டிக் பொருட்களை எரிக்காதீர்கள்)

லிங்கரூபமாய் எழுந்தருளியிருக்கும் முழுமுதல் இறைவன்,
சில திருத்தலங்களில் வித்தியாசமாகவும் திகழ்கிறார்.
பிருங்கி முனிவர் வண்டு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்டார். அதன் அடிப்படையில் வண்டு துளைத்த குறியுடனுள்ள சிவலிங்கத்தை திருநல்லூரில் காணலாம்.
நீடூர் திருத்தலத்தில் நண்டு ஒன்றும் அருள்சோமநாதரை வழிபட்டதால், இங்குள்ள சிவலிங்கத்தின் உச்சியில் நண்டு நுழையும் அளவிற்கு துளை உள்ளது. குடவாசல் தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணேசுவரரை கருடன் வழிபட்டார் அப்படி வழிபட்ட போது கருடனுடையை கால்சுவடுகள் லிங்கத்தின் மீது படிந்தது. அந்த அடையாளத்தை இன்றும் தரிசிக்கலாம்.
கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருந்துதேவன்குடி தலத்தில் குதிரையும் வண்டும் ஈசனை வழிபட்டு முக்தி அடைந்தன. அவற்றின் காலடிச் சுவடுகள் லிங்கத்தில் பதிந்திருப்பதைக் காணலாம். திருக்கொண்டீஸ்வரம் தலத்தில் சுயம்புலிங்கமாக பசுபதீஸ்வரர் அருள்புரிகிறார். இந்த லிங்கத்தை பசு வழிபட்டதால், பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவு காணப்படுகிறது.
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் லிங்கத் திருமேனியில், எமனின் பாசக்கயிறு பட்டதால் ஏற்பட்ட தழும்பு உள்ளது. ராமேஸ்வரத்தில் அருள்புரியும் ராமநாதர் லிங்கத்தை அனுமன் தன் வாலால் கட்டி இழுத்ததால், அனுமனின் வால்பட்ட தழும்பு லிங்கத்தில் பதிந்திருக்கிறது.
இதே போல் ஆந்திர மாநிலம் ராமகிரியில் உள்ள சிவன் கோவிலில் அருள்புரியும் லிங்கத்திலும் அனுமனின் வால்பட்ட தழும்பு உள்ளது. திருவிஜயமங்கைத் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீவிஜயநாதேஸ்வரர் லிங்கத்தில் அர்ஜுனனின் அம்புபட்ட
தழும்பு உள்ளதைக் காணலாம்.

வித்தியாசமான லிங்கங்கள் சில திருத்தலங்களில் காணப்படுவதுபோல புனிதமான நீரில் நனையும் சிவலிங்கங்களும் உள்ளன.
ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்கா ஆலயத்தில் அருள்புரியும் ஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கும். லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத்தான் தரிசிப்பார்கள்.

சீர்காழி திருக்காளமுடையார் கோவிலிலும் லிங்கம் தண்ணீரில் மூழ்கியிருப்பதைக் காணலாம். திருவேடகம் திருத்தலத்தில் மூலவர் லிங்கத்தின் முடியிலுள்ள பள்ளத்திலிருந்து தண்ணீர் ஊறி வெளிவந்து கொண்டிருக்கும்.

தஞ்சை பெரிய கோவில் மூலவர் பெரிய திருவுருவில் அருள்புரிகிறார். கருவறையைச் சுற்றி சந்திரகாந்தக் கற்கள் அமைந்திருப்பதால், கோடைக்காலத்தில் கருவறையின் உட்சுவர்களில் நீர்த்துளிகள் படிந்து, சிவலிங்கம் குளிர்ச்சியாக இருக்கும், மேலும், பெரிய கோயிலிலுள்ள சிவகங்கைத் தீர்த்தகுளத்தின் நடுவில் ஒரு லிங்கம் அமைந்துள்ளது. இந்த லிங்கம் தீர்த்தக்குளத்தில் மூழ்கியே இருக்கும். கடுமையான கோடைக்காலத்தில் நீர் வற்றும்போது மட்டும் லிங்கத்தை தரிசிக்கலாம்.

கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள கருவறையில் மேல்தளம் சந்திரகாந்தக் கற்களால் அமைந்துள்ளதால், எப்பொழுதும் சொட்டுச் சொட்டாக நீர்த்துளிகள் சிவலிங்கத்தின்மீது விழுந்த வண்ணம் உள்ளது.
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மூலவரின் திருவடியில் தேவதீர்த்த நீர் எப்போதும் சுரந்து கொண்டிருக்கும். இந்த நீர் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

சிவலிங்கங்களில் பலவிதங்கள் உள்ளது போல், பாணப்பகுதியில் பட்டைகள் அமைந்துள்ள சிவலிங்கங்களையும் சில திருத்தலங்களில் தரிசிக்கலாம். அவை தாராலிங்கம் என்று கூறப்படுகின்றன. காஞ்சி கைலாசநாதர் கோவில், மாமல்லபுரத்தில் உள்ள கற்கோவில்கள்,

தென்னாற்காடு மாவட்டம் பனைமலையில் உள்ள சிவன் கோயில், பொன்பரப்பி சிவன் கோயில், திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் போன்ற ஆலயங்களின் வளாகத்திலும் தாராலிங்கங்கள் உள்ளன. தாராலிங்கங்கள் ஐந்து வகைப்படும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. 4,8,16,32,64 என்ற விகிதத்தில் பட்டைகள் அதாவது தாரைகள் அமைத்திருப்பார்கள். நான்கு பட்டைகள் கொண்ட லிங்கங்களை வேதலிங்கம் என்று போற்றுவர், சக்கரப்பள்ளி என்ற பாடல் பெற்ற திருத்தலத்தில் மூலவர் நான்கு பட்டை லிங்கமாகத் திகழ்கிறார் கோவை காரமடை ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் நாற்பட்டை லிங்கமாகத் திகழ்கிறார். பொதுவாக, நான்கு பட்டைகள் கொண்ட லிங்கத்தை சர்வதோபத்ர தாரா லிங்கம் என்பர். எண் பட்டைகளைக் கொண்ட அஷ்டதாரா லிங்கம் காஞ்சி கைலாச நாதர் கோயிலிலும் காணப்படுகிறது. இதன் எட்டுப் பட்டைகளும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகியவற்றைக் குறிக்கும் என்பர். மேலும் எட்டு பைரவ சக்திகளையும், இறைவனின் அஷ்ட வீரச் செயல்களையும் குறிப்பன என்பர் சிதம்பரம் நவலிங்க சந்நிதியிலும் எட்டு திசைலிங்கங்கள் உள்ளன. இவை அஷ்டதாரா லிங்கங்களாகும். பதினாறு பட்டைகள் உடைய லிங்கம் சோடச தாராலிங்கம் எனப்படும். இந்த லிங்கத்தை சந்திரகலா லிங்கம் என்றும் சொல்வர். இவ்வகை லிங்கங்கள் குளிர்ச்சியான கல்லில் உருவானவையாகும். பெரும்பாலும் சந்திரக்காந்தக் கல்லில் உருவானதாக இருக்கும். சிதம்பரம் நவலிங்க சந்நிதியின் மையத்திலும், பழையாறை மேற்றளியிலும், பொன்பரப்பி தலத்திலும் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் வளாகத்தில் உள்ள கோயிலிலும் சோடச தாராலிங்கம் உள்ளது. முப்பத்திரண்டு பட்டைகளுடன் காட்சி தரும் லிங்கத்தை தர்மதாரா லிங்கம் என்பர். காஞ்சியம்பதியில் 32 பட்டைகள் கொண்ட லிங்கத்தை தரிசக்கலாம்.64 பட்டைகளுடன் திகழும் அபூர்வ லிங்கத் திருவுரு கலைகள், சிவபெருமானின் 64 லீலா விநோதங்கள், 64 யோகியர்களைக் குறிக்கும் என்பர். இவ்வகை லிங்கத்தை காஞ்சியம்பதியில் தரிசிக்கலாம். மேலும் அறுபத்து நான்கு பட்டைகள் கொண்ட லிங்கம் பைரவரையும் குறிப்பதாக ஆகமங்கள் கூறுகின்றன. பொதுவாக தாரா லிங்கங்களை வழிபடுவதால், இறைவனின் பூரண அருள் கிட்டுவதுடன் சிவபதம் கிட்டும் என்றும் சொல்வர். எனவே இதை சாயுஜ்ய லிங்கம் என்றும் போற்றுவர். இந்தத் தாராலிங்கத்தின் மேல் தாராபாத்திரம் மூலமாக அபிஷேகம் செய்யும்போது, அபிஷேக நீர் தாரைகளின் வழியே பிரிந்து செல்லும் காட்சியை தரிசிப்பதால் பரம்பொருளின் முழுமையான அருளைப் பெற்று வளமுடன் வாழலாம் என்பர். 

 சாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக