தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

பட்டினத்தார் தன் அன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை:


ஐயிரண்டு திங்களாய் அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து எடுத்துச் - செய்ய இரு
கைப்புறத்தல் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் சுமந்தே
அந்திபகலாச் சிவனை ஆதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்.
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்.
நொந்து சுமந்து பெற்று நோவாமல்ஏந்தி முலை
தந்து வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோ
மெய்யில் தீமூட்டு வேன்.
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் - உருசி உள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ
மகனே என அழைத்த வய்க்கு.
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே என அழைத்த வய்க்கு.
விருத்தம்:
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.
வெண்பா:
வேகுதே தீ அதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை.
வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்த்தமும்
உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்து
என்தன்னையே ஈன்று எடுத்த தாய்.
வீற்றிருந் தாள் அன்னைவீதி தனில் இருந்தாள்
நேற்று இருந்தாள் இன்று வெந்துநீறு ஆனாள்- பால் தெளிக்க
எல்லாரும் வாருங்கள் ஏது என்றுஇரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக