தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

சித்திரகவி !


அணியிலக்கணம் – தொடர்- 71
*****************************************
“தண்டியலங்காரம்” – ஓர் அறிமுகம்
****************************************

சொல்லணியியல் – சித்திரகவி - 3
*********************************
*****************
(5) நாகபந்தம்
*****************
இது இரண்டு பாம்புகள் இணையும் அமைப்பில் பாடப்படுவதாகும்.
இது வெண்பா யாப்பில் அமைக்கப் பெறவேண்டும்.
அறம் உரைப்பதாக அமைய வேண்டும்.

ஒரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு சொல்லின்
முடிவில் உள்ள எழுத்தும்,
மற்றொரு பாடலில் இடம் பெறும் ஒவ்வொரு
சொல்லின் முடிவில் உள்ள எழுத்தும்
ஒன்றாக இருக்கும் அமைப்பில் பாடுவது இக்கவியாகும்.

(6) வினாவுத்தரம்
*****************
செய்யுளில், சில வினாக்களைக் கேட்டு, அவ்வினாக்கள்
வாயிலாகப் பதிலைப் பெற்று, அப்பதில்களின் ஒன்றிணைந்த
சேர்க்கையால் ஒரு சொல்லைப் பெறுவது என்ற முறைமை
இக்கவியாகும்.

எடுத்துக் காட்டு
*****************
“பூமகள்யார்? போவானை ஏவுவான் ஏதுஉரைக்கும்?
நாமம் பொருசரத்திற்கு ஏதென்பார்? - தாம்அழகின்
பேரென்? பிறைசூடும் பெம்மான் உவந்துறையும்
சேர்வென்? திருவேகம் பம்"

இதனுள் பூமகள் யார் – “திரு” எனவும்;
போவானை ஏவுவான் ஏதுரைக்கும்? – “ஏகு” எனவும்;
நாமம் பொருசரத்திற்கு ஏது என்பர்? – “அம்பு” எனவும்;
அழகின் பேர் என்? – “அம்” எனவும்
கூட்டித் “திருவேகம்பம்” எனக் கண்டு கொள்க.

அதுவே “திருவேகம்பம்” என்னும் ஊராகும்.

(7) காதைகரப்பு
*****************
ஒரு செய்யுளில் தொடக்கமாக அமையும் முதல் எழுத்தை
விட்டு விட வேண்டும்.

அடுத்த எழுத்து அதாவது இரண்டாம் எழுத்தை
எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மூன்றாம் எழுத்தை விட்டுவிட வேண்டும்.
நான்காம் எழுத்தை எடுத்துக் கொள்ளவேண்டு

இவ்வாறாக ஓர் எழுத்து விட்டு ஓர் எழுத்து என்ற அமைப்பில் சேர்க்க, சேர்க்கப் பெற்ற எழுத்து கடைசிச் சொல்லிற்கு முன் உள்ள எழுத்துத்
தொடங்கி, முதலடி வரை தலைகீழாகப் படித்தால் ஒரு
புதுப்பாடலாக அமைவது இவ்வகைச் சித்திரகவியாகும்.

(காதை = சொல், கவிதை; காப்பு = மறைவு)

(8) கரந்துறைச்செய்யுள்
*************************
ஒரு செய்யுளில் உள்ள எழுத்துகளில் இருந்து சில
எழுத்துகளைத் தேர்ந்து கொண்டு, மற்றொரு செய்யுளை
அமைத்துக் கொள்வது என்பது கரந்துறைப்பாட்டு என்னும்
சித்திரகவியாகும்.

(கரந்து = மறைந்து; உறை = இருத்தல்; பாட்டு = செய்யுள்)

காதைகரப்பிற்கும் கரந்துறைச் செய்யுளுக்கும் உள்ள வேறுபாடு யாதெனில், இவ்விரண்டின் கண்ணும் பிறிதொரு செய்யுட்கேற்ற எழுத்துக்கள் மறைந்து கிடக்கும் வகையில் ஒப்புமையிருப்பினும், முன்னையது இறுதிச் சொல்லை ஒழித்து, அதற்கடுத்துள்ள எழுத்துக்களிலிருந்து ஒவ்வோரெழுத்தினை இடையிட்டு எடுத்துக் கொள்ளப் பிறிதொரு செய்யுள் தோன்றுவதாகும்.

ஆனால் கரந்துறைச் செய்யுளில் பாட்டின் முதற்கண் இருந்தே எவ்வித வரையறையுமின்றி எழுத்துக்களைப் பொறுக்கிக் கோக்கப் பிறிதொரு செய்யுளாய்த் தோன்றுவதாகும்.

(9) சக்கரம்
***********
சக்கர வடிவில், ஏதேனும் ஒரு சுழற்சி முறையில் பாடலை
அமைப்பது சக்கர பந்தம் என்னும் சித்திரகவியாகும்.

இது நான்காரைச் சக்கரம், ஆறாரைச் சக்கரம், எட்டாரைச் சக்கரம்
என மூன்றுவகைப்படும்.

(10) சுழிகுளம்
***************
சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும்.
இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும்.

ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும்.

இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய
வேண்டும்.

எடுத்துக் காட்டு
***************
“கவிமுதி யார் பாவே
விலையரு மாநற்பா
முயல்வ துறுநர்
திருவழிந்து மாயா”

பாடல் பொருள் :
*******************
வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும்.

அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும்.
அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும்

(11) சருப்பதோபத்திரம்
************************
இதுவும் பாடலுக்கு நான்கு வரிகள்., வரிக்கு எட்டு எழுத்துகள்
என்ற அமைப்பினது.

கீழ் மேல், மேல் கீழ், முன் பின், பின் முன்
எப்படிப் படித்தாலும் அதே செய்யுள் வருமாறு அமைக்க
வேண்டும்.

இவ்வமைப்பே சருப்பதோ பத்திரம் எனப்படும்.

(12) அக்கரச்சுதகம்
*******************
ஒரு செய்யுளில் பல பொருள்கள் கூறப் பெற்றிருப்பதாகக்
கொள்வோம்.

அதனைப் பெறப் படிப்படியாக ஒரு சொல்லில் உள்ள எழுத்துகளைக் குறைத்துப் பொருள்களைப் பெறுவது இவ்வகைச் சித்திர கவியாகும்.

(அக்கரம் = அட்சரம் ; சுதகம் = நீக்கம்)

எடுத்துக்காட்டு
*******************
இலைகளுள் சிறந்தது = தலைவாழை
தலைவரை விளிப்பது = தலைவா
உறுப்பினுள் சிறந்தது = தலை

என்ற உரைநடை எடுத்துக்காட்டுக் கொண்டு இதனை விளங்கிக்
கொள்ளலாம்.

மேலும் பல வகைச் சித்திரகவிகளை தண்டியலார் இனம் காட்டுகிறார்.
இருந்தபோது அவை பெரும்பாலும் வழக்கொழிந்து போயின என்பதனால்
அவற்றின் பெயர்களை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.

விரிவினை இங்கு தவிர்த்துக் கொள்ளுகிறேன்.

(13) நிரோட்டம்
(14) ஒற்றுப்பெயர்த்தல்
(15) மாத்திரைச் சுருக்கம்
(16) மாத்திரை வருத்தனம்
(17) முரசபந்தம்
(18) திரிபாகி
(19) திரிபங்கி
(20) பிறிதுபடுபாட்டு

சித்திரகவி முற்றிற்று.



*********************
ஸ்ரீ ஸ்ரீஸ்கந்தராஜா
28/09/2013

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக