தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 டிசம்பர், 2013

இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம்: நெஞ்சை அதிரவைக்கும் தகவல்!


இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர்  இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். 

அந்த சோகச்சுவடுகள் ஏற்பட்டு இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் இங்குள்ள ஏசஹ் மாகாணத்தின் சுமத்ரா தீவின் ஒரு பகுதியில் குகை ஒன்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குகையை ஆராய்ச்சி செய்தபோது, 7500 ஆண்டுகளுக்கு முன் சுனாமி ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். 

பாண்டா ஏசஹ் கடற்கரை அருகே உள்ள 3 மீட்டர் ஆழம் கொண்ட இச்சுண்ணாம்பு குகை புயலால் பாதிக்கப்படாதவாறு பாதுகாப்பாக உள்ளது. பேரலைகள் மட்டுமே இக்குகைக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது.

1000 ஆண்டுகளுக்கு முன் உள்ள மணற் படிவங்களை, மட்டைகளை அடுக்கி வைத்தது போன்று கேக் வடிவில் இக்குகை காணப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். குகையிலுள்ள மணற்படிவங்கள், சிப்பி ஓடுகள், எஞ்சியுள்ள நுண்ணிய உயிரினங்களின் மாதிரியை சேகரித்து கதிரியக்கக் கரிம ஆய்வு செய்ததில், 2004க்கு முன் 11 சுனாமி ஏற்பட்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

2800 ஆண்டுகளுக்கு முன் பேரழிவு ஏற்படுத்திய சுனாமி தாக்கியதாகவும், சென்ற 500 ஆண்டுகளில் 4 சுனாமிகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். 1393 மற்றும் 1450 ஆம் ஆண்டுகளில் மிகப்பெரிய அசுர பூகம்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உறுதியாக கூறியுள்ளனர். எவ்வளவு உயரமான சுனாமி அலைகள் குகையை தாக்கியுள்ளன என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

பல நூற்றாண்டுகளாக சுனாமியின் தாக்கம் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருப்பதால், கோடிக்கணக்கான மக்கள்  பலியாகியிருக்கலாம் என்ற யூகங்களுக்கு இடம் உள்ளது.

இந்த ஆய்வு பற்றி ஆராய்ச்சியாளர் ரூபின் கூறும்போது, “2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்டதால் இன்னும் 500 வருடங்களுக்கு சுனாமி வர வாய்ப்பில்லை என உறுதியாக கூற முடியாது, உடனடியாக பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறமுடியாது” என்றார்.

500 வருடங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டதை உணர்ந்தவர்கள் யாரும் இல்லாததால் 2004 ஆம் ஆண்டு பேரிழப்பை சந்திக்க நேர்ந்ததாகவும், ஆனால் 2004-க்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் சுனாமி ஏற்படப்போகும் வாய்ப்பை முன்னதாக அறிந்து கொள்ள முடியும், என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கதிரியக்கக்கரிம ஆய்வு செய்ததில் எவ்வளவு அதிர்வெண் கொண்ட பூகம்பங்கள் இதற்கு முன் ஏற்பட்டது என்பதை அறிய முடிந்ததென்றும், ஆனால் சுனாமியின் அளவை அறியமுடியவில்லை என்றும் மற்றொரு ஆராய்ச்சியாளர் கேத்ரின் மொனெக்கெ தெரிவித்துள்ளார்.

இவ்வாராய்ச்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் குரூப் என்ற ஆராய்ச்சி குழுமத்தின் தலைவரான புவியியல் வல்லுனர் கெர்ரி சீஹ் கூறுகையில், “இன்னும் பல பத்தாண்டுகளில் அசுர பலம் கொண்ட நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் எப்போது பூகம்பம்  ஏற்படும் என்பதை உறுதியாக கூறமுடியாது. அதே சமயத்தில் சுனாமியால் பாதிப்பு ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்துக்கொள்ள நல்ல வாய்ப்புள்ளது” என்றார்.
http://www.maalaimalar.com/2013/12/26002708/Indonesias-massive-earthquake.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக